Pandian stores 2 serial: தவிப்பில் சரவணன்.. பாண்டியனுக்கு தெரியாமல் கல்லாவில் கைவைக்கும் கதிர்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில், பணம் செலுத்த முடியாமல் ஹோட்டலுக்குள் செல்ல முடியாமல் வாசலிலேயே சரவணன் மற்றும் தங்கமயில் இருவரும் பரிதவிக்கின்றனர். இதையடுத்து அவர்களுக்கு பணம் ஏற்பாடு செய்யும் முயற்சியில் செந்தில், கதிர் மற்றும் பழனிவேல் ஆகியோர் ஈடுபடுகின்றனர்.
மீனாவிடம் பணம் கேட்கிறார் செந்தில், அவரும் தருவதற்கு முன்வருகிறார். ஆனால் தன்னுடைய அண்ணனின் சூழலை செந்தில் கூறியவுடன், தங்கமயில் வேண்டுமென்றே தான் இதை செய்திருப்பார் என்று குற்றம் சாட்டும் மீனா, அவருக்கென்றால் தான் பணம் தர மாட்டேன் என்று மறுக்கிறார். இந்த விஷயம் தெரிந்தால் கண்டிப்பாக தன்னுடைய மாமனாரிடம் தான் வாங்கிக் கட்டிக் கொள்வேன் என்றும் கூறுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக துவக்கம் முதலே மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலில் அப்பா மற்றும் மகன்களின் உறவு குறித்த கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார் இயக்குநர். தன்னுடைய மகன்களிடம் அனைத்து விஷயங்களிலும் கறாராகவும் கண்டிப்புடனும் நடந்துக் கொள்ளும் பாண்டியன், அனைத்து அப்பாக்களின் பிரதிநிதியாகவே காட்டப்படுகிறார். ஆனால் அதே நேரத்தில் தன்னுடைய மகன்கள் குறித்த அக்கறை மற்றும் அவர்களின் எதிர்காலம் குறித்த கவலை என அனைத்தையும் அப்பட்டமாக காட்டி, நிஜ அப்பாவாகவே இந்த சீரியலில் காட்சியளிக்கிறார் பாண்டியன்.
அதிகப்படியான கண்டிப்பு: ஆனாலும் அவர் காட்டும் அதிகப்படியான கண்டிப்பு சமயத்தில் அவர்களது மகன்கள் மட்டுமில்லாமல் நமக்கும் தொற்றிக் கொள்கிறது. இது கொஞ்சம் ஓவர்தான் பாண்டியன் என்று கத்தி கூற வைக்கிறது. முன்னதாக சென்னை சென்ற செந்தில் மற்றும் மீனாவின் பயணத்தை முற்றிலுமாக சொதப்பினார் பாண்டியன். தற்போது தானே பார்த்து திருமணம் செய்து வைத்த தன்னுடைய மூத்த மகன் சரவணன் மற்றும் தங்கமயிலுக்கு சொற்பமான பணத்தையே கொடுத்து அனுப்புகிறார். இதில் தவறாக ஹோட்டலை புக் செய்து, அது தெரியவந்தும் தன்னுடைய அம்மாவின் ஆலோசனைப்படி அதை மறைக்கிறார் தங்கமயில்.
நடுத்தெருவில் சரவணன்: இதையடுத்து சென்னையில் ஹோட்டலுக்கு கட்ட வேண்டிய 21,000 ரூபாயை கட்ட முடியாமல் ஹோட்டல் வாசலிலேயே தவமிருக்கிறார் சரவணன். தான் தெரியாமல் செய்துவிட்டதாக ஒப்பாரி வைக்கும் தங்கமயிலை சமாதானப்படுத்துகிறார். தன்னுடைய மகளை நடுத்தெருவில் நிறுத்தி விட்டீர்களே என்று புலம்பும் மாமியார் பாக்கியத்தையும் சமாளிக்கிறார். ஒப்புக்கு பணம் அனுப்புவதாக கூறினாலும், தன்னுடைய மாமனாரிடமும் அந்தப் பணத்தை வேண்டாம் என்று தன்மானத்துடன் கூறி நிராகரிக்கிறார். தன்னுடைய அப்பாவிடம் விஷயத்தை கூற முடியாமல் தன்னுடைய தம்பிகளின் உதவியை நாடுகிறார்.

பணம் கொடுக்க மறுக்கும் மீனா: தன்னுடைய அண்ணனின் இந்த பரிதவிப்பை புரிந்துக் கொள்ளும் கதிர், செந்தில் மற்றும் சித்தப்பா பழனிவேல், ஆளாளுக்கு பணத்தை ஏற்பாடு செய்ய முயல்கின்றனர். இதனிடையே, தன்னுடைய மனைவி மீனாவிடம் பணம் கேட்கிறார் செந்தில். அவருடைய தேவைக்கு என்று நினைத்து பணம் கொடுக்க முன்வரும் மீனா, விஷயத்தை கேள்விப்பட்டு, தங்கமயில் வேண்டுமென்றே தான் செய்திருப்பார் என்று கூறி பணம் கொடுக்க மறுக்கிறார். இதனிடையே, தன்னுடைய அக்காவிடம் வேறு காரணத்தை கூறி பழனிவேல் பணம் கேட்கிறார். ஆனால் மீனா அங்கேயே இருக்க, செந்தில் பழனிவேலை அங்கிருந்து நகர்த்தி உண்மையை கூறுகிறார்.
கல்லாவில் கைவைக்கும் கதிர்: இதனிடையே, கதிர் வேறு ஒரு திட்டத்துடன் அவர்களுடன் கடைக்கு வருகிறார். வந்தவர், தன்னுடைய அப்பாவின் மொபைலை எடுத்து மறைக்கிறார். உடன் தன்னுடைய அண்ணனுக்கு 10 ஆயிரம் ரூபாயை அனுப்புகிறார். முன்னதாக அவர் மேலும் 10 ஆயிரம் ரூபாயை அனுப்பிய நிலையில், மீதமுள்ள ஆயிரம் ரூபாயை கல்லாவில் இருந்து எடுக்கிறார். பாண்டியன் கடையில் இல்லாத நிலையில், அடுத்தடுத்த இந்த வேலைகளில் கதிர் ஈடுபடுகிறார். இதனால் செந்தில் மற்றும் பழனிவேல் இருவரும் என்ன நடக்குமோ என்று அதிர்ச்சியுடன் அவர் செய்யும் செயல்களை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த விஷயம் பாண்டியனுக்கு தெரியவந்தால் என்ன நடக்குமோ என்று அவர்கள் பரிதவிப்பதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications











