Baakiyalakshmi serial: குழந்தை பிறந்த சந்தோஷத்தில் செழியன்.. தற்கொலை மிரட்டல் விடுக்கும் மாலினி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார ப்ரமோ வெளியாகியுள்ளது.
இந்தத் சீரியலில் கர்ப்பமாக இருந்த ஜெனிக்கு சமீபத்தில் வளைகாப்பு நடத்தப்பட்டு அவர் குழந்தை பிறப்பிற்காக தனது அம்மா வீட்டில் இருக்கிறார்.

வீட்டில் தன்னுடைய மனைவி இல்லாத நிலையில், செழியனுக்கு மாலினியுடன் நெருக்கம் ஏற்படுகிறது. இதுகுறித்து பாக்கியாவிற்கு சந்தேகம் ஏற்படுகிறது.
செழியனுக்கு பெண் குழந்தை பிறந்ததால் குடும்பத்தினர் மகிழ்ச்சி: விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு இணையான முக்கியத்துவத்தை எப்போதும் சீரியல்களுக்கும் கொடுத்து வருகிறது. சன் டிவிக்கு அடுத்தபடியாக விஜய் டிவியின் சீரியல்களே அதிகமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியின் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ், ஆஹா கல்யாணம் போன்ற தொடர்கள் அதிகமான ரசிகர்களை கவர்ந்து டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று வருகின்றன.

தொடர்ந்து முன்னணியில் இருந்த விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர், தற்போது இரண்டாவது இடத்தில் பின்தங்கியுள்ளது. ஆனாலும் சிறப்பான எபிசோட்களால் ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார் இயக்குநர். தன்னுடைய கணவன் தன்னுடைய 25 ஆண்டுகால திருமண வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிவிட்டு, தன்னிடம் விவாகரத்து பெற நினைக்க, அவர் கேட்ட விவாகரத்தை அவருக்கு மனமுவந்து கொடுக்கிறார் பாக்கியா.
தொடர்ந்து அவரது பெற்றோரையும் தன்னுடைய மகன்கள், மகளையும் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். உலகமே தெரியாமல் இருந்த பாக்கியாவிற்கு, அடுத்தடுத்த இந்தப் பொறுப்புகள் சவாலாக அமைகின்றன. வீடு, அலுவலகம், கேன்டீன், கான்டிராக்ட், ஆங்கில வகுப்பு, கல்லூரி என அடுத்தடுத்து தன்னை இணைத்துக் கொள்கிறார். அனைத்தையும் சவாலாக ஏற்று வெற்றி பெறுகிறார். இந்நிலையில் தற்போது கேன்டீன் கான்டிராக்ட் அவரது கையை விட்டு போகும் சூழலை ஏற்படுத்துகிறார் ராதிகா.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளானாலும் அனைத்தையும் அமைதியுடனும் நிதானத்துடனும் எதிர்கொள்ளும் பாக்கியா, இந்த சூழலையும் அதே மனநிலையுடன் எதிர்கொள்கிறார். இதனிடையே, கர்ப்பமாக இருந்த அவரது மருமகள் ஜெனிக்கு இந்த வாரம் பெண் குழந்தை பிறப்பதாக புதிய ப்ரமோ அமைந்துள்ளது. குதூலகமான இந்த நிகழ்ச்சியையடுத்து மிகுந்த மகிழ்ச்சியுடன் செழியனை குடும்பத்தினர் கொண்டாடுகின்றனர். இதனால் மிகுந்த மனமகிழ்ச்சியுடன் செழியன் காணப்படுகிறார்.

இந்நிலையில் அவர் ஜெனியுடன் இருக்கும் சூழலில், மாலினியிடம் இருந்து தொடர்ந்து போன் கால்கள் வருகின்றன. அதை அட்டெண்ட் செய்ய முடியாமல் தவிர்க்கிறார் செழியன். தொடர்ந்து முயற்சிக்கும் மாலினி, செழியன் தன்னை தவிர்ப்பதை அறிந்து, உடனடியாக தன்னை பார்க்க வரவில்லை என்றால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று வாய்ஸ் மெசேஜ் மூலம் மிரட்டல் விடுக்கிறார்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கிறார் செழியன். அவரது இந்த தவிப்பை பார்க்கிறார் பாக்கியலட்சுமி. தன்னுடைய மகன் மிகப்பெரிய சிக்கலில் மாட்டியுள்ளதை அவர் உணர்கிறார். முன்னதாகவே செழியனிடம் இதுகுறித்து பாக்கியா, பேசியுள்ள நிலையில், அடுத்ததாக தன்னுடைய மகன் வாழ்க்கையில் இந்தக் கட்டத்தை அவர் எப்படி சமாளிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











