Baakiyalakshmi: ஜெனிக்கு தெரியவந்த உண்மை.. குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிய ஜெனி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.
இந்த தொடரில் மாலினி -செழியன் விவகாரம் தெரியவந்த நிலையில் என்ன மாதிரியான முடிவெடுப்பது என்று தெரியாமல் பாக்கியா முழித்து வந்தார்.
கோயிலில் வைத்து மாலினியிடமும் செழியன் விவகாரம் குறித்து அவர் பேசிய நிலையில் தான் செழியனை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று மாலினி உறுதியாக இருந்தார்.

பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. தன்னுடைய முதலிடத்தை இந்த தொடர், தொடர்ந்து பல மாதங்களாக சிறகடிக்க ஆசை சீரியலிடம் விட்டுக் கொடுத்து டிஆர்பியில் பின்தங்கி வந்தாலும், ரசிகர்களின் விருப்பத்திற்குரிய தொடராகவே மாஸ் காட்டி வருகிறது. இந்த சீரியலில் தன்னுடைய வாழ்க்கை, மகன்களின் வாழ்க்கை சிக்கலில் உள்ள நிலையில் அதை மீட்டெடுக்கும் முயற்சியில் பாக்கியா ஈடுபட்டு வருகிறார்.
அடுத்தடுத்த பிரச்சினைகள்: இதனிடையே தன்னுடைய மகன் கோபியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதை காரணம் காட்டி அவரை தன்னுடைய வீட்டில் கொண்டுவந்து வைத்துள்ளார் ஈஸ்வரி. இதையடுத்து ராதிகாவும் அங்கு வந்து தங்கியுள்ளார். இதனிடையே, பாக்கியா தொடர்ந்து இனியா உள்ளிட்டவர்கள் மீது கவனம் செலுத்தாமல் தொடர்ந்து தன்னுடைய வேலையிலேயே கவனம் செலுத்துவதாக ஈஸ்வரி குற்றம் சாட்டி வருவதையும் பார்க்க முடிகிறது.
மகன்களின் வாழ்க்கையில் பிரச்சினை: தன்னுடைய மகன்கள் எழில், செழியன் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளில் கவனம் செலுத்திவரும் பாக்கியா, தன்னுடைய சமையல் கான்டிராக்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே ஈஸ்வரியை போலவே, தன்மீது தன்னுடைய அம்மா பாக்கியா, கவனம் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டை இனியாவும் கூறி வருகிறார். இவர்கள் அனைவரையும் சமாளிப்பதுடன் செழியன் வாழ்க்கையில் பிரச்சினை செய்துவரும் மாலினி மற்றும் எழில் வாழ்க்கையில் பிரச்சினைக்குரியவராக மாறியுள்ள கணேஷிடம் தொடர்ந்து பேசி வருகிறார் பாக்கியா.
ஜெனிக்கு தெரியவந்த உண்மை: கோயிலில் வைத்து மாலினியிடம் செழியன் வாழ்க்கையிலிருந்து விலக கோருகிறார் பாக்கியா. ஆனால் எந்த காரணத்திற்காகவும் தான் செழியனை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று மாலினி உறுதியாக கூறுகிறார். தொடர்ந்து பாக்கியா வீட்டிற்கு வரும் மாலினி, தனக்கும் செழியனுக்கும் வேலையை தாண்டி பர்சனல் உறவு இருந்ததை ஆதாரத்துடன் குடும்பத்தினரிடையே வெளிப்படுத்துகிறார். இதனால் ஜெனி அதிர்ச்சியடைகிறார்.
வீட்டை விட்டு வெளியேறிய ஜெனி: மேலும் தங்களின் இந்த உறவு பாக்கியாவிற்கும் தெரியும் என்பதையும் மாலினி வெளிப்படுத்த ஜெனியின் அதிர்ச்சி மேலும் அதிகரிக்கிறது. இதையடுத்து பாக்கியாவிடம் ஜெனி கோபப்படுகிறார். தன்னுடைய மகனுக்கே பாக்கியா சப்போர்ட் செய்யட்டும் என்று கூறும் ஜெனி, குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சியின் உச்சத்திற்கு செல்கின்றனர். எது நடக்கக்கூடாது என்று பாக்கியா போராடி வந்தாரோ அது தற்போது நிகழ்ந்துள்ளதாக இந்த வார ப்ரமோவில் காட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை பாக்கியா எப்படி கையாளப் போகிறார் என்பதை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











