Pandian stores 2 serial: இன்னைக்கு இம்புட்டு அழகா இருக்குற.. கோமதியிடம் பாண்டியன் ரொமான்ஸ்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த சீரியல் துவங்கப்பட்டு தொடர்ந்து அதிக டிஆர்பி புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த வார பிரமோவில் இதுவரை இல்லாத திருநாளாக கோமதிக்கு வீடியோ காலில் பாண்டியன் பேசுகிறார்.
பாண்டியன் அநாதையாக வளர்ந்ததால் தன்னுடைய பாசத்தை அவருக்கு காண்பிக்க தெரியவில்லை என்று முன்னதாக கோமதி தன்னுடைய மகன்களிடம் கூறிய நிலையில், தற்போது அதை நிரூபிக்கும் வகையில் பிரமோவில் அடுத்தடுத்த காட்சிகள் காணப்பட்டன. பாண்டியன் கோமதியிடம் ரொமான்ஸ் செய்ய, அதை மீனா மற்றும் ராஜி இருவரும் கலாய்ப்பதாகவும் இந்த பிரமோவில் காணப்பட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய்டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து முன்னணி சீரியல்கள் வரிசையில் இடம் பெற்று வருகிறது. வாரந்தோறும் டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று முன்னணியில் தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் முந்தைய சீசனில் அண்ணன் மற்றும் தம்பிகளின் பாசத்தை மையமாகக் கொண்டு கதைக்களம் அமைக்கப்பட்ட நிலையில் தற்போது 2வது சீசனில் அப்பா மற்றும் மகன்களின் உறவை மையமாகக் கொண்டு அடுத்தடுத்த காட்சிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த வார ப்ரமோ: சிறுவயதில் அநாதையாக வளர்ந்த பாண்டியன், கண்டிப்புடன் கஞ்சத்தனத்தையும் மிக்ஸ் செய்த அப்பாவாக காணப்படுகிறார். இந்த கேரக்டரில் ஸ்டாலின் நடித்து வருகிறார். இவர் முதல் சீசனில் மூத்த அண்ணனாக நடித்து மாஸ் காட்டியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை நிரோஷா நடித்து வருகிறார். முதல் சீசனில் இடம் பெற்றிருந்த வெங்கட், ஹேமா ஆகியோரும் இரண்டாவது சீசனில் பட்டையை கிளப்பி வருகின்றனர். இதில் வெங்கட் சமீபத்தில் தான் சீரியலில் இணைந்தார். இந்நிலையில் இந்த வாரத்திற்கான பிரமோ தற்போது வெளியாகி உள்ளது.
பாண்டியனிடம் கோமதி கோபம்: இதில் தன்னுடைய மருமகள் தங்கமயில் அனுப்பிய ஹனிமூன் போட்டோஸ் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளதாக பாண்டியன் கால் செய்து பாராட்டு தெரிவிக்கிறார். இதனால் கோமதி கோபமடைகிறார். தானும் புள்ளையார்பட்டி கோயிலுக்கு சென்று விட்டு வந்து அதன் புகைப்படங்களை அனுப்பிய நிலையில் அது குறித்து பாண்டியன் எந்த பாராட்டும் கூறவில்லை என்றும் தற்போது தன்னுடைய மருமகளை மட்டும் பாராட்டுவதாக கோமதி கோபம் கொள்கிறார். இதைக் கேட்டு யோசிக்கும் பாண்டியன் தன்னுடைய மச்சான் பழனிவேலிடம் சென்று தனக்கு வீடியோ கால் போட்டு தருமாறு கூறி தன்னுடைய மனைவிக்கு முதல் முறையாக வீடியோ காலில் பேசுகிறார்.
அலறிய கோமதி: பாண்டியன் காலை எடுக்கும் கோமதி, அவர் முகத்தை மிகவும் கிட்டத்தில் வைத்து பேசுவதையடுத்து பயந்து அலறுவதாக காணப்படுகிறது. இதையடுத்து தான்தான் என்று கூறிவிட்டு பாண்டியன் பேசத் துவங்குகிறார். இன்றைய தினம் கோமதி மிகவும் அழகாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார். இதையடுத்து கோமதி வெட்கப்படுகிறார். தொடர்ந்து சமையல் அறைக்கு வரும் ராஜி மற்றும் மீனா இருவரும் ரொமான்சா என்று கோமதியை கலாய்ப்பதாக இந்த வார பிரமோவில் காணப்பட்டது. முன்னதாக கோமதி கூறியது போல பாண்டியன் அனாதையாக வளர்ந்ததால் தன்னுடைய அன்பை பகிர்ந்து கொள்ளும் சூட்சுமம் தெரியாமல் உள்ளதாக தற்போது இந்த ப்ரோமோ மூலம் தெரிய வருகிறது.


Click it and Unblock the Notifications











