“ஈருடல் ஓர் உயிர்” சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் அருணா.. வாழ்க்கையின் புதிய அத்தியாயம் தொடக்கம்!
சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வரலாற்றில் முக்கியமான மைல்கல்லை பதித்தவர் அருணா ரவீந்திரன். கடந்த 8 சீசன்களாக ஆண் போட்டியாளர்கள் மட்டுமே டைட்டிலை கைப்பற்றிய நிலையில், 9வது சீசனில் கலந்து கொண்டு தனது தனித்துவமான குரலாலும், உறுதியான முயற்சியாலும் வெற்றியை தட்டிச் சென்றார். இதன் மூலம், இந்த நிகழ்ச்சியில் பட்டம் வென்ற முதல் பெண் போட்டியாளர் என்ற பெருமையையும் பெற்றார்.
சிறு வயதிலேயே இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அருணா, 3 வயதிலிருந்தே பாடல்களைப் பயிற்சி செய்து வந்தார். குடும்பத்தின் ஆதரவும், தன்னம்பிக்கையும் சேர்ந்து, அவரை மேடைகளில் திகழச் செய்தது. படிப்படியாக வளர்ந்த அவரது இசைப் பயணம், விஜய் டி.வி.யின் சூப்பர் சிங்கர் சீசன் 9 மூலம் உச்சிக்குத் தள்ளப்பட்டது. அந்த மேடையில் அவர் காட்டிய குரல் திறன், ராகங்களை கையாளும் திறமை, உணர்ச்சி வெளிப்பாடு ஆகியவை பார்வையாளர்களையும், நடுவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சூப்பர் சிங்கர் பாடகி: இறுதிப்போட்டியில் அவர் வழங்கிய மெய்மறக்கச் செய்த பாடல், அவருக்கு வெற்றியை மட்டும் அல்லாது ரசிகர்களின் இதயத்தையும் வெல்ல உதவியது. இந்த வெற்றிக்காக ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும், சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள வீடும் வழங்கப்பட்டது. இது அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, தனது சகோதரி அகிலா ரவீந்திரனுடன் இணைந்து பக்திப் பாடல்களைப் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த கூட்டணி, யூடியூப் மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், சில திரைப்படங்களிலும் அருணா தனது குரலை வழங்கி, பின்னணி பாடகியாகவும் தனது இடத்தை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
மகிழ்ச்சியான செய்தி: இந்நிலையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் புதிய அத்தியாயம் தொடங்க உள்ளது. சமீபத்தில் மஸ்வந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தற்போது, திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை, ஏப்ரல் 12ஆம் தேதி, இருவரும் திருமண பந்தத்தில் இணைகிறார்கள். இதை முன்னிட்டு, "ஈருடல் ஓர் உயிர்... ஒன்றினையும் நாளை" என்ற உணர்ச்சிப்பூர்வமான பதிவை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த பதிவை கண்ட ரசிகர்கள், நண்பர்கள், பிரபலங்கள் என பலரும் அருணாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இசை உலகில் சாதனை புரிந்த அருணா, இனி தனது வாழ்க்கையின் புதிய பயணத்திலும் வெற்றிகளை தொடர வேண்டுமென வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











