Pandian stores 2: சரவணன் -தங்கமயில் திருமணம்.. நடைபெறுமா.. தடைபடுமா.. கேள்வியை எழுப்பிய சம்பவம்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர். இந்தத் தொடரின் அடுத்தடுத்த எபிசோட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று வருகின்றன. தொடர்ந்து சேனலின் 3வது முன்னணி தொடராக ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
தற்போது சரவணன் -தங்கமயில் திருமணத்தையொட்டிய அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. திருமணத்திற்கான ஜவுளிகளை எடுப்பதற்காக ஒரு லட்சம் பட்ஜெட் போட்டிருந்தார் பாண்டியன். ஆனால் 3 லட்சத்தி 28 ஆயிரம் ரூபாய்க்கு ஜவுளி செலவு மட்டுமே இழுத்து விட்டுவிட்டது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான பரபரப்பான ப்ரமோ வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்துவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார ப்ரமோ வெளியாகியுள்ளது. சரவணன் மற்றும் தங்கமயில் திருமணத்திற்கான அடுத்தடுத்த ஏற்பாடுகள் நடந்த சூழலில் ஜவுளி எடுப்பதற்காக 1 லட்சம் பட்ஜெட் போடுகிறார் பாண்டியன். ஆனால் அங்கு நடந்ததோ வேறு. தங்கமயிலின் முகூர்த்த புடவைக்கான செலவு மட்டுமே 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கு எடுக்கப்பட, இதனால் மொத்த செலவும் 3 லட்சத்து 28 ஆயிரத்திற்கு இழுத்து விட்டுவிட்டது. இதனால் ஒரு கணம் பாண்டியனுக்கு ஹார்ட் அட்டாக்கே வரும் சூழல் ஏற்பட்டது.
தடபுடல் திருமண ஏற்பாடுகள்: சரியான திட்டமிடலுடன் தன்னுடைய குடும்பத்தை வழிநடத்தி வருகிறார் பாண்டியன். ஆனால் தன்னுடைய அப்பா, சரவணன் திருமணத்திற்காக செய்யும் செலவை பார்த்து கதிர் மற்றும் செந்தில் இருவரும் மலைப்பதாக காணப்பட்டது. இந்நிலையில், செலவு அதிகமாக ஆனாலும், தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து பார்க்கும் சந்தோஷம் மிகப்பெரியது என்று பாண்டியன் கூறுவதையும் பார்க்க முடிந்தது. தொடர்ந்து தெருவை அடைந்து பந்தல், சீரியல் லைட்ஸ், வாழைமரம் என தடபுடல் செய்கிறார் பாண்டியன். இந்நிலையில் இந்த வாரத்திற்கான பிரமோ தற்போது வெளியாகியுள்ளது.
முற்றுகையிட்ட கடன்காரர்கள்: இதில் தங்கமயில் குடும்பத்தினர் திருமணத்திற்கு தயாராவதாகவும் தொடர்ந்து அங்குவரும் கடன்காரர்கள், தங்கமயிலின் அம்மா, அப்பாவிடம் பெண்ணின் திருமணத்தை நடத்த பணம் இருக்கிறது, ஆனால் வாங்கிய கடனை திரும்பி தர முடியவில்லையா என்று கேள்வி எழுப்புகின்றனர். கடனை திருப்பி தந்தால்தான், தாங்கள் அந்த இடத்திலிருந்து நகர்வோம் என்றும் உறுதியுடன் கூறுகின்றனர். இதையடுத்து அவர்களிடம் கெஞ்சி பேசும் தங்கமயிலின் பெற்றோர், திருமணம் முடிந்து ஒரே வாரத்தில் கடனை திரும்பி தந்து விடுவதாகவும் திருமணத்தை நடத்த விடுமாறும் கெஞ்சுகின்றனர். ஆனால் அவர்கள் மனமிறங்குவதாக தெரியவில்லை.
திருமணம் நடக்குமா?: இந்நிலையில், பெண் வீட்டிற்கு பாண்டியன் குடும்பத்தினர் அனைவரும் சீர்வரிசைகளுடன் வந்து இறங்குகின்றனர். இதை பார்க்கும் பாக்கியம் பதறுகிறார். இதனிடையே, தன்னுடைய திருமணம் இனி நடக்காது என்று தங்கமயிலும் கதறுவதாக இந்த ப்ரமோவில் காணப்பட்டது. இந்நிலையில் கடன்காரர்கள், இவர்கள்தான் மாப்பிள்ளை வீட்டார்களா என்று அவர்கள் எதிரிலேயே கேட்கின்றனர். இதை அதிர்ச்சியுடன் மீனா, ராஜி மற்றும் குழலி ஆகியோர் பார்க்கின்றனர். இதனால் திட்டமிட்டபடி சரவணன் -தங்கமயில் திருமணம் நடக்குமா அல்லது தடைபடுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











