Baakiyalakshmi serial: கோபிங்கற பேர்ல எனக்கு யாரையும் தெரியாது.. தொடர்ந்து கறார் காட்டும் ஈஸ்வரி!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தியின் 80வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினர் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். எழில் வீட்டை விட்டு சென்ற நிலையில், இந்தக் கொண்டாட்டம் தேவையா என்று ராமமூர்த்தி கேள்வி எழுப்புகிறார்.
ஆனால் அவரை வற்புறுத்தி குடும்பத்தினர் அனைவரும் சம்மதிக்க வைக்கின்றனர். இந்த விழாவிற்கு எழிலை கூப்பிட வேண்டும் என்று பாக்கியாவிடம் ஈஸ்வரி உள்ளிட்டவர்கள் கூறிய நிலையில், இது அவனது வீட்டு நிகழ்ச்சி, இதற்கெல்லாம் கூப்பிட வேண்டியதில்லை என்று பாக்கியா திட்டவட்டமாக கூறிவிடுகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல்: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் அமைந்திருந்தது. ராமமூர்த்தியின் 80வது பிறந்தநாளையொட்டிய ஏற்பாடுகளை குடும்பத்தினர் மேற்கொள்வதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இந்த விஷயத்தை சொல்லி ஈஸ்வரியிடம் ஈஸ்வரி, செழியன் உள்ளிட்டவர்கள் பர்மிஷன் கேட்ட நிலையில், அவர் உடனடியாக ஒப்புக் கொள்கிறார். ஆனால் ராமமூர்த்தியோ, எழில் வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில், இந்த கொண்டாட்டம் அவசியமா என்று கேள்வி எழுப்புகிறார். ஆனால் ஈஸ்வரி உள்ளிட்டவர்கள் அவரை சமாதானப்படுத்தி விழாவிற்கு ஒப்புக் கொள்ள செய்கின்றனர்.
கோபின்னு யாரையும் தெரியாது: தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு யாரையெல்லாம் அழைக்க வேண்டும் என்ற லிஸ்டை ஈஸ்வரி, ஜெனி உள்ளிட்டவர்கள் தயாரிக்கின்றனர். ஈஸ்வரியும் பழனிச்சாமி உள்ளிட்ட அழைக்க வேண்டியவர்களை பட்டியலிடுகிறார். இதனிடையே, செல்வி, கோபி சாரை அழைப்பீர்களா என்று கேள்வி எழுப்புகிறார். இதனால் கலகலப்பாக இருந்த அந்த இடம் இறுக்கமாக மாறுகிறது. ஆனால் ஈஸ்வரியோ தனக்கு கோபி என்ற பெயரில் யாரையும் தெரியாது என்றும், தெரியாதவர்களை தன்னுடைய கணவன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏன் அழைக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்புகிறார்.
எழில் வருவாரா?: இதனிடையே, எழிலை அழைப்பது குறித்து ஈஸ்வரி கேள்வி எழுப்ப, இது அவன் வீட்டுக் கொண்டாட்டம் என்றும் இதற்கு அவனை தனியாக அழைக்க வேண்டியதில்லை என்றும் பாக்கியா திட்டவட்டமாக கூறுகிறார். இந்த விழாவில் கலந்துக் கொள்வது குறித்து எழிலே முடிவு செய்துக் கொள்ளட்டும் என்றும் பாக்கியா கூறுகிறார். எழிலை தடாலடியாக தூக்கிப் போட்டு விட்டதாக ஈஸ்வரி பாக்கியாவை குற்றம் சாட்டுகிறார். பெற்ற பையனையே எதிரி போல நடத்துவதாகவும் கூறுகிறார். இதனிடையே, ஈஸ்வரி எழிலுக்கு கால் செய்து விழா குறித்து பேசுவதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது.
ராதிகா கோபம்: இதனிடையே, ஜெனி இரண்டாவது குழந்தைக்காக கர்ப்பமாக உள்ளது குறித்து ராதிகாவிடம் கோபி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுததுகிறார். ஆனால் ராதிகா எந்தவிதமான ரியாக்ஷனும் காட்டாத நிலையில் கோபி இதுகுறித்து கேள்வி எழுப்புகிறார். ஆனால் அந்த வீட்டில் நடக்கும் இன்ப துன்பங்களை வைத்தே கோபி தன்னுடைய மூடை மாற்றிக் கொள்வதாக ராதிகா குற்றம் சாட்டுகிறார். ஈஸ்வரி, இனியா, எழில் பிரச்சினைகளை கூறி மூஞ்சியை தூக்கி வைத்திருந்த கோபி, தற்போது செழியன் விஷயத்தால் சந்தோஷமடைந்துள்ளதாகவும் அவருக்கு தான் யார் என்றும் ராதிகா கேள்வி எழுப்புவதாக இன்றைய எபிசோட் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











