Pandian stores 2: என்னது சரவணனைவிட தங்கமயில் ஒரு வயசு பெரியவங்களா.. உண்மை தெரிஞ்சா என்ன நடக்கும்?
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக சில வாரங்களிலேயே மாஸ்காட்டி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. தங்க மயிலை கல்யாண வைபோகம் நிகழ்ச்சி மூலமாக பெண் பார்த்து விட்டு வந்த பாண்டியன் மற்றும் கோமதி உள்ளிட்டவர்கள், ஒட்டுமொத்த குடும்பத்தோடு தங்கமயிலை அவர்களது வீட்டில் சென்று பெண் பார்க்கின்றனர். பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடித்துப் போக மற்ற விவரங்கள் பேசப்படுகின்றன.
இந்நிலையில் பாண்டியனின் மூத்த பெண் குழலி தங்கமயிலுக்கு அவர்களது பெற்றோர் எவ்வளவு சவரன் போடுவார்கள் எங்கு திருமணத்தை வைத்துக் கொள்வார்கள் நிச்சயதார்த்தத்தை எப்படி செய்வார்கள் என பல்வேறு விஷயங்களை கேள்வி கேட்கிறார். இவை அனைத்திற்கும் பாக்கியம் ஒரு படி அதிகமாகவே உத்திரவாதம் கொடுக்கிறார். எதை சொன்னாலும் அவர் உடனே செய்து விடுவதாக தலையாட்டுவது மீனாவிற்கு தொடர்ந்து நெருடலை ஏற்படுத்துவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக சில வாரங்களிலேயே கெத்து காட்டி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சரவணனுக்கு கல்யாண வைபோகம் மூலம் பார்க்கப்பட்ட தங்க மயிலின் வீட்டிற்கு பாண்டியன் குடும்பத்தினர், அவரை பெண் பார்க்க சென்ற நிலையில், கடந்த இரு எபிசோட்களில் அது தொடர்பான காட்சிகளே காணப்பட்டது. சரவணனை பிடித்துள்ளதாக தங்க மயில் தலையாட்டியதை தொடர்ந்து, இரு குடும்பத்தினரும் மிகுந்த உற்சாகத்துடன் அடுத்தடுத்த கல்யாண பேச்சுக்களை பேச துவங்குகின்றனர்.
நிச்சயதார்த்தம் முடிவு: நிச்சயதார்த்தம் குறித்து பாண்டியன் பேச உடனடியாக தங்க மயிலின் அப்பா காலண்டரை பார்த்து அடுத்த வாரத்திலேயே ஒரு நல்ல முகூர்த்தம் இருப்பதாகவும் அன்றைய தினம் நிச்சயதார்த்தத்தை வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார் ஒரே வாரத்தில் எப்படி இது சாத்தியப்படும் என்று கோமதி கேள்வி எழுப்ப, நிச்சயதார்த்தம் தானே அதற்கு எதற்கு அவ்வளவு நாட்கள் என்று பாக்கியம் கூறுகிறார். தொடர்ந்து எங்கே நடத்துவது என்பது குறித்து கேள்வி எழ பாண்டியனின் மூத்த மகள் குழலி தனக்கு பெரிய மண்டபமாக பார்த்து தான் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக கூறுகிறார்.
கோயிலில் திருமணம்?: இதையடுத்து பேசும் தங்கமயிலின் அப்பா, ஒரு வாரம் தான் இருப்பதால் பெரிய மண்டபமாக பிடித்து நிச்சயதார்த்தத்தை நடத்துவது கடினம் என்றும் வீட்டிலேயே எளிமையாக நடத்தலாம் என்றும் கூறுகிறார். இதற்கு பாண்டியனும் ஒப்புக்கொள்கிறார். தொடர்ந்து திருமணம் குறித்தும் பேச்சு எழுகிறது. அப்போது பேசும் பாக்கியம். தங்கமயில் திருமணம் தொடர்ந்து தள்ளிப் போனதால் தான் திருமணத்தை கோயிலில் வைத்துக் கொள்வதாக வேண்டியுள்ளதாக கூறுகிறார். தொடர்ந்து ரிஷப்சனை வேண்டுமானால் கோயிலுக்கு அருகில் இருக்கும் மண்டபத்தில் வைத்துக் கொள்ளலாம் என்று அவர் கூறுகிறார்.
நகை குறித்து கேள்வி: இதனிடையே தங்கள் வழக்கப்படி கல்யாணத்தை மாப்பிள்ளை வீட்டார் தான் நடத்துவார்கள் என்று கூறுகிறார் பாக்கியம். இதற்கு பாண்டியன் ஒப்புக்கொள்கிறார். ஆனால் தங்கமயில் அப்பா ஒருவர் மீது அனைத்து சுமையும் வைக்க கூடாது என்றும் பாதி சுமையை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவும் கூறுகிறார். இவ்வாறாக பேச்சு தொடரும் நிலையில் குழலி பெண்ணுக்கு எத்தனை சவரன் நகை போடுவார்கள் என்று கேட்கிறார். இதற்கு பாண்டியன் மற்றும் கோமதி மறுப்பு தெரிவிக்கிறார்கள். இதையெல்லாம் கேட்கக்கூடாது. அவர்கள் பெண்ணுக்கு அவர்கள் விரும்புவதை செய்யட்டும் என்று அவர்கள் கூறுகின்றார்.
எல்லாவற்றிற்கும் ஓகே சொல்லும் பாக்கியம்: ஆனால் குழலி கேட்டது தவறு இல்லை என்றும் குழலிக்கு பாண்டியன் 75 சவரன் போட்ட நிலையில் அதைவிட அதிகமாக ஐந்து சவரன் சேர்த்து தன்னுடைய மகளுக்கு தாங்கள் போடுவதாகவும் கூறுகிறார். இதையடுத்து நிச்சயதார்த்தம் மற்றும் திருமணத்தை முடிவு செய்துவிட்டு பாண்டியன் குடும்பத்தினர் வீடு திரும்புகின்றனர். அவர்களை வழி அனுப்பி விட்டு வரும் தன்னுடைய அம்மா மற்றும் அப்பாவிடம் தங்கமயில் ஆத்திரப்படுகிறார். தங்களிடம் ஐந்து ஆறு சவரன் மட்டுமே இருக்கும் நிலையில் 80 சவரன் போடுவதாக வாக்கு கொடுக்கிறார்களே என்று கொதிக்கிறார்.
என்னது கவரிங் நகையா?: அதற்கு பாக்கியம் கவரிங் நகையை போட்டுக் கொள்ளலாம் என்று கூலாக பதில் சொல்கிறார். இதை அடுத்து ஆத்திரப்படும் தங்கமயில் தன்னுடைய அம்மா எது வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம் ஆனால் அங்கு போய் வாழ போகிறவள் தான்தான் என்று கடுப்புடனும் பயத்துடனும் ஆத்திரத்துடனும் பேசுகிறார். தொடர்ந்து சரவணனுக்கு 28 வயதான நிலையில் தனக்கு 29 வயதாவதையும், ஆனால் 26 வயது என்று பாண்டியன் வீட்டாரிடம் தன்னுடைய அம்மா பொய் கூறியது குறித்தும் கோபப்படுகிறார். தன்னுடைய ஆதார் கார்டு உள்ளிட்டவற்றை அவர்கள் பார்க்க நேர்ந்தால் உண்மை வயது தெரிந்துவிடும் என்றும் அச்சத்துடன் கூறுகிறார்.
ஆத்திரப்படும் தங்கமயில்: அவர் இப்படி தன்னுடைய அம்மா செய்யும் விஷயங்களால் ஆத்திரப்பட்டுக் கொண்டிருக்க, வீட்டிற்கு திரும்பும் மீனா, தங்கமயில் குடும்பத்தினரிடம் ஏதோ ஒரு விஷயம் நெருடலாக இருக்கிறது என்றும் தாங்கள் கூறும் அனைத்திற்கும் அவர்கள் ஓகே சொல்வதும் இந்த அளவிற்கு அவர்கள் நல்லவர்களாக தங்களை காட்டிக் கொள்வதும் ஏதோ வித்தியாசமாக இருப்பதாகவும் அதனால் அவசரப்படாமல் அவர்கள் குடும்பம் குறித்து விசாரித்து விட்டு பின்பு திருமணத்தை முடிக்கலாம் என்றும் மீனா கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











