Sangamam episode: ராஜியை திருமணம் செய்ய முடியாது.. கதிர் உறுதி.. காலில் விழுந்து கதறும் கோமதி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர்கள் சங்கமம் எபிசோட்களை அடுத்தடுத்து பரபரப்பாக ஒளிபரப்பி வருகின்றன. இந்த தொடர்களில் முக்கியமான கதைக்களங்களை எடுத்துக் கொண்டு இரு சீரியல்களையும் சீரியல் தரப்பினர் தற்போது ஒன்றிணைத்துள்ளனர். கோமதி மற்றும் பாக்கியாவின் திடீர் நட்பு மிகவும் அழுத்தமாக காட்டப்பட்டுள்ளது. இதேபோல அமிர்தா -மீனா, கதிர் எழில் நட்பும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுடன் செல்வியும் இணைந்துக் கொள்ள, தற்போது சங்கமம் எபிசோட்கள் வெகுசிறப்பாக களைகட்டி வருகிறது.
அமைச்சரின் சிபாரிசில் கிடைத்த மாநாடு சமையல் கான்டிராக்டை பாக்கியா சிறப்பாக முடிக்கிறார். இதற்கு கோமதியும் சிறப்பாக கைக்கொடுக்கிறார். அவரது சப்போர்ட்டில் இந்த கான்டிராக்டை சிரமமில்லாமல் முடிக்கிறார் பாக்கியா. ஆனால் பதிலுக்கு கோமதிக்கு அவர் கொடுத்துவரும் சப்போர்ட் அதைவிட சிறப்பாக காணப்படுகிறது. கோமதியின் அண்ணன் மகள் வீட்டை விட்டு காதலனுடன் ஓடி வர, பாக்கியா, கோமதி தங்கும் ஹோட்டலிலேயே அவரும் தங்குகிறார். இதையடுத்து அவரை காணாமல் கதிகலங்கிப்போய் இருக்கும் கோமதிக்கு நெஞ்சில் பால் வார்ப்பது போல, அண்ணன் மகளை கண்டுபிடிக்க உதவுகிறார் பாக்கியா.

சங்கமம் எபிசோட்கள்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களான பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்களின் சங்கமம் எபிசோட்கள் தற்போது நிகழ்ந்து வருகின்றன. முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் சீசனிலும் பாக்கியலட்சுமி சங்கமம் நிகழ்ந்த நிலையில் தற்போது இரண்டாவது சிசனிலும் அது தொடர்கிறது. பாக்கியா அமைச்சர் சிபாரிசில் தனக்கு கிடைத்த மாநாடு சமையல் கான்டிராக்டிற்காக திருச்செந்தூர் வர, அங்கே சாமி கும்பிட தன்னுடைய மகன் மற்றும் மருமகளுடன் கோமதியும் வருகிறார். இதையடுத்து அவரது அண்ணன் மகள் ராஜி திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் வீட்டை விட்டு காதலனுடன் ஓடிப்போனது தெரியவருகிறது.
முழி பிதுங்கும் கோமதி: 28 வருடங்களுக்கு முன்பு தான் அறியாமல் செய்த தவறை தற்போது தன்னுடைய அண்ணன் மகள் ராஜியும் செய்ததை நினைத்து கதி கலங்குகிறார் கோமதி. மேலும் இதனால் அவமானம் தாங்காமல் தன்னுடைய அண்ணன் முத்துவேலும் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் அவருக்கு இடியாக விழுகிறது. இதனால் மனம் வெறுத்து ஊருக்கு திரும்ப முற்படும் நிலையில், பாக்கியா மூலம் தன்னுடைய அண்ணன் மகள் அந்த இடத்தில்தான் இருக்கிறார் என்பதை அறிகிறார். இதையடுத்து அவரை திட்டி, அடித்து தன்னுடைய ஆத்திரத்தை தீர்த்துக் கொள்கிறார். மேலும் தன்னுடைய அண்ணன்களிடம் அவளை மீண்டும் எப்படி கொண்டு சேர்ப்பது என்பது தெரியாமல் முழி பிதுங்குகிறார்.
கோமதியின் அதிரடி முடிவு: இதனிடையே தன்னுடைய மகன் கதிருக்கு ராஜியை திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். இந்த முடிவிற்கு பாக்கியாவின் சப்போர்ட்டையும் கேட்கிறார். மிகந்த யோசனைக்கு பிறகு பாக்கியாவும் இதற்கு சம்மதம் தெரிவிக்கிறார். தொடர்ந்து தன்னுடைய மகன் கதிரிடம் இதுகுறித்து சம்மதம் கேட்கிறார் கோமதி. கதிருக்கு ராஜியை கண்டாலே ஆகாது என்ற நிலையில் அவர் இதை மறுக்கிறார். மேலும் தான் படித்து வருவதாகவும் தற்போது எப்படி திருமணம் செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்புகிறார். தன்னுடைய அண்ணன் சரவணன் திருமணம் ஆகாமல் இருக்கும்போது தான் எப்படி திருமணம் செய்துக் கொள்வது என்றும் கேட்கிறார்.
கதிர் -ராஜி திருமணம்: இதனிடையே, ராஜியின் வாழ்க்கைக்காக கதிர் எப்படி தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்ய முடியும் என்று மீனாவும் ஒருபுறம் கேள்வி எழுப்புகிறார். அவர்கள் இருவரின் கேள்விகளிலும் அர்த்தம் இருப்பதாக கூறும் கோமதி, ராஜியின் வாழ்க்கை மற்றும் தன்னுடைய அண்ணன்களின் கௌரவத்திற்கு முன்பு தன்னால் வேறு முடிவை எடுக்க முடியவில்லை என்றும் கூறுகிறார். தன்னுடைய அம்மாவிற்காக தான் சாகவும் தயார் என்று கூறும் கதிர், ஆனால் இதை மட்டும தன்னால் செய்ய முடியாது என்று உறுதியாக கூறுகிறார். இதனால் வருத்தமடையும் கோமதி, கதிரின் காலில் விழுந்து திருமணத்திற்கு சம்மதம் கேட்கிறார்.
அம்மாவிற்காக திருமணம்: இதனால் வருத்தமடையும் கதிர், தன்னுடைய அம்மாவிற்காக இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொள்கிறார். இதையடுத்து இதுகுறித்து மீனா, கதிரிடம் பேசுகிறார். அம்மாவிற்காக திருமணத்திற்கு கதிர் ஒப்புக் கொண்டாலும், திருமணத்திற்கு பிறகு மிகப்பெரிய வாழ்க்கை இருப்பதை சுட்டிக் காட்டுகிறார். ஆனால் இதுவரை யாரிடமும் எதையும் கேட்காத தன்னுடைய அம்மா, தன்னுடைய காலை பிடித்துக் கொண்டு, இந்த விஷயத்தை கேட்டுள்ளதாகவும் அதனால்தான் தான் ஒப்புக் கொண்டதாகவும் கதிர் கூறுகிறார். இதனிடையே அவர்களது திருமண ஏற்பாடுகளை பாக்கியா குடும்பத்தினர் மேற்கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications











