பாக்கியலட்சுமி சீரியல்: என்னை போட போறீங்களான்னு கேட்டேன்.. பாக்கியலட்சுமி தாத்தா ரோசரி கலகலப்பு!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தாத்தாவாக நடித்து வருபவர் நடிகர் ரோசரி. மிகவும் கலகலப்பாகவும் அதே நேரத்தில் நியாயமாகவும் நடந்துக் கொள்ளும் தாத்தா ராமமூர்த்தியாக அனைத்து தரப்பு ரசிகர்களையும் இந்த கேரக்டர் மூலம் சிறப்பாக கவர்ந்து வந்த இந்தக் கேரக்டர் தற்போது காலமானதாக காட்சிகள் அமைந்துள்ளன.
பாக்கியாவின் அனைத்து விதமான முயற்சிகள், செயல்பாடுகள் என அனைத்து விஷயங்களிலும் உடன் இருந்தவர் தாத்தா ராமமூர்த்தி. அவரும் தன்னுடைய மாமனார் மற்றும் மாமியாரை எந்த சந்தர்ப்பத்திலும் விட்டுக் கொடுக்காமல் இருந்ததை பார்க்க முடிந்தது. அந்த வகையில் ராமமூர்த்தியின் மரணம் பாக்கியாவை மட்டுமில்லாமல் குடும்பத்தினர் அனைவரையும் நிலை குலைய செய்துள்ளது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் நிறைவு கட்டத்தை எட்டவுள்ளதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கான எந்த முகாந்திரமும் இல்லாமல் தொடர்ந்து ஈஸ்வரி கைது, இனியா போலீசில் சிக்கியது, ராதிகாவின் கர்ப்பம் கலைந்தது, கோபியை தலை முழுகிய ஈஸ்வரி என அடுத்தடுத்த பிரச்சினைகளை கதைக்களமாக்கினார் இயக்குநர். இந்த விஷயங்களில் எல்லாம் தொடர்ந்து பாக்கியாவைவே குற்றம் சாட்டி வந்தார் கோபி. அவரது இந்த நடவடிக்கை தொடர்ந்து எரிச்சலை ஏற்படுத்தினாலும் தன்னுடைய அப்பாவின் 80வது திருமணத்தில் அவரை சேர்க்காததற்கும் அவர் பாக்கியாவை குற்றம் சாட்டியது ரசிகர்களை ஏகப்பட்ட எரிச்சலுக்கு தள்ளியது.
80வது கல்யாணம்: இந்நிலையில் 80வது திருமணத்தை முடித்துவிட்டு மனநிறைவோடு வீட்டிலுள்ளவர்கள் அனைவருடனும் கலகலப்பாக சிரித்து பேசிக் கொண்டிருந்த தாத்தா ராமமூர்த்தி தூக்கத்திலேயே உயிரிழந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனால் பாக்கியா, ஈஸ்வரி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். முந்திய நாள் இரவு தூக்கம் வராமல் பாக்கியா, செல்வி என அனைவருடனும் மிகவும் வாஞ்சையுடன் பேசுகிறார். மற்றவர்களுக்காக தன்னுடைய வாழ்க்கையை வாழாமல் இருக்க வேண்டாம் என்று பாக்கியாவிற்கு அட்வைஸ் செய்கிறார்.
போடப் போறீங்களான்னு கேட்டேன்: இந்நிலையில் தன்னுடைய கேரக்டர் நிறைவு குறித்து முன்னதாக சீரியல் தரப்பினர் தன்னிடம் பேசியது குறித்து ரோசரி தற்போது பேட்டியொன்றில் கூறியுள்ளார். தான் மற்றொரு சீரியலில் 60ம் கல்யாணத்திற்காக தாலி கட்டிக் கொண்டிருந்தபோது, தன்னை பாக்கியலட்சுமி சீரியல் டீம் சந்தித்ததாக அவர் கூறியுள்ளார். அப்போது தன்னை போடப் போகிறீர்களா என்று தான் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து ரசிகர்கள் திட்டுவார்கள் என்றும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தான் கூறியதாகவும் ரோசரி கூறியுள்ளார். ஆனால் கதைக்கு ஒரு ஹைப் தேவைப்படுவதாக சீரியல் தரப்பினர் தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எண்ட் கார்ட் போடும் சீரியல்: இதனிடையே, ஏறக்குறைய சீரியல் எண்டிங்கில் பாக்கியலட்சுமி சீரியல் வந்துள்ளதாகவும் இதுபோன்ற காட்சி தேவைப்படுவதாக அவர்கள் கூறியதாகவும் ரோசரி தெரிவித்துள்ளார். சீரியலில் தனக்கு பியூனரல் செய்யும் காட்சிகள் உள்ளதால் நேரடியாக அவர்கள் பேச வந்ததாகவும் ரோசரி குறிப்பிட்டுள்ளார். என்ன வேணும்னாலும் பண்ணிக்கங்க என்று தான் ஒப்புதல் தெரிவித்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். கலகலப்பான தாத்தாவாக தன்னுடைய குடும்பத்தை அரவணைத்து, தவறுசெய்த மகனை கண்டித்து அனைவரையும் கவர்ந்த தாத்தா ராமமூர்த்தி இல்லாத பாக்கியலட்சுமி சீரியல் இனி டிஆர்பியை அள்ளுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்


Click it and Unblock the Notifications











