சென்னைக்கு கிளம்பிய செந்தில் -மீனா.. புறப்படும் நேரத்தில் செந்திலை கடுப்பாக்கிய பாண்டியன்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் சிறப்பாகவே அமைந்திருந்தது. செந்தில் மற்றும் மீனா இருவரும் சென்னை கிளம்பியுள்ளனர். மீனாவின் அலுவலகத்தின் ட்ரெயினிங்கிற்காக இருவரும் சென்னை சென்ற நிலையில், செந்திலின் கை செலவிற்கு பாண்டியன் கொடுத்த தொகையை பார்த்து அவர் அதிர்ச்சியடைகிறார்.
தொடர்ந்து அடுத்தடுத்த இயல்பான எபிசோட்களால் இந்த சீரியல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கறாரான மற்றும் கண்டிப்பான அப்பாவாக பாண்டியன், எதற்கெடுத்தாலும் புலம்பும் அவரது மனைவி கோமதி. தன்னுடைய கஞ்சத்தனத்தால் மகன்களையும் சேர்த்து கடுப்படிக்கும் பாண்டியன், தற்போது செந்திலிடம் அதே போல நடந்துக் கொள்கிறார்.

கில்லி பட காட்சி: விஜய்யின் கில்லி படத்தில் ஒரு காட்சி வரும், திருச்சிக்கு தன்னுடைய அப்பாவின் உறவினர் திருமணத்திற்கு விஜய் மட்டும் செல்லும் சூழல் வர, கையில் பணம் அனைத்தையும் எண்ணி முடிக்கும் அவரது அப்பா ஆஷிஷ் வித்யார்த்தி, 100 ரூபாய் எடுத்து கொடுப்பார். அதையும் பார்த்து செலவழிக்கும்படி கூறுவார். கத்தையா கொடுப்பாருன்னு பார்த்தா, ஒத்தையா கொடுத்துட்டாரே என்று விஜய் அங்கலாய்ப்பார். தொடர்ந்து திருமண பரிசாக கொடுத்த வெள்ளிக் குடத்தை வைத்து அவரது நண்பர்களுடன் மஜா செய்ய தீர்மானிப்பது வேறு கதை. இந்தப் படத்தின் தாக்கத்தை இன்றைய எபிசோடில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இயக்குநர் வெளிப்படுத்தியுள்ளார்.
செந்திலை புலம்பவிட்ட பாண்டியன்: மீனாவின் அலுவலக ட்ரெயினிங்கிற்காக மீனா மற்றும் செந்தில் இருவரும் சென்னை கிளம்பும் செந்திலுக்கு கை செலவிற்கு பணம் வேண்டாமா என அவரே கேட்கிறார் பாண்டியன். அவர் தன் கையிலிருந்த பணம் அனைத்தையும் எண்ணி முடிக்கும்வரையில் செந்தில் மிகவும் ஆர்வத்துடன் அதை பார்க்கிறார். தொடர்ந்து அதிலிருந்து 1000 ரூபாயை செந்திலிடம் கொடுக்கிறார் பாண்டியன். விஜய் புலம்புவதை போலவே கத்தையா கொடுப்பாருன்னு பார்த்தா, இப்படி செஞ்சிட்டாரா என்று செந்தில் புலம்புகிறார். பேருந்து நிலையத்திலும் தன்னுடைய தம்பி கதிரிடம் இதே புலம்பலை தொடர்கிறார்.
வழியனுப்ப வந்த சரவணன்: இதையடுத்து தன்னுடைய கையில் இருந்த 800 ரூபாயை செந்திலிடம் கொடுக்க முயல்கிறார் கதிர். பெரிய மனுஷன் மாதிரி கொடுக்கிறாயா என்று கேள்வி எழுப்பும் செந்தில் அதை மறுக்கிறார். மீனாவும் தான் பார்த்துக் கொள்வதாக கூறுவதாக இன்றைய எபிசோட் அமைந்தது. முன்னதாக தங்கமயிலுடன் இணைந்து சினிமாவிற்கு சென்ற சரவணனும், செந்தில் மற்றும் மீனாவை வழியனுப்புவதற்காக பேருந்து நிலையத்திற்கு ஓடி வருகிறார். அதற்குள் அவர்களின் பேருந்து சென்று விடுவதாக காணப்படுகிறது. இதையடுத்து அனைவரும் வீடு வந்து சேர்கின்றனர்.
திரையரங்கில் தூங்கிய சரவணன்: இதனிடையே, 1200 ரூபாய் செலவழித்து சினிமாவிற்கு சென்ற சரவணன், ஏசி காற்று குளிர்ச்சியாக இருந்ததால் பாதியிலேயே தூங்கி விட்டதாக கூறுகிறார். மேலும் அவர்கள் கொடுத்த ஸ்நாக்சையும் தான் பாதி சாப்பிட்டுவிட்டு மீதியை வைத்துவிட்டு வந்துவிட்டதாக அவர் கூற, பாண்டியன், பணத்தை இப்படி வேஸ்ட் செய்து விட்டாயே என்று புலம்புகிறார். ஆனால் தங்கமயில் தான் முழுப் படத்தையும் பார்த்ததாகவும் ஸ்நாக்சையும் ஒன்றுவிடாமல் சாப்பிட்டதாகவும் கூற அவருக்கு பாண்டியனிடமிருந்து பாராட்டு கிடைக்கிறது. இதையடுத்து, அவர் சென்றுவந்த சினிமாவின் முழுக் கதையையும் கேட்கிறார் பாண்டியன். அப்போதுதான் கொடுத்த காசுக்கு சரியாக இருக்கும் என்றும் கூறுகிறார். தங்கமயிலும் படத்தின் கதையை விவரிப்பதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











