Pandian stores 2 serial: சாமியாராக மாறிய சரவணன்.. மயங்கி விழுந்த கோமதி.. இது என்ன வம்பா போச்சு!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் மூன்றாவது இடத்தை அதிக டிஆர்பியுடன் பிடித்து மாஸ் காட்டி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். இந்த சீரியலில் பாண்டியன் மற்றும் கோமதி தம்பதியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்கள் செந்தில் மற்றும் கதிரின் அடுத்தடுத்த திருமணங்களால் குடும்பத்தில் குழப்பங்கள், பிரச்சினைகள் ஏற்படுகிறது. மூத்த மகன் சரவணன் திருமணமும் கேள்விக்குறியாகிறது. அடுத்தடுத்த பெண் பார்க்கும் படலம் நடக்கும் நிலையில் அவரது திருமணம் நிச்சயமாகும் சூழலில் கோமதியின் இரண்டாவது அண்ணன் சக்திவேல் பெண் வீட்டாரிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லி அந்த திருமணங்களை நிறுத்துகிறார்.
இதனிடையே இன்றைய எபிசோடில் சரவணன் சாமியாராக மாறுவதாக காட்டப்பட்டுள்ளது. இதனால் கோமதி அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுவதாகவும் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளாவதாகவும் காட்டப்பட்டுள்ளது. சரவணனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கேக் வாங்கி வைத்துக்கொண்டு வீட்டினர் காத்திருக்கும் சூழலில் அவர் சாமியாராக மாறி வந்தது குடும்பத்தினரை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அவரை கோபத்துடன் பாண்டியன் பார்ப்பதாகவும் இன்றைய எபிசோடில் காணப்பட்டது. அவரது திருமணம் குறித்து பாண்டியன் சபதம் செய்துள்ள நிலையில் அவர் சாமியாராக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய இரண்டாவது சீசனை துவங்கியுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல். குறைவான காலகட்டத்திலேயே இந்த சீரியல் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தற்போது சேனலின் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முன்னதாக இந்த சீரியலின் முதல் சீசனும் ஏராளமான ரசிகர்களுக்கு கவர்ந்து டிஆர்பியில் அதிக புள்ளிகளை பெற்று முன்னணி சீரியலாக நடைபோட்டு வந்த நிலையில் தற்போது இரண்டாவது சீசனும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மாஸ் காட்டி வருகிறது. இந்த சீரியலில் அப்பா மற்றும் மகன்களின் பாசத்தை மையமாகக் கொண்டு அடுத்தடுத்த எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
பாண்டியன் -கோமதி தம்பதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் அப்பாவாக ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கோமதியாக நடிகை நிரோஷா ஆகியோர் நடித்து வருகின்றன. இவர்களுக்கு மூன்று ஆண் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். 28 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியன் மற்றும் கோமதி காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்த நிலையில் கோமதியின் அண்ணன்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து கோமதியிடம் விரோதம் பாராட்டி வருகின்றனர். இதனால் ஏற்படும் அடுத்தடுத்த பிரச்சினைகளும் இந்த சீரியலில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. தன்னுடைய குடும்பத்தை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார் பாண்டியன்.
அடுத்தடுத்த திருமணங்கள்: இதனிடையே பாண்டியனின் மகன்கள் செந்தில் மற்றும் கதிர் இருவரும் வெவ்வேறு சூழ்நிலைகளில் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் முடித்து வருகின்றனர். இதனால் குடும்பமே நிலை குலைகிறது. அடுத்தடுத்த தம்பிகளின் திருமணத்தால் மூத்த மகன் சரவணனின் திருமணம் பாதிப்பிற்கு உள்ளாகிறது. அவரது திருமணம் நிச்சயம்வரை வரும் சூழல்களில் கோமதியின் அண்ணன் சக்திவேல் பெண் வீட்டாரிடம் சரவணன் குறித்து அவதூறாக பேசி அந்த திருமணங்களை நிறுத்துகிறார். இதனால் பாண்டியன் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் மனவருத்தத்திற்கு உள்ளாகின்றனர்.
பாண்டியன் சபதம்: புதுமண தம்பதிகளான செந்தில் -மீனா கதிர் -ராஜி ஆகியோரும் சரவணனின் திருமணத்தையொட்டி சண்டையிட்டுக் கொள்வதையும் பார்க்க முடிகிறது. இந்நிலையில் தன்னுடைய மகனுக்கு ஐம்பது நாட்களில் திருமணம் செய்வேன் என்றும் அப்படி செய்யும் வரை தான் காலில் செருப்பு போட மாட்டேன் என்று பாண்டியன் சபதம் இடுகிறார். அவருக்கு சுகர் உள்ள நிலையில் காலில் செருப்பு போடாமல் நடப்பது அவரது உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கோமதி வருத்தம் கொள்கிறார். அவர் நினைத்ததற்கு ஏற்றாற்போல இருவரும் கோவிலுக்கு சென்ற போது பாண்டியன் காலில் முள் குத்தி அவருக்கு பிரச்சனையாகிறது.
முள்ளை உப்பால் எடுக்கும் மீனா: வீட்டிற்கு வரும் பாண்டியனின் காலில் இருந்த முள்ளை ராஜி சிறப்பான வைத்திய முறைப்படி எடுக்கிறார். கல் உப்பை வைத்து அவர் இந்த முள்ளை அதிகமான வலி ஏற்படாதவாறு எடுக்கிறார். அந்தப் பிரச்சினை தீர்கிறது. இந்நிலையில் திடீரென வீட்டிற்குள் தெய்வீக மனம் கமழ்வதாக ஆளாளுக்கு கூறுகின்றனர். தொடர்ந்து அங்கு சாமியாராக சரவணன் வருகிறார். இதை பார்க்கும் கோமதிக்கு மயக்கம் ஏற்படுகிறது. வீடு அல்லோல கல்லோலப் படுகிறது இதைக் கேட்டு எதிர் வீட்டில் இருக்கும் முத்துவேல், சக்திவேல் குடும்பத்தினர் பதற்றம் அடைகின்றனர். ராஜிக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்று அவர்கள் கவலை கொள்கின்றனர்.
சாமியாரான சரவணன்: ஆனால் அவர்கள் யாரும் வெளியில் எட்டிக்கூட பார்க்க கூடாது என்று சக்திவேல் கண்டிப்புடன் கூறுகிறார். இதனிடையே மயக்கம் தெளியும் கோமதி, மீண்டும் தன்னுடைய மகன் சரவணனின் சாமியார் கோலத்தை பார்த்து அதிர்ச்சி அடைவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. தன்னுடைய திருமணத்தால் அடுத்தடுத்து குடும்பத்தினர் கவலை கொள்வதை பார்த்து சரவணன் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். தன்னுடைய தம்பிகளுக்கு குற்ற உணர்ச்சியை கொடுக்க வேண்டாம் என்று அவர் தன்னுடைய அப்பா பாண்டியனிடமும் கேட்டிருந்தார். இந்நிலையில் தன்னுடைய திருமணத்தால் பிரச்சனை வருவதாக நினைத்து சரவணன் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











