Kizhakku vaasal serial: கேப்பசீனோ காபியில் விஷம்.. தட்டிவிட்ட ரேணுகா!
சென்னை: விஜய் டிவியின் சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்துவரும் தொடராக மாஸ் காட்டி வருகிறது கிழக்கு வாசல். இயக்குநர் எஸ்ஏசி, ரேஷ்மா, வெங்கட், ஆனந்த் பாபு என முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள இந்தத் தொடரை நடிகை ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரித்து வருகிறது. இரவு நேரத்தில் தன்னுடைய ஒளிபரப்பை துவங்கிய இந்தத் தொடர், பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் பகல் நேரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி கூடிய விரைவில் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் பிரைம் டைமிற்கு மாற்றப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
இரண்டு மகன்களின் தந்தையான சாமியப்பன், ரேணுகா என்ற பெண்ணை கோயிலில் கண்டெடுத்து வளர்த்து வருகிறார். தன்னுடைய சொந்த மகளாகவே நினைத்து ரேணுகாவின் சிறப்பான வாழ்க்கைக்காக அனைத்து விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார் சாமியப்பன். இதனால் வெளியில் மட்டுமில்லாமல் தன்னுடைய மகன், மருமகள் ஆகியோரின் வெறுப்பையும் சம்பாதித்து வருகிறார். இதனால் அவரது குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது. இது மட்டுமில்லாமல் அவரது கிழக்கு வாசல் வீட்டை அடைய முயலும் அவரது மச்சான் தயாளனாலும் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படுகின்றன.

லீட் கேரக்டரில் எஸ்ஏசி: இரண்டு மகன்களின் தந்தையான சாமியப்பன், குழந்தையாக ரேணுகாவை கோயிலில் கண்டறிந்து வளர்த்து வருகிறார். இதனால் அவருக்கு அதிகமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இருந்தபோதிலும் யாருக்காகவும் தன்னுடைய மகளை விட்டுக் கொடுக்காமல் அவரது மகிழ்ச்சியான வாழ்க்கைக்காக பல விதங்களில் அவர் அடுத்தடுத்த செயல்களில் ஈடுபடுகிறார். தன்னுடைய மகளை வழக்கறிஞராக்க கடன் வாங்கும் சாமியப்பன், தொடர்ந்து அவரது திருமணத்திற்காக வீட்டை வைத்து 20 லட்சம் கடன் வாங்குகிறார். அந்த திருமணம் தயாளனின் சூழ்ச்சியால் நிற்கிறது.
அடுத்தடுத்த சூழ்ச்சிகள்: இதையடுத்து தன்னுடைய மகன் வங்கியில் கையாடல் செய்ய, அதையும் தீர்க்கிறார். இதனால் அவரது கடன் சுமை 26 லட்சமாக உயர்கிறது. அவரது கிழக்கு வாசல் வீட்டை கையகப்படுத்தும் முயற்சியில் அவரது மச்சான் தயாளன் அடுத்தடுத்த சூழ்ச்சிகளில் ஈடுபடுகிறார். அதன் ஒரு பகுதியாகவே அர்ஜூன் -ரேணுகா திருமணத்தை சூழ்ச்சியால் நிறுத்துகிறார். ஒருகட்டத்தில் தன்னுடைய மகன் அர்ஜூனுக்கு மூத்த வழக்கறிஞர் பாஞ்சாலியின் மகள் அனுவை திருமணம் செய்ய முயற்சிக்கிறார். இறுதிகட்டத்தில் ரேணுகாவை ஸ்டேட்டசை காரணம் காட்டி திருமணம் செய்யாமல் அர்ஜூன் விலகியது குறித்து தெரியவர அந்த திருமணத்தை அனு நிறுத்துகிறார்.
கேப்பசீனோவில் விஷம்: இதனால் தயாளன், அர்ஜூன் குடும்பத்தினர் அவமானத்துடன் வெளியேறுகின்றனர். இந்நிலையில் தன்னை அவமானப்படுத்திய அனுவை கொலை செய்ய முயற்சிக்கிறார் அர்ஜூன். ஏற்காட்டிற்கு சண்முகம், ரேணுகாவுடன் அனு சென்ற நிலையில், அங்கு அனு குடிக்க ஆர்டர் செய்த கேப்பசீனோ காபியில் விஷத்தை கலக்க ஏற்பாடு செய்கிறார் அர்ஜூன். இது தெரியாமல் அதை குடிக்க அனு முயற்சிக்க, அங்கு வரும் ரேணுகா, தெரியாமல் அந்த காபியை கீழே கொட்டி விடுகிறார். இதனால் அனு காப்பாற்றப்படுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











