விஜய் டிவியின் தாயுமானவன்…. ஒரு தந்தையின் தாலாட்டு
மதியழகன் என்ற தந்தைக்கும் 5 பெண்களுக்குமான பாசப்பிணைப்புதான் தாயுமானவன். தாய் இல்லாமல் தந்தை வளர்க்கும் குழந்தைகள் பற்றிய கதைகள் நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால் இது நிஜமாகவே கொஞ்சம் வித்தியாசமான கதைதான்.
பெண்குழந்தைகளுக்கு பிடித்த விசயங்களை பார்த்து பார்த்து செய்யும் தந்தை... திருமண வயதை எட்டிய உடன் தனக்கு பிடித்தமானதை பிள்ளைகள் செய்யும் போது மனதொடிந்து போகிறார்.
தன்னுடைய கருத்தை பிள்ளைகள் ஏற்று நடக்கவேண்டும் என்று எல்லா தந்தையும் நினைப்பது இயல்பானதுதான். ஆனால் எல்லா பிள்ளைகளும் தந்தையின் கருத்துக்கு ஒத்துப் போகிறவர்கள் இல்லை என்பதை கொஞ்சம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது தாயுமானவன்.

5 பெண் குழந்தைகள்
ஹோட்டல் அதிபர் மதியழகனின் அழகான மனைவி சௌந்தர்யா, நோயின் தீவிரத்தில் தன்னுடைய குழந்தைகளையும், கணவரையும் விட்டுவிட்டு மரணிக்கவே, குழந்தைகளை வளர்த்து ஆளாக்குகிறார்.

மகாவிற்கு கல்யாணம்
மூத்த பெண் மகா இரண்டாமவள் சுபா, அடுத்ததாக இந்திரா, ஜனனி என குழந்தைகள் வளர்ந்து நிற்கின்றனர். தொழிலில் உதவி செய்யும் நண்பரின் மகனுக்கு மகாவை பெண் கேட்கின்றனர்.

சுபாவின் காதல்
இரண்டாவது பெண் சுபாவிற்கு அசோக்கின் மீது காதல். தன்னுடைய காதலை அப்பாவிடம் தைரியமாக சொல்லி அவனை அறிமுகம் செய்து வைக்கிறாள். ஆனால் அசோக்கின் நடவடிக்கையினால் மதியழகனுக்கு அவனை பிடிக்காமலேயே போகிறது.

கவிதையான தருணங்கள்!
மகாவைப் பெண் பார்க்க வரும் முன்னதாகவே மாப்பிள்ளையைப் பார்த்து பேச மகாவை அழைத்துப் போகிறார் மதியழகன். இது கொஞ்சம் புதுசுதான். மகாவிற்கு மாப்பிள்ளை பிடித்துப்போகவே அதை அப்பா தெரிந்து கொள்ளும் இடம் கொஞ்சம் கவிதைதான். நல்ல விசயம் பேசுறதுக்கு முன்னாடி ஸ்வீட் கொடுக்கணும் அப்படிங்கிற மாதிரி.

திருமணத்தில் சிக்கல்
மகாவைப் பெண் பார்க்க வரும் நாளில் சுபா திருமணம் செய்து கொண்டுவந்து நிற்கவே, மாப்பிள்ளை வீட்டார் அதிர்ச்சியடைகின்றனர். மகா திருமணம் நின்று போகிறது. தொழில் பார்ட்னராக இருந்தும் தானாக பெண் கேட்டு, இப்போது வேண்டாம் என்று சொல்லவே அதை மகளிடம் எப்படி சொல்வது என்ற தவிப்பு மதியழகனுக்கு ஏற்படுகிறது. அதை மகாவே சமாளிக்கிறாள்.

ஜனனியின் குற்றச்சாட்டு
5 குழந்தைகளில் ஜனனிக்குதான் அப்பாவைப் பிடிக்காது. அதனால் ஏட்டிக்குப் போட்டிதான். தன் அம்மாவின் மரணத்திற்கு காரணம் அப்பாதான் என்று குற்றம் சாட்டுகிறாள் ஜனனி. வேலை, பிஸினஸ் என்று அலைந்து கடைசியில் மனைவியின் நோயைக்கூட சரியாக கவனிக்க முடியாமல் அவளின் மரணத்திற்கு காரணமாகிவிட்டோமே என்ற குற்ற உணர்வு மதியழகனை கொல்கிறது.

இந்திரா தத்துப்பிள்ளையா?
ஒரு குழந்தை தத்துத்குழந்தை என்பது மற்ற நான்கு பேருக்கு தெரியாது. இவர்களில் இந்திராவின் பாசம் அலாதியானது. ஆனால் தான் மதியழகன் பெற்ற பிள்ளையில்லை தத்துப்பிள்ளை என்ற உண்மை தெரியவருமா?

ராஜசேகர்-குயிலி
சரவணன் -மீனாட்சி தொடரில் கணவன் மனைவியாக வரும் ராஜசேகர், குயிலி தம்பதியர் இதில் அப்படியே அதே கதாபாத்திரத்தில் தொடர்கின்றனர். குயிலி கொடுத்த ஐடியாதான் சுபாவை திருமணம் வரை தூண்டிவிட்டது. கடைசியில் குயிலியே சுபாவை அவளுடைய அப்பாவுடன் சமாதானம் செய்ய முயற்சிக்கிறாள்.

மகா திருமணம் நடக்குமா?
சுபாவால் நின்று போன மகாவின் திருமணம் நடக்குமா? மகள் சுபா மீது மதியழகனுக்கு இருக்கும் கோபம் போகுமா? அப்பாவை ஜனனி புரிந்து கொள்வாளா? என்ற கேள்விகளுடன் நகர்கிறது தாயுமானவன்.


Click it and Unblock the Notifications











