Pandian stores 2: மீனாவிற்காக செந்திலை ஏற்றுக் கொண்ட பாண்டியன்.. கதிர் கழுத்தை பிடித்து வெளியேற்றம்!
சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகம் நிறைவடைந்த நிலையில் தற்போது இரண்டாவது பாகம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
முதல் பாகத்தில் அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைந்த நிலையில் தற்போது அப்பா -மகன் உறவை மையமாக வைத்து கதைக்களம் அமைந்துள்ளது.

தற்போது செந்தில் மற்றும் மீனாவிற்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பாண்டியன் ஸ்டோர்சின் முதல் பாகம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவடைந்தது. டிஆர்பியில் முதல் மூன்று இடங்களில் இந்த தொடர் தொடர்ந்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்த வேளையில் தொடரை நிறைவு செய்வதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. குடும்ப சென்டிமெண்டை குறிப்பாக அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வந்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர்: இந்தத் தொடரில் மூர்த்தி மற்றும் தனமாக ஸ்டாலின் மற்றும் சுஜிதா நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தனர். இந்நிலையில் இந்த தொடர் நிறைவடைந்த சில தினங்களிலேயே இந்த தொடரின் இரண்டாவது சீசன் துவங்கியது. முதல் சீசனில் அண்ணன் -தம்பிகளின் பாசம் மையமாக கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இந்த இரண்டாவது சீசனில் அப்பா -மகன்களின் உறவை மையமாக கொண்டு இயக்குநர் கதைக்களத்தை உருவாக்கியுள்ளார்.
அப்பா -மகன் உறவு: முதல் சீசனில் மூத்த அண்ணனாக கலக்கலான நடிப்பை வெளிப்படுத்திய ஸ்டாலின், இந்த சீசனில் அப்பா பாண்டியனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நிரோஷா களமிறங்கியுள்ளார். இவர்களின் மூன்று பிள்ளைகளாக கணேஷ், கதிர் மற்றும் செந்தில் என்ற கேரக்டர்களும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இவர்களுக்கு ஒரு மகளும் உள்ள நிலையில், நிரோஷா காதலால் அவரது அண்ணன்களுடன் பிரச்சினை உள்ளதாகவும் இந்த தொடரில் காட்டப்பட்டு வருகிறது.
செந்தில் -மீனா திருமணம்: இந்நிலையில் கவர்ன்மெண்ட் வேலை கிடைத்த மீனாவிற்கு வீட்டில் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இதனால் அவர் காதலிக்கும் செந்திலை திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுக்க, அதற்கு செந்திலின் தம்பி கதிர் உதவி செய்கிறார். இரு குடும்பத்தினரும் அவர்களது காதலுக்கு ஒப்புதல் அளிக்க மாட்டார்கள் என்ற சூழல் காணப்படும் நிலையில், நண்பர்கள் உதவியுடன் இந்த திருமணம் பல்வேறு போராட்டங்களுக்கிடையில் நடந்து முடிகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பிரமோ: இந்நிலையில் தற்போது இந்தத் தொடரின் அடுத்த வார பிரமோ வெளியாகியுள்ளது. அதில் தம்பதிகளாக பாண்டியனின் வீட்டு வாசலில் செந்தில் மற்றும் மீனா வந்து நிற்கின்றனர். செந்திலை அடித்து துவைக்கிறார் பாண்டியன். இதையடுத்து கலக்கத்தில் மீண்டும் மீனாவை அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைப்பதாக உளறுகிறார் செந்தில். அவரது இந்தப் பேச்சை கண்டிக்கும் பாண்டியன், தன்னை நம்பி வந்த பெண்ணை அப்படி அனுப்பவதா என்று கொந்தளிக்கிறார். அவர்களை வீட்டிற்குள் அனுமதிப்பதாக கூறுகிறார்.
வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட கதிர்: இதனிடையே இவர்களது திருமணத்திற்கு தான்தான் உதவி செய்ததாக கூறும் கதிருக்கும் அடி விழுகிறது. தொடர்ந்து அவரை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார் பாண்டியன். இவ்வாறாக தற்போது வெளியாகியுள்ள பிரமோவில் காணப்படுகிறது. முன்னதாக தன்னுடைய குடும்பத்தை பாண்டியன் கட்டுக்கோப்பாக வைத்துள்ளதாக விமர்சிக்கும் அந்தப்பகுதி மக்கள், மருமகள்கள் வந்தால் இது மாறிவிடும் என்று தெரிவித்த நிலையில், தற்போது முதல் மருமகளாக வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கிறார் மீனா. இதனால் அவர்களது குடும்பத்தில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











