Baakiyalakshmi serial: செழியனை அடித்து வெளுக்கும் பாக்கியா.. கடுப்பில் இனியா -ஈஸ்வரி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமியின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளது.
இந்த தொடரில் பாக்கியலட்சுமி தற்போது தன்னுடைய மகன்களின் வாழ்க்கையை காக்கும் முக்கியமான பொறுப்பில் முழிபிதுங்கி வருகிறார்.
குறிப்பாக செழியன் -மாலினி விவகாரத்திலும் அவருக்கு அடுத்தடுத்த அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்த ட்விஸ்ட்களை கொடுத்து தொடரை சுவாரஸ்யமாக்கி வருகிறார். இயக்குநர். தன்னுடைய கணவனை விவாகரத்து செய்த பாக்கியலட்சுமி தொடர்ந்து தன்னுடைய கேரியரில் இருந்து முன்னேறுவதாக இந்தத் தொடரில் காட்டப்பட்டது. ஆனாலும் பாக்கியாவின் கேரக்டர் ஒரு நிலையான மனநிலை இல்லாத அவரது குணநலன் என சீரியலில் அவரது கேரக்டர் கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
உத்வேகம் கொடுத்த பாக்கியா: கோபியை விவாகரத்து செய்யும் பாக்கியா, தொடர்ந்து மசாலா பிசினஸ், சமையல் கான்டிராக்ட், கேன்டீன் கான்டிராக்ட் என அதிரடியாக செயல்பட்டு தன்னுடைய கேரியரை முன்னேற்றினார். கணவனை பிரிந்த பெண்களுக்கு இவர் உத்வேகமாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனாலும் மிகவும் அப்பாவித்தனமாக சில விஷயங்களை இவர் எதிர்நோக்குவது ரசிகர்களுக்கு சலிப்பை கொடுத்த நிலையில் சீரியல் டிஆர்பியில் சறுக்கி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
கேள்விக்குறியான மகன்களின் வாழ்க்கை: ஆனாலும் சுதாரித்துக் கொண்ட இயக்குநர், அடுத்தடுத்த பரபரப்பான எபிசோட்களை கொடுத்து வருகிறார். கோபி, ராதிகா மற்றும் தன்னுடைய மாமியார் ஈஸ்வரியுடன் மல்லுக்கட்டி வந்த பாக்கியாவிற்கு தற்போது தன்னுடைய மகன்களின் வாழ்க்கையை காக்கும் பொறுப்பும் ஏற்பட்டுள்ளது. மாலினியிடம் இருந்து செழியனின் வாழ்க்கையை காக்க வேண்டிய பொறுப்புடன், அமிர்தாவின் முன்னாள் கணவன் கணேஷிடம் இருந்து எழிலின் வாழ்க்கையை காப்பாற்றும் பொறுப்பும் பாக்கியாவிற்கு ஏற்பட்டுள்ளது.
பாக்கியாவிடம் இனியா -ஈஸ்வரி ஆத்திரம்: இதன்பொருட்டு அடுத்தடுத்து வேலைகளை பார்க்கும் பாக்கியா, தன்னுடைய குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக சமையல் கான்டிராக்டையும் மறுபுறம் பார்க்கும் சூழலில் தன்னுடைய மகள் இனியாவை கவனிக்க முடியாமல் போகிறது. இதனால் கடுப்பாகும் இனியா, தன்னை பாக்கியா கவனிப்பதில்லை என்று ஆத்திரப்படுகிறார். அம்மாவிடம் பேசாமல் இருக்கிறார். இதனிடையே இனியாவை உசுப்பேற்றும்வகையில் ஈஸ்வரியும் பாக்கியாவை திட்டுகிறார். மகனை கவனித்துக் கொள்வதை காட்டிலும் வெளியில் என்ன வேலை என்று ஆத்திரப்படுகிறார்.
செழியனை அடித்து வெளுக்கும் பாக்கியா: முன்னதாக கோயிலில் மாலினியை பார்த்து பேசும் பாக்கியா, செழியனை விட்டுவிடும்படியும் இனிமேல் அவருடைய வழியில் செழியன் வராமல் பார்த்துக் கொள்வதாகவும் பேசுகிறார். செழியன் தன்னுடைய வாழ்க்கையை கெடுத்துவிட்டதாக கதறும் மாலினி, அவரை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று ஆத்திரத்துடன் கூறுகிறார். ஆனாலும் அங்கிருந்து வெளியேறுகிறார். இதனிடையே வீட்டிற்கு வரும் பாக்கியா, செழியனை தனியாக அழைத்து சென்று ஆத்திரத்துடன் அடித்து கோபத்துடன் கத்துகிறார். இதனால் செழியன் செய்வதறியாமல் திகைப்பதாக தற்போதைய எபிசோட் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











