நல்லா சம்பாதிச்சிட்டாங்க.. என்னை சொம்புன்னு சொல்வாங்க.. யாரை சொல்கிறார் கோமாளி சரத்?
சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொடர்ந்து ஐந்து சீசன்களாக பங்கேற்று வந்த ஆங்கர் மணிமேகலை, இந்த சீசனில் விலகும் முடிவை எடுத்துள்ளார். அவரது இந்த முடிவுக்கு காரணம் பிரியங்கா தான் என்று மறைமுகமாக அவர் கூறிய நிலையில் பிரியங்காவிற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்த வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த விஷயத்தில் சிலர் பிரியங்காவிற்கு ஆதரவாக பேசிய நிலையில் அவர்களை சொம்புகள் என்று மணிமேகலை வீடியோ மூலம் கூறியதையும் பார்க்க முடிந்தது. இந்த விவகாரம் பல நாட்களைக் கடந்தும் தொடர்ந்து முடிவு பெறாமல் நீண்டு வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் சரத் பேசியுள்ளார்.

ஆங்கர் மணிமேகலை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு, அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகும் முடிவை மணிமேகலையிடம் ஏற்படுத்தியுள்ளது. பணம், புகழை காட்டிலும் சுயமரியாதை முக்கியம் என்று மணிமேகலை இதற்கு காரணமாக கூறியுள்ளார். இதையடுத்து ஏறக்குறைய அனைத்து தரப்பினரும் மணிமேகலைக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் பிரியங்கா தரப்பு நியாயத்தையும் எடுத்துக் கூறி வருகின்றனர். இது குறித்து வீடியோ வெளியிட்ட மணிமேகலை, இந்த விஷயத்தில் தனக்கு தெரியாத பலரும் தனக்கு ஆதரவாக பேசி வரும் சூழலில் தன்னுடன் நெருங்கி பழகிய சிலர் தனக்கு எதிராக பேசியுள்ளதாகவும் அவர்கள் சொம்புகள் என்றும் தெரிவித்துள்ளார்.
கோமாளி சரத் பேச்சு: இந்த விஷயம் அடுத்தடுத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் சூழலில், இது குறித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் சரத்திடம் கேள்வி கேட்கப்பட்டது. சட்டம் என் கையில் படத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், இது நாட்டிற்கு தேவையில்லாத பிரச்சினை என்றும் சில ஈகோ பிரச்சனைகளால் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் நாம் தலையிடுவது சரி இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் இந்த விஷயத்தில் நாம் ஏதாவது கருத்து கூறினால் நமக்கு சொம்பு என்ற பெயர் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வீடியோ மூலம் ஆதாயம்: இதன் மூலம் அவர் பிரியங்காவிற்கு ஆதரவாகவும் மணிமேகலைக்கு எதிராகவும் பேசியுள்ளது தெரிகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆதாயம் தேடும் வகையில் வீடியோ வெளியிடப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் அவர்கள் அதிகமாக சம்பாதித்து வருவதாகவும் சரத் மேலும் தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் பலரும் பலவித கருத்துக்களை கூறி வீடியோ வெளியிட்டு வரும் நிலையில் இதை வெளியிலிருந்து பார்க்கும் நாம் தான் ஏமாளிகளாக மாறியுள்ளதாகவும் சரத் கூறியுள்ளார். இது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை என்றும் சரத் தெரிவித்துள்ளார்.
சரத் மீது விமர்சனம்: மக்கள் நம்மை மறந்துவிட்டார் என்பதற்காககூட இந்த மாதிரி எல்லாம் பேசியிருக்கலாம் என்றும் மணிமேகலையின் பெயரை சுட்டிக் காட்டாமல் தொடர்ந்து சரத் கூறியுள்ளார். இதையடுத்து குக் வித் கோமாளியில் தொடர்ந்து தனக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக சரத் இப்படி மணிமேகலைக்கு எதிராக பேசுவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக இந்த விஷயத்தில் விஜய் டிவியின் ஆங்கர்கள் பலரும் பேசியுள்ளனர். ஆனாலும் பிரியங்கா தரப்பிலிருந்து எந்தவிதமான விளக்கமோ வீடியோவோ வெளியாகாத நிலை காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











