உங்களை நல்ல அப்பாவா ஏத்துக்க முடியாது.. கோபிக்கு பதிலடி கொடுத்த பாக்கியா.. பாக்கியலட்சுமி பிரமோ!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக அதிகமான டிஆர்பி-ஐ பெற்று தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியல் நிறைவடைய உள்ளதாகவும் அதனால்தான் ராமமூர்த்தி கேரக்டரை உயிரிழக்க செய்ததாகவும் முன்னதாக கூறப்பட்டது.
ஆனாலும் பாக்கியலட்சுமி சீரியல் அடுத்த ஆண்டு ஏப்ரல் -மே மாதம் வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சீரியலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமமூர்த்தி காலமான நிலையில் அவரது மறைவையொட்டிய அடுத்தடுத்த சம்பவங்கள் இந்த சீரியலில் தொடர்ந்து காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. அவை அனைத்துமே பார்ப்பவர்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்குவதாக காணப்படுகிறது.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து அடுத்தடுத்து எபிசோடுகளால் ரசிகர்களை கவர்ந்து முன்னணி சீரியலாக சேனலின் இரண்டாவது இடத்தில் அதிக டிஆர்பியுடன் இருந்து வருகிறது. இந்த சீரியல் அடுத்தடுத்த பரபரப்பான கட்டங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சீரியலில் முக்கியமான கேரக்டரில் நடித்து வந்த தாத்தா ராமமூர்த்தி காலமாகியுள்ளார். தன்னுடைய 80வது பிறந்த நாளை உற்றார், உறவினர், நண்பர்கள், பேரன்கள் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடி மகிழ்ந்த ராமமூர்த்தி அன்று இரவு தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ராமமூர்த்தி மறைவு: இதை டைஜஸ்ட் செய்ய முடியாமல் பாக்கியா, ஈஸ்வரி உள்ளிட்ட குடும்பத்தினர் உடைந்து போகின்றனர். ஆயினும் இந்த நேரத்தில் தன்னுடைய உறுதியை கைவிடாத ஈஸ்வரி, கோபி தன்னுடைய கணவருக்கு இறுதி சடங்குகளை செய்யக்கூடாது என்று திட்டவட்டமாக கூறுகிறார். இதனால் கோபத்திற்கும் ஆத்திரத்திற்கும் உள்ளாகும் கோபி தன்னுடைய அம்மாவிடம் சண்டை பிடிக்கிறார். ஆனால் தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து ஈஸ்வரி சிறிதும் பின்வாங்காமல் தன்னுடைய கணவரின் இறுதி சடங்கை பாக்கியாவை வைத்து நிறைவேற்றுகிறார். வாழும் உதாரணமாக இந்த சீரியலில் இருந்து வந்த ராமமூர்த்தி, தன்னுடைய இறுதி காலம் குறித்து தெரிய வந்ததால் தன்னுடைய சொத்துக்களை தன்னுடைய மருமகள் பாக்கியாவிற்கு முன்னதாக உயில் எழுதி வைத்துள்ளார்.

ராமமூர்த்தி எழுதி வைத்த உயில்: மேலும் அடுத்தடுத்து தன்னுடைய பேரன்களுக்கும் பேத்திக்கும் அவர் பணத்தை சேர்த்து வைத்ததையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில் அவர்கள் அனைவருக்கும் அவர் தனித்தனியாக கடிதம் எழுதிவிட்டு சென்றுள்ளார். கடந்த எபிசோட்களில் இந்த கடிதங்கள் படிக்கப்பட்டு மிகப்பெரிய நெகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் தன்னுடைய ஈஸ்வரி ரெஸ்டாரண்டில் மாமனாரின் ஆளுயர படத்தை திறந்து வைக்கிறார் பாக்கியா. இந்தப் படத்தை ஈஸ்வரி வந்து திறந்து வைக்க, அனைவரும் மலர் தூவி மரியாதை செய்கின்றனர். தன்னுடைய வளர்ச்சிக்கு தன்னுடைய மாமனார்தான் காரணம் என பாக்கியா நெகிழ்கிறார்.

அப்பாவை குறைகூறும் கோபி: இந்நிலையில் அங்கு வரும் கோபி, தான் தன்னுடைய மகன்களுக்கு மிகச் சிறப்பான அப்பாவாக இருந்துள்ளதாகவும் ஆனால் தன்னுடைய அப்பா தனக்கு சிறப்பானவராக அமையவில்லை என்றும் அனைவர் முன்னிலையிலும் கூறுகிறார். இதனால் பாக்கியா, ஈஸ்வரி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருமே அதிர்ச்சிக்குள்ளாகின்றனர். இந்நிலையில் கோபி வெளியேறும் போது அவரை வழிமறிக்கும் பாக்கியா, அவர் எப்போதுமே தன்னுடைய மகன்களை கஷ்டப்படுத்தியதாகவும் அவர் ஒரு நல்ல அப்பா என்று தன்னைத்தானே கூறிக்கொள்வதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் கூறுவதாக இந்த வார ப்ரோமோவில் காணப்படுகிறது.
கோபியின் நடவடிக்கை: தன்னுடைய மகன்கள் வளர்ந்து திருமணமாகி அவர்களுக்கு குழந்தையும் இருக்கும் சூழலில் பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார் கோபி. தன்னுடைய மனதுக்கு பிடித்த வாழ்க்கையை தன்னுடைய அப்பா தனக்கு அமைத்து தரவில்லை என்று அவர் தன்னுடைய நடவடிக்கைக்கு விளக்கம் கூறினாலும் திருமணம் ஆன மகன்களை வைத்துக்கொண்டு அவர் திருமணம் செய்ததும் தொடர்ந்து ராதிகா கர்ப்பமாக இருந்ததும் என அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தருணங்களையே அவர் தன்னுடைய குடும்பத்திற்கு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











