Baakiyalakshmi serial: கோபிநாத்ன்னு ஒருத்தன் என் வயித்துல பிறக்கவே இல்லை.. கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி!
சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு மற்றும் பிரமோ என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. ராதிகாவை கொலை செய்ய ஈஸ்வரி முயலவில்லை என்பது மயூவின் சாட்சியத்தால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் ஈஸ்வரி விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து பாக்கியா, ராமமூர்த்தி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ஈஸ்வரியை மகிழ்ச்சியாக எதிர்கொள்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதே போல தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில் தன்னுடைய பாசத்துக்குரிய மகன் கோபியை ஈஸ்வரி வெறுத்து ஒதுக்குவதாகவும் காணப்பட்டது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக ஈஸ்வரி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் அவர் குற்றமற்றவர் என்று உறுதி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் விடுதலையாவதற்கு மயூவின் சாட்சி மிகப்பெரிய அளவில் உதவிபுரிகிறது. ராதிகாவின் மகள் மயூவை மிகவும் சிரமத்திற்கிடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரும் பாக்கியா, அவரை வைத்து உண்மையை அனைவரும் தெரிந்து கொள்ள வழிவகை செய்கிறார். இதற்கு பழனிச்சாமியும் உதவியாக இருந்த நிலையில் ஈஸ்வரி குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்பட்டு அவரை நீதிபதி சிறையிலிருந்து விடுவிக்கிறார்.
நீதிபதி கண்டனம்: மேலும் தங்களது சொந்த பகைக்காக தவறான புகாரை அளிப்பதா என்று கமலாவையும், தீர விசாரிக்காமல் வழக்கை பதிவு செய்வதா என்று போலீஸ் அதிகாரியையும் நீதிபதி கண்டிப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இந்நிலையில் ஈஸ்வரி இன்றைய எபிசோடில் வீடு வந்து சேர்வதாக காட்டப்பட்டுள்ளது. அவரை ஆரத்தி எடுத்து அனைவரும் உற்சாகத்துடன் வீட்டிற்குள் அழைத்து செல்கின்றனர். இதையடுத்து ஈஸ்வரி மிகுந்த மன உளைச்சலுடன் பாக்கியாவை கட்டி அணைத்துக் கொள்கிறார், பாக்கியா மட்டும் இல்லை என்றால் தன்னுடைய வாழ்க்கை சிறையிலேயே கழிந்திருக்கும் என்றும் நடந்ததை நினைத்து தான் போய் சேர்ந்திருப்பேன் என்றும் ஈஸ்வரி கூறுகிறார்.
கமலாவிடம் ராதிகா கோபம்: இதையடுத்து கடந்த மூன்று நாட்களில் நடந்த விஷயங்களை அவர் வாழ்க்கையில் இருந்து கெட்ட கனவாக நினைத்து அழித்து விடுமாறு பாக்கியா அவரை சமாதானப்படுத்துகிறார். முன்னதாக நீதிமன்றத்தில் தன்னுடைய அம்மா தன்னை ஏமாற்றி பொய் புகார் கொடுத்ததை தெரிந்து கொள்ளும் ராதிகா, மிகுந்த ஆத்திரத்துடன் நீ இனிமேல் என் வீட்டிற்கு வராதே என்று கூறிவிட்டு காரில் ஏறி புறப்பட முற்படுகிறார். ஆனால் கமலா ராதிகாவை சமாதானப்படுத்தி உடன் செல்கிறார். இவ்வாறாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதனிடையே தற்போது அடுத்த சில தினங்களுக்கான பிரமோ வெளியாகியுள்ளது.
புதிய பிரமோ: இந்த புதிய பிரமோவில் தன்னுடைய அம்மாவை பார்ப்பதற்காக பாக்கியா வீட்டிற்கு கோபி வருவதாகவும் அங்கு வைத்து கோபியை ஈஸ்வரி ஆத்திரத்துடன் பேசுவதாகவும் காணப்படுகிறது. தன் மீது குற்றம் சாட்டியதுடன் தனக்கு எதிராக சாட்சி கூறிய கோபி, தான் அந்த குற்றத்தை செய்யவில்லை என்று ஒருபோதும் யோசிக்காத நிலையில் பாக்கியா மட்டுமே தான் அந்த தவறை செய்திருக்க மாட்டேன் என்று கடைசி வரை நம்பியதை சுட்டிக்காட்டுகிறார் ஈஸ்வரி. இனிமேல் கோபிநாத் என்ற மகன் தன் வயிற்றில் பிறக்கவில்லை என்று தான் நினைத்துக் கொள்வதாகவும், பாக்கியா என்ற மகள் மட்டுமே தனக்கு உண்டு என்றும் கூறி கோபியை தலைமுழுகுவதாக கூறுகிறார்.
கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி: தொடர்ந்து ஈஸ்வரி தலையில் தண்ணீர் ஊற்றிக் கொள்வதாகவும் இந்த பிரமோவில் காணப்படுகிறது. கோபி என்ற ஒரு உறவுக்காக வீட்டில் உள்ள மற்றவர்கள் அனைவரையும் பகைத்துக் கொள்ளும் மனநிலையுடன் ஈஸ்வரி செயல்பட்ட நிலையில், தற்போது தன்னுடைய மகனாலேயே தான் சிறைக்கு சென்ற விஷயம் அவரை வெகுவாக பாதித்துள்ளதை இந்த பிரமோவில் பார்க்க முடிந்தது. ஈஸ்வரி கூறியது போலவே இந்த விஷயத்தை தன்னுடைய மாமியார் கண்டிப்பாக செய்திருக்க மாட்டார் என்று துவக்கம் முதலே பாக்கியா மட்டுமே உறுதியாக நம்பிய நிலையில் அதை தற்போது ஈஸ்வரியும் கூறுவதாக காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











