ஒடிஞ்சு விழுந்துடுவேனோன்னு ஃபீல் பண்ணியிருக்கேன்.. நீயா நானா ஷோவில் உண்மையை உரக்க சொன்ன இயக்குநர்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி டாக் ஷோவாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் நீயா நானா ஷோவின் இந்த வார எபிசோட் மிகச் சிறப்பான தலைப்புடன் ரசிகர்களை எதிர்கொள்ளவுள்ளது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் நீயா நானா ஷோவின் இந்தவார எபிசோடின் அடுத்தடுத்த ப்ரோமோக்களை விஜய் டிவி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த நிகழ்ச்சியின் பிரமோவில் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துவரும் வாழை படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் பங்கேற்று தன்னுடைய சிறுவயது சுமைகளை பகிர்ந்துள்ளார். சிறுவயதில் தான் வாழைத்தார் தூக்கியது குறித்து அவர் தன்னுடைய மனத்தாங்கலை பகிர்ந்துள்ளார்.

நீயா நானா ஷோ: விஜய் டிவியின் நீயா நானா ஷோ தொடர்ந்து பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்த இனிப்பான செய்தி தான், இந்த நிகழ்ச்சி வாரந்தோறும் வித்தியாசமான தலைப்புடன் ரசிகர்களை சந்தித்து வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடாத தலைப்பே கிடையாது எனும்படியாக வாரம் தோறும் ரூம் போட்டு யோசித்து நிகழ்ச்சியின் அடுத்தடுத்த தலைப்புகளை நிகழ்ச்சி குழுவினர் கொடுத்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சுவாரசியமாக நிகழ்ச்சியின் ஆங்கர் கோபிநாத் காணப்படுகிறார். நிகழ்ச்சியின் தலைப்பு ஒரு புறம் சுவாரசியமாக இருக்கும் நிலையில் மறுபுறம் நிகழ்ச்சியை போட்டியாளர்களின் வழியிலேயே பயணம் செய்து மேலும் சுவாரசியமாக்கி வருகிறார் கோபிநாத்.
இந்த வார எபிசோட்: இந்நிலையில் இந்த வார எபிசோடும் மிகவும் சுவாரசியமாக காணப்பட்டது. படித்துக் கொண்டே வேலைக்கு போகும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என்பதாக இந்தவார தலைப்பு காணப்பட்டது. சிறுவயதிலேயே பளு தூக்கும் தொழிலையும் செய்யும் மாணவர்கள் மற்றும் தன்னுடைய குழந்தையின் வாழ்க்கையை கெடுத்து விட்டேனோ என்ற ஆதங்கத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெற்றோரை இந்த நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. தனக்கும் அம்மா இருந்திருந்தால் தன்னை இதுபோல வேலைக்கு போக விட்டிருக்க மாட்டார் என்பதாக இளம்பெண் ஒருவர் மனத்தாங்கலை வெளிப்படுததியதை பார்க்க முடிந்தது.
மாரி செல்வராஜ் பங்கேற்பு: இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரபல இயக்குனர் மாரி செல்வராஜ் பங்கேற்று தன்னுடைய சொந்த அனுபவத்தை நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளார். தன்னுடைய அம்மாவின் சுமையை குறைக்கும் வகையில் தான் தார் தூக்கம் வேலையை சிறுவயதிலேயே பழகியதாகவும் பல நேரங்களில் தான் ஒடிந்து விழுந்து விடுவேனோ என்ற ஃபீலிங் இருந்ததாகவும் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். தொடர்ந்து இந்த தார் தூக்கும் பழக்கம் தான் படிக்கவில்லை என்றாலும் சென்னைக்கு சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை தனக்கு கொடுத்ததாகவும் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
வாழை படம்: தன்னுடன் பிறந்தவர்கள் 5 பேர் எனவும் அதில் ஒரு அக்கா இறந்துவிட்டதாகவும் அவரை மையமாக வைத்தே வாழை படத்தை தற்போது இயக்கியுள்ளதாவும் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். அப்பா -அம்மா கூலி வேலை செய்யும்நிலையில், தாங்கள் இல்லையென்றாலும் உழைக்க கற்றுக் கொடுப்பதே சிறுவயதில் வேலைக்கு அனுப்புவதன் அடிப்படை என்றும் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். மொத்தத்தில் மிகவும் செண்டிமெண்டாகவும் சுவாரசியங்கள் நிறைந்ததாகவும் இந்த வார நீயா நானா ஷோ காணப்படுகிறது. இதன் அடுத்தடுத்த ப்ரோமோக்களை விஜய் டிவி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











