Baakiyalakshmi serial: அன்புக்கு விலை பேசாதீங்க.. பாக்கியா வார்த்தையால் நெகிழ்ந்த பழனிச்சாமி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது ரசிகர்களை கவரும்வகையில் அடுத்தடுத்த காட்சிகளை களமிறக்கி வருகிறார் இயக்குநர். அந்த வகையில் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்படும் இந்த சீரியலில் அதற்கான எந்த முகாந்திரமும் காணப்படவில்லை. மாறாக அடுத்தடுத்த பரபரப்பை நுழைக்கவே இயக்குநர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
எழில் மற்றும் செழியன் வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்கள் தீர்த்து வைக்கப்பட்ட சூழலில், அடுத்தடுத்த பிரச்சினைகளை புகுத்தி வருகிறார். இதனிடையே, பாக்கியாவை தன்னுடைய நெருங்கிய தோழியாகவே நினைத்துவந்த பழனிச்சாமி மனதில் தற்போது அவர் குறித்த பிம்பம் மாறியுள்ளது. பாக்கியா மீது பழனிச்சாமிக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சீரியல் எப்படி நகரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்க துவங்கியுள்ளனர்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து 1000 எபிசோட்களை தாண்டி தன்னுடைய ஒளிபரப்பை தொடர்ந்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்தத் தொடரில் பாக்கியா, கோபி உள்ளிட்டவர்களை லீட் கேரக்டர்களில் கொண்டு அடுத்தடுத்த எபிசோட்களை கொடுத்து வருகிறார் இயக்குநர். இந்நிலையில் இந்த சீரியல் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்படுகிறது. அதையொட்டி எழில், செழியன் வாழ்க்கை சிக்கல்கள் முடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பாக்கியாவின் ரெஸ்டாரெண்டில் ஏற்பட்டிருந்த பார்க்கிங் சிக்கலையும் பழனிச்சாமி சிறப்பாக கையாண்டார்.
பழனிச்சாமி பிறந்தநாள் கொண்டாட்டம்: இந்நிலையில் பழனிச்சாமியின் பிறந்தநாளை வெகு விமரிசையாக நண்பர்கள், உறவினர்கள் சூழ நடத்துகிறார் அவரது அம்மா. இதனிடையே இந்த நிகழ்ச்சியில் சமையல் கான்டிராக்டை எடுத்து அனைவருக்கும் சிறப்பான சமையலை கொடுத்தது மட்டுமில்லாமல், குடும்பத்தினருடன் விழாவில் பங்கேற்கிறார் பாக்கியா. அங்கு பழனிச்சாமிக்கு வருங்கால மனைவி குறித்த என்ன மாதிரியான ஆசை இருக்கிறது என்பது குறித்து அவரது அக்கா மகன் விமல், பாக்கியா குடும்பத்தினர் அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர். இதற்கு பதிலளிக்க பழனிச்சாமி முயலும்போது, பாக்கியாவின் நடவடிக்கைகள், அவர் மீது பழனிச்சாமிக்கு ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.
பழனிச்சாமி காதலுக்கு அடித்தளம்: தான் நினைக்கும் விஷயங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும், தன்னுடைய அம்மாவை சிறப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும், தன்னுடைய சகோதரிகளை கூடப் பிறந்தவர்களாக பார்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை பழனிச்சாமி அடுக்க, அதையொட்டி நடக்கும் பாக்கியா, அவரை வெகுவாக ஈர்க்கிறார். அதுவரை பாக்கியாவை தன்னுடைய நெருங்கிய தோழியாக மட்டுமே பார்த்துவந்த பழனிச்சாமிக்கு அவர் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. இதனிடையே, பாக்கியாவின் சமையல் வேலைக்கு பழனிச்சாமியின் அம்மா காசு கொடுக்க முயல்கிறார். ஆனால் தன்னை வேறுபடுத்தி பார்க்க வேண்டாம் என்று கூறி பாக்கியா மறுக்கிறார்.
போலீசிடம் மாட்டிய பழனிச்சாமி: இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த வாரத்திற்கான பிரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் தன்னுடைய சமையலுக்கான காசை பாக்கியா பெற்றுக் கொள்ளாதது குறித்து தெரிந்துக் கொள்ளும் பழனிச்சாமி, அதை அவரை நேரில் சந்தித்து கொடுக்க முயல்கிறார். இதை மறுக்கும் பாக்கியா, அன்பிற்கு விலை பேச வேண்டாம் என்று கூறுகிறார். இதையடுத்து வீட்டிற்கு காரில் திரும்பும் பழனிச்சாமி இதை மனதில் யோசித்துக் கொண்டே வந்ததால், சிக்னலை கவனிக்காமல், போலீசாரிடம் மாட்டுகிறார். அவர்கள், 500 ரூபாய் அபராதம் கட்டும்படி கூற, அவர்களிடம் பழனிச்சாமி, அன்பிற்கு விலை பேசாதீர்கள் என்று கூறுவதாக இந்த பிரமோவில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











