Baakiyalakshmi: சேஃப்பாக வீட்டிற்கு வந்த பாக்கியா & டீம்.. கோபியை திட்டித் தீர்த்த எழில்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறது.
இந்தத் தொடரில் இனியாவின் கல்லூரி ப்ராஜெக்ட்டிற்காக பாக்கியா தலைமையில் கேரளாவிற்கு ரோட் ட்ரிப் சென்ற பாக்கியா & டீம் தற்போது பாதுகாப்பாக வீடு திரும்பியுள்ளது.
முன்னதாக பாக்கியாவை பழிவாங்குவதற்காக அவரது டிரைவிங் லைசென்சை கோபி திருடியது தற்போது எழில் உள்ளிட்டவர்களுக்கு தெரியவந்துள்ளது.

ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்த பாக்கியலட்சுமி புதிய எபிசோட்: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது இடங்களில் இந்தத் தொடர் பின்தங்கியுள்ள போதிலும், இந்த வாரம் சில புள்ளிகள் மட்டுமே பின்தங்கியுள்ளது அதன் ரசிகர்களுக்கு ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் வாரங்களில் இந்தத் தொடர் அதிகமான டிஆர்பியை பெற்று தன்னுடைய பழைய முதலிடத்தை மீண்டும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரபரப்பான எபிசோட்களை இந்தத் தொடர் ஒளிபரப்பி வருகிறது. இனியாவின் ப்ராஜெக்ட்டிற்காக கேரளாவிற்கு பாக்கியா, ஈஸ்வரி, இனியா மற்றும் செல்வி ஆகிய நான்கு பேரும் சாலை வழி பயணமாக காரில் பயணம் மேற்கொண்டனர். இந்த ட்ரிப்பை தொடர்ந்து சாதனை மற்றும் சாகச பயணமாக மாற்றியுள்ளார் சீரியல் இயக்குநர். இந்தப் பயணத்தை டிரைவரை கொண்டே, இவர்கள் துவக்கிய நிலையில், தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் ஆரம்பத்திலேயே விலகிக் கொண்டார்.

தொடர்ந்து அதிகமாக கார் ஓட்டி பழக்கமில்லாத பாக்கியா, இந்தப் பயணத்தை சவாலாக கொண்டு, தானே கார் ஓட்டிக் கொண்டு செல்கிறார். வழியில் வண்டி நின்று இவர்கள் அனைவரும் நடு ரோட்டில் பரிதவிப்புடன் நின்ற நிலையில், அந்த வழியாக வந்த நபர் ஒருவர் அவர்களுக்கு உதவுகிறார். தொடர்ந்து ஹோட்டலில் ரூம் கிடைக்காமல் திண்டாடும் இவர்கள், ராத்திரி நேரத்தில் ரூம் கிடைத்து செட்டில் ஆகின்றனர்.
தொடர்ந்து அடுத்த நாள் காட்டிற்குள் இவர்களது பயணம் தொடர்ந்த நிலையில், ஈஸ்வரி காணாமல் போகிறார். ஒருவழியாக கோபியின் தொடர் போன் கால்கள் உள்ளிட்டவற்றை சமாளித்து இந்த ட்ரிப்பை முடிக்கும் இவர்கள், திரும்பும் வழியில் மீண்டும் பிரச்சினைகளை சந்திக்கின்றனர். முன்னதாக தன்னுடைய ட்ரைவிங் லைசென்சை பாக்கியா தொலைத்த நிலையில், விபத்து ஒன்றில் சிக்கி லைசென்ஸ் இல்லாமல் கைதாகும் நிலைக்கு செல்கிறார்.

முன்னதாக பாக்கியாவின் வீட்டிற்கு திருட்டுத்தனமாக செல்லும் கோபி, அவரது லைசென்சை திருடி உடைத்தெறிகிறார். அதை பார்க்க நேரும் பழனிச்சாமி, அந்த கார்டை சரிப்படுத்தி பாக்கியாவிற்கு அனுப்பி வைக்கிறார். இதனால் பாக்கியாவின் கைது தவிர்க்கப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய அப்பாவின் சதித்திட்டம் குறித்து கேள்விப்படும் எழில், நேரில் சென்று திட்டித் தீர்க்கிறார். இதைக் கேட்கும் ராதிகாவும் மிகுந்த கோபத்துடன் கோபியை திட்டுகிறார்.

இதனிடையே, தங்களின் சாலை பயணத்தை சிறப்பாக முடித்துக் கொண்டு பாக்கியா, ஈஸ்வரி, இனியா மற்றும் செல்வி வீடு திரும்புகின்றனர். அவர்களிடம் எழில் தன்னுடைய அப்பாவின் சதித்திட்டம் குறித்து எதுவும் சொல்லாத நிலையில், பயங்கரமான சவால்களை சந்தித்து இந்த ட்ரிப்பை சாதித்துக் காட்டியுள்ளதாக தன்னுடைய அம்மாவிடம் எழில் பாராட்டு தெரிவிக்கிறார். இதனிடையே தன்னுடைய பிராஜெக்ட் வொர்க் குறித்து இனியாவும் மகிழ்ச்சி தெரிவிப்பதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











