Pandian stores 2: பழனிவேலுக்கு தெரியவந்த உண்மை.. அதிர்ச்சியில் உடைந்து போன புது மாப்பிள்ளை!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக கடந்த சில மாதங்களாக மாஸ் காட்டி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தற்போது பழனிவேலின் திருமணத்தையொட்டி காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. 40 வயதை நெருங்கிய நிலையில் அவருக்கு திருமணமாகாத நிலையில் அவரது திருமணத்தை நடத்தி வைக்க முயல்கிறார் பாண்டியன்.
ஆனால் தன்னுடைய தம்பிக்கு பாண்டியன் திருமணம் செய்து வைப்பதா என்ற ஈகோவில் அவரது திருமணத்தை அடுத்தடுத்து இல்லாததையும் பொல்லாததையும் கூறி நிறுத்துகின்றனர் அவரது அண்ணன்கள் முத்துவேல் மற்றும் பழனிவேல். இரண்டாவது முறையாக திருமணத்தை நிறுத்திய அவர்கள், பழனிவேலுக்கு பெண் பார்த்து திருமணத்தையும் நடத்தி வைக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் சீரியல்கள் அடுத்தடுத்து கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் தொடர்ந்து டிஆர்பியில் அதிகமான புள்ளிகளை பெற்று முன்னணி சீரியலாக இருந்து வருகிறது. இந்த சீரியலின் முதல் பாகமும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து முன்னணி இடத்தை பெற்றிருந்தது. இந்த சீரியலில் அண்ணன் -தம்பிகளின் பாசம் முதன்மையாக கொள்ளப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அப்பா மற்றும் மகன்களின் உறவை கதைக்களமாக கொண்டுள்ளார் இயக்குநர்.
பாண்டியன் -கோமதி தம்பதி: இந்த சீரியலில் அப்பா பாண்டியன் கேரக்டரில் ஸ்டாலினும் அவரது மனைவி கோமதியாக பிரபல நடிகை நிரோஷாவும் நடித்து வருகின்றனர். இவர்களின் மூன்று மகன்கள் மற்றும் 2 மகள்கள் இவர்களின் பகையாளிகளாக முத்துவேல், சக்திவேல் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இவர்களை வைத்து கதையை தொடர்ந்து சிறப்பாக கொடுத்து வரும் இயக்குநர், அடுத்தடுத்து திருமணங்களை வைத்தே இந்த சீரியலை சிறப்பாக்கி வருகிறார். செந்தில், கதிர், சரவணன் ஆகியோரின் திருமணங்கள் விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில் தற்போது பழனிவேலின் திருமணமும் அதிரடி திருப்பங்களுடன் நடந்து முடிந்துள்ளது.
பழனிவேல் திருமணம்: தன்னுடைய அக்காவின் மீதான பாசத்தின் காரணமாக அவர் காதல் திருமணம் செய்து அண்ணன்களில் கோபத்திற்கு ஆளான நிலையிலும் அவர்களது வீட்டில் இருக்கிறார் பழனிவேல். அவரது திருமணத்தை பாண்டியன் முன்னெடுத்த நிலையில் தன்னுடைய தம்பியின் திருமணத்தை அவர் நடத்துவதா என்ற ஈகோவால் அடுத்தடுத்து அந்த திருமணத்தை முத்துவேல் மற்றும் சக்திவேல் நிறுத்துகின்றனர். இதற்கான காரணம் தெரியாமல் பழனிவேல் மட்டுமில்லாமல் பாண்டியன் குடும்பத்தினரும் பரிதவிக்கின்றனர். இதனிடையே திருமண மேடை வரை வந்து பழனிவேலின் திருமணம் நிற்கிறது. ஆனால் அங்கு தங்களின் உறவுக்கார பெண்ணுடன் வரும் முத்துவேல் மற்றும் சக்திவேல் பழனிவேலுக்கு அவரை திருமணம் செய்து வைக்கின்றனர்.
பழனிவேலுக்கு தெரியவந்த உண்மை: தன்னுடைய திருமணம் நின்றதற்கான காரணமும், திருமணம் மற்றொரு பெண்ணுடன் நடந்ததற்கான காரணமும் தெரியாமல் பழனிவேல் பரிதவிக்கிறார். தன்னுடைய அக்கா, மாமா மற்றும் அக்கா மகன்களை பிரிந்து வாடுகிறார். இதனிடையே, தான் நடத்திவைக்க முயன்ற திருமணம் நின்றதற்கான காரணம் பாண்டியனுக்கு தெரிகிறது. அதுகுறித்து முத்துவேலின் குடோனுக்கு சென்று அவர் கேள்வி எழுப்புகிறார். பழனிவேலை அங்கிருந்து போக சொன்னாலும் அவருக்கு உண்மை தெரிவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதையடுத்து அவர் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். அவர் குடும்பம் நடத்த முடியாது என்று பெண் வீட்டாரிடம் அவரது அண்ணன்கள் கூறியதும் தெரியவருகிறது.
அதிர்ச்சியில் பழனிவேல்: இதையடுத்து தன்னுடைய அண்ணன்களிடம் கோபப்பட்டு அவர் அங்கிருந்து வெளியேறுகிறார். அவரை செந்திலும் கதிரும் சமாதானப்படுத்துகின்றனர். தங்களது ஈகோவிற்காக தன்னுடைய அண்ணன்கள் செய்த காரியத்தை அதிர்ச்சியுடன் கூறும் பழனிவேல், சந்தர்ப்பம் ஏற்பட்டால் தன்னுடைய தலையில் கல்லெறியவும் அவர்கள் தயங்க மாட்டார்கள் என்று அதிர்ச்சியுடன் கூறுவதாக இன்றைய எபிசோட் நிறைவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











