Baakiyalakshmi: கேரள ட்ரிப்பில் தொடரும் பிரச்சினைகள்.. ஹோட்டல் ரூம் கிடைக்காமல் திண்டாடும் பாக்கியா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடராக ரசிகர்களை கவர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல்.
இந்தத் தொடரில் இனியாவின் ப்ராஜெக்ட் வொர்க்கிற்காக தற்போது கேரளாவிற்கு ரோட் ட்ரிப் சென்றுள்ளனர் பாக்கியா, இனியா, ஈஸ்வரி மற்றும் செல்வி.
டிரைவருடன் துவங்கிய இவர்களது பயணத்தில், அவர் அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டதால் இடையிலேயே சென்றுவிட, பாக்கியா தற்போது காரை ஓட்டுகிறார்.

கேரளா ட்ரிப்பில் அடுத்தடுத்து தொடரும் சவால்கள்: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக தொடர்ந்து நீடித்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். பல மாதங்களாக சேனலின் முதலிடத்தில் இந்தத் தொடர் இருந்த நிலையில், தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதலிரண்டு இடங்களில் சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் இடம்பெற்றுள்ள நிலையில், டிஆர்பியில் சரிந்து பாக்கியலட்சுமி கடந்த சில வாரங்களாக பின்தங்கியுள்ளது.
இந்தத் தொடரை மீண்டும் முதலிடத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் அடுத்தடுத்த ட்விஸ்ட்களையும் பரபரப்புகளையும் தொடரில் கொடுத்து வருகிறார் இயக்குநர். தற்போது இனியாவின் ப்ராஜெக்ட் வொர்க்கிற்காக கேரளாவிற்கு ரோட் ட்ரிப் சென்றுள்ளார் பாக்கியா. கூடவே மாமியார் ஈஸ்வரி, செல்வி ஆகியோரையும் உடன் அழைத்து சென்றுள்ளார். டிரைவருடன் துவங்கிய இவர்களது பயணத்தில், அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டதால் அவர் துவக்கத்திலேயே இவர்களை விட்டுவிட்டு சென்றுவிடுகிறார்.

இதனால் இவர்களது பயணமே கேன்சல் ஆகும் சூழ்நிலை ஏற்பட, இனியா தன்னுடைய கல்லூரி ட்ரிப் குறித்து கவலையுடன் அம்மாவை பார்க்கிறார். இதையடுத்து அந்தப் பயணத்தில் தானே காரை ஓட்டுகிறார் பாக்கியா. இதனால் துவக்கத்தில் பதறினாலும் அவர் கார் ஓட்டுவதை பார்த்து ஈஸ்வரி உள்ளிட்ட அனைவரும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் இடையில் சாப்பிடுவது உள்ளிட்ட அனைத்திலும் கஷ்டப்படுகிறார் ஈஸ்வரி.
இதற்கிடையில் மோசமான ஒரு பகுதியில் கார் மக்கர் செய்கிறது. சாலை விளக்குகள்கூட இல்லாத அந்தப் பகுதியில் வயதுப் பெண்ணை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று அனைவரும் திகைக்க, அப்போது அந்த வழியாக வரும் நபரைப் பார்த்து பயப்படுகின்றனர். ஆனால் அவரோ இவர்களது பிரச்சினையை தீர்த்து வைக்கிறார். அந்த இடம் மோசமான இடம் என்றும் உடனடியாக அங்கிருந்து செல்லும்படியும் அறிவுறுத்துகிறார்.
இதையடுத்து ஒருவழியாக எழில் ஹோல்ட் செய்திருந்த ஹோட்டலுக்கு செல்கின்றனர். அங்குதான் மற்றொரு ட்விஸ்ட் காத்திருக்கிறது. அதிகமான நேரம் ஆனபடியால், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூம்களை மற்றவர்களுக்கு அந்த ஹோட்டல் கொடுத்துவிடுகிறது. இதனால் ஈஸ்வரி மேலும் ஆத்திரத்துடன் எழில் மற்றும் பாக்கியாவை திட்டித் தீர்க்கிறார். தொடர்ந்து அடுத்ததாக என்ன செய்வது என்ற குழப்பத்தில் மற்றொரு ஹோட்டலை அவர்கள் தேடி அலைவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது.
ஹவுஸ் வைஃபாக இருந்தபோது அனைத்திற்கும் மற்றவர்களை சார்ந்து, எல்லாவற்றிற்கும் அழுகையையே பரிசாக கொடுத்துக் கொண்டு, கோபியிடம் இடியட் என்ற பெயரை தொடர்ந்து வாங்கிக் கொண்டு இருந்தார் பாக்கியா. ஆனால் தற்போது அடுத்தடுத்த பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பக்குவமும் தைரியமும் அவருக்கு வந்துள்ளது. தனியாக சாலையில் வயதுப்பெண்ணுடன் நின்றுக் கொண்டிருந்தாலும் அடுத்தது அதற்கான தீர்வை யோசிக்கும் பக்குவம் அவருக்கு தற்போது வந்துள்ளது. அதனால் இந்த பயணத்தை இனிவரும் நாட்களில் அவர் சிறப்பாக எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











