Bharathi kannamma 2: வீட்டின் வாசலில் கூடாரம்.. பாரதியின் ஒருவார சவால்.. அப்ப சீரியல் முடியுதா?
சென்னை: விஜய் டிவியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் சீரியல்களில் ஒன்றாக உள்ளது பாரதி கண்ணம்மா 2.
கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் இந்தத் தொடரின் இரண்டாவது சீசன் துவங்கியது. முற்றிலும் மாறுபட்ட கிராமத்து கதைக்களத்தில் இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது தன் அம்மாவின் விருப்பத்தை மீறி தான் நினைத்தபடியே கண்ணம்மாவை திருமணம் செய்துக் கொள்கிறார் பாரதி.

விரைவில் நிறைவடையும் பாரதி கண்ணம்மா 2 தொடர்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருந்தது பாரதி கண்ணம்மா. இந்தத் தொடரில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் ஒரே மாதிரியான கதைக்களம் இந்தத் தொடரை ரசிகர்களின் விருப்பத்திலிருந்து விலக்கி வைத்தது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட இயக்குநர், கடத்தல் உள்ளிட்ட பல விஷயங்களை இந்த சீரியலில் புகுத்திப் பார்த்தார். ஆனாலும் வொர்க் அவுட் ஆகாததால், உடனடியாக சீரியலை நிறுத்திவிட்டு கடந்த பிப்ரவரியில் தொடரின் இரண்டாவது சீசனை துவக்கினார்.
முந்தைய சீசனை போல இல்லாமல் முற்றிலும் மாறுபட்ட கிராமத்து கதைக்களத்தில், முதல் சீசனின் ஹீரோ அருணுக்கு பதிலாக சிபு சூர்யன் இந்த சீசனில் ஹீரோவாக களமிறங்கினார். கண்ணம்மா மீதான காதலால், தன்னை சிறப்பாக்கிக் கொள்ளும் பாரதி, தொடர்ந்து அவரது காதலுக்காக பல முயற்சிகளை செய்து காதலையும் பெறுகிறார். ஆனால் அவருக்கு எதிராக அவரது அம்மாவே செயல்படும்படி சூழ்நிலை ஏற்படுகிறது.
தன்னை விபத்திலிருந்து காப்பாற்றி, முகத்தில் தீக்காயம் பெறும், வெண்பாவிற்கு சிறப்பான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் வகையில் பாரதிக்கும் வெண்பாவிற்கும் திருமணம் செய்து வைப்பதாக வாக்கு கொடுக்கிறார் சவுந்தர்யா. ஆனால் முன்னதாக கண்ணம்மா மீது காதல் வயப்படும் பாரதி, வெண்பாவை ஏற்க மறுக்கிறார். இதனால் ஏற்படும் குளறுபடியை தீர்க்க, பாரதியை மிரட்டி, வெண்பாவுடன் நிச்சயதார்த்தம் செய்து வைக்கிறார் சவுந்தர்யா.
தன்னுடைய அம்மாவின் வார்த்தையை மீற முடியாமல் நிச்சயதார்த்தத்திற்கு சம்மதிக்கும் பாரதி, தொடர்ந்து இதேபோல நடக்கவிருக்கும் திருமணத்திலிருந்து தப்பிக்க, பாரதியை வற்புறுத்தி திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார். தன்னுடைய தந்தை, பாரதியின் அம்மா சவுந்தர்யா ஆகியோரை கருத்தில் கொண்டு முதலில் மறுக்கும் கண்ணம்மா, பாரதி, கத்தியால் கையை அறுத்துக் கொள்ள பரிதவிப்புடன் சம்மதிக்கிறார். திருமணமும் நடக்கிறது.

முன்னதாக அதே இடத்தில் வெண்பாவிற்கும் பாரதிக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்திருக்கும் சவுந்தர்யா, இந்த விஷயத்தை கேள்விப்பட்டு, தன்னுடைய மகனை திட்டித் தீர்க்கிறார். தொடர்ந்து தன்னுடைய மகன் அம்மா -மகன் சொந்தம் கொண்டாடிக்கொண்டு வீட்டிற்கு வரக்கூடாது என்று ஆத்திரத்துடன் கூறிவிட்டு வீட்டிற்கு திரும்புகிறார். அங்கு வெண்பா உள்ளிட்டோரை எதிர்கொள்ள முடியாமல் பரிதவிக்கிறார்.
இதனிடையே, திருமணம் முடிந்து கண்ணம்மாவுடன் வீட்டிற்கு வரும் பாரதிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்று சவுந்தர்யா தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் பாரதி, கண்ணம்மாவை அவர் ஒரு வாரத்திற்குள் ஏற்கும்படி செய்வதாக சவால் விட்டுவிட்டு அவர்களது வீட்டிற்கு வெளியில் டென்ட் அடித்து அதில் கண்ணம்மாவுடன் தங்குகிறார்.
விஜய் டிவியில் அதிகமான புதிய தொடர்கள் ஒளிபரப்பப்பட உள்ளதாகவும் சரியாக போகாத சீரியல்களை சேனல் முடித்து வைக்கவுள்ளதாகவும் அதில் பாரதி கண்ணம்மா 2 தொடரும் ஒன்று என்றும் கூறப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்தில் கண்ணம்மாவை அம்மா ஏற்கும்படி செய்கிறேன் என்று பாரதி சவால் விட்டுள்ளதால், இன்னும் சில தினங்களில் தொடர் நிறைவடைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சீரியல் துவங்கி 5 மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளதால், தொடர் பிக்கப்படைய இன்னும் சிறிது காலம் கொடுக்கலாம் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











