Pandian stores serial : ஜுன் மாதத்துடன் நிறைவடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை : விஜய் டிவியின் முக்கியமான தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் சகோதரர்களின் பாசத்தை கதைக்களமாக கொண்டு அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வந்தது.
இந்நிலையில் இந்தத் தொடரின் முக்கியமான ட்விஸ்டாக, ஜீவா மற்றும் கண்ணன் ஆகியோர் மீனாவின் தங்கை திருமணத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் இந்தத் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்
விஜய் டிவியின் முக்கியமான தொடராக மாறியுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 4 சகோதரர்கள் மற்றும் அவரது மனைவிகள், குழந்தைகள் என குடும்ப ஒற்றுமையை கதைக்களமாக கொண்டே, ஆண்டுக்கணக்கில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அடுத்தடுத்த பிரச்சினைகள், அதை குடும்பத்தினர் ஒற்றுமையுடன் எதிர்கொண்ட பாங்கு உள்ளிட்டவை இந்தத் தொடரின் பலமாக அமைந்தது. யாருடைய சூழ்ச்சிக்கும் இவர்கள் தங்களது ஒற்றுமையை விட்டுக் கொடுக்காமல் இருந்தனர்.

பிரிந்த சகோதரர்கள்
இந்நிலையில் தற்போது மீனாவின் தங்கையின் திருமணத்தில் மொய் வைப்பது தொடர்பாக எழுந்த பிரச்சினையில் ஜீவா, கண்ணன் என அடுத்தடுத்த சகோதரர்கள் வீட்டை விட்டு வெளியேற, மூத்த அண்ணன் மூர்த்தி மற்றும் கதிர் இருவரும் தற்போது ஒன்றாக உள்ளனர். முன்னதாக கதிர், சில பிரச்சினைகள் காரணமாக வீட்டை விட்டு வெளியேறும் சூழல் அமைந்த நிலையில், தற்போது அவர் அண்ணனுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்.

கிடைக்க வேண்டிய மரியாதை
என்னதான் அண்ணன் -தம்பிகளாகவே இருந்தாலும் திருமணம், குழந்தைகள் என்று ஆனதற்கு பின்னால் அவர்களுக்கு என்று தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் நிதிச்சூழல் ஆகியவை இருக்க வேண்டும் என்பதையே ஜீவாவின் பிரிவு மற்றவர்களுக்கு உணர்த்தி வருகிறது. இதேபோல தன்னுடைய தம்பியாகவே இருந்தாலும், திருமணமான சூழலில் அவனுக்கான மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதையும் கண்ணனின் பிரிவு காட்டுகிறது.

ஜூன் மாதத்துடன் நிறைவு?
இதையெல்லாம் மனதில் கொள்ளாமல், தன்னுடைய தம்பிகளுடன் எப்போதும்போல இருந்த மூர்த்தி, தற்போது, தம்பிகள் இல்லாமல் அநாதையாக்கப்பட்டுள்ளார். ஜீவாவை சமாதானம் செய்யும் தனத்தின் முயற்சிகளும் வீணாகியுள்ளது. இந்நிலையில் நீண்ட நாட்களாக தன்னுடைய ஒளிபரப்பை செய்துவரும் இந்தத் தொடர் வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் அதிகமாக இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மையை உணர்வாரா ஜீவா?
மற்ற மொழிகளில் இந்தத் தொடர் ரீமேக் செய்யப்பட்டு, தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழில் மட்டும் இன்னும் சிறப்பாக ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்நிலையில் இந்தத் தொடர் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருந்து பிரிந்து தன்னுடைய மாமனார் வீட்டில் இருக்கும் ஜீவா, அவரது உண்மை முகத்தை உணர்ந்து மீண்டும் அண்ணனுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கதை முடிவு எப்படி இருக்கும்?
இந்நிலையில் சபையில் வைத்து தன்னுடைய அண்ணன் தன்னை அடித்ததில் அவமானப்பட்டாலும், அவர் தன்னை உள்ளங்கையில் வைத்து தாங்கியதை நினைவில் கொண்டு, மீண்டும் அண்ணனுடன் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இவர்கள் அனைவரும் சேர்ந்து வீடு கட்ட திட்டமிட்டு வரும் நிலையில், அனைவரும் புதிய வீட்டில் இணைவதாக கதை முடிவுக்கு கொண்டுவரப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











