Pandian stores serial: தம்பிங்க தான் என்னோட பலமே.. சிறப்பாக சுபம் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக கடந்த 5 ஆண்டுகளை கடந்து ஒளிபரப்பாகி வந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ்.
தமிழில் உருவாகி ரசிகர்களை கவர்ந்த இந்தத் தொடர், தொடர்ந்து மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் இன்றுடன் இந்த தொடர் நிறைவடைந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டில் அக்டோபரில் துவங்கப்பட்ட இந்தத் தொடர் தற்போது அக்டோபரிலேயே நிறைவடைந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக தொடர்ந்து முன்னணியில் இருந்துவந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய தினம் எண்ட் கார்ட் போட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் துவங்கிய இந்த சீரியல் தொடர்ந்து 5 ஆண்டுகளை கடந்து அக்டோபர் மாதத்திலேயே நிறைவடைந்துள்ளது. அண்ணன் -தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பான இந்தத் தொடர், தமிழில் உருவாகி ரசிகர்களை கவர்ந்தது.
தமிழில் உருவான தொடர்: தமிழில் உருவாகி வெற்றிகரமாக நடைபோட்டுவந்த இந்த தொடர் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு ரசிகர்களை கவர்ந்தது. அண்ணன் -தம்பிகளின் பாசம் மட்டுமில்லாமல் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் இந்தத் தொடர் அடுத்தடுத்த எபிசோட்கள் மூலம் எடுத்துரைத்தது. எத்தனை சிக்கல்கள் வந்தாலும் இந்தத் தொடரில் தங்களை விட்டுக் கொடுக்காமல் இருந்த அண்ணன் -தம்பிகள் மற்றும் அவர்களின் துணைவிகள் என உறவுகள் குறித்த நம்பிக்கையை இந்த தொடர் விதைத்தது.
இறுதி எபிசோட்: இன்றைய தினம் இறுதி எபிசோடில் குடும்பத்தினர் அனைவரும் இணைந்து குலதெய்வம் கோயிலில் பொங்கல் வைத்து வழிபடுவதாக காட்சிகள் காணப்பட்டன. மேலும் சூப்பர் மார்க்கெட் மீண்டும் தங்களுடைய கைகளில் வந்த நிலையில், அதை ஜீவாவிற்கு கொடுக்க மூர்த்தி மற்றும் தனம் முடிவெடுத்து அதை மற்றவர்களிடம் அறிவிக்கின்றனர். மீண்டும் மீனாவின் அப்பா ஜனார்த்தனன், தான் தன்னுடைய மகள் மற்றும் மருமகனுக்கு எழுதிய சொத்துக்களை கொடுக்க, ஜீவா அதை மீண்டும் மறுக்கிறார்.
முக்கிய முடிவு: அனைவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் அவரவருக்கு தனித்தனியான பிசினஸ் தேவை என்பதை மூர்த்தி மற்றும் தனம் மற்றவர்களிடம் கூறுகின்றனர். ஜீவாவிற்கு சூப்பர் மார்க்கெட்டை கொடுத்ததை போலவே, கதிரின் ஹோட்டல் பிசினசையும் அனைவரும் இணைந்து மேலும் விரிவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக தனம் கூறுகிறார். பாண்டியன் ஸ்டோர்சை வழக்கம்போல மூர்த்தி பார்த்துக் கொள்வதாகவும் கண்ணனுக்கு வங்கி வேலை உள்ளதால் அவன் பிழைத்துக் கொள்வான் என்றும் தனம் கூறுகிறார். மேலும் தம்பிங்க தான் தன்னுடைய பலம் என்று மூர்த்தியும் கூறுவதாக இறுதி எபிசோடில் அமைந்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர்: இந்த தொடரின் இறுதி எபிசோடில் கண்ணன் இல்லாதது ஒன்றுதான் குறையாக இருப்பதாக அனைவரும் கூறுகின்றனர். ரசிகர்களும் அதையே உணர்ந்துள்ளனர். இதனிடையே அனைவரும் ஒற்றுமையாக இணைந்துள்ள இந்த சந்தோஷ தருணத்தில் அனைவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதாக காட்டப்படுகிறது. தொடர்ந்து தொடருக்கு சுபமும் போடப்பட்டுள்ளது. இந்தத் தொடரின் அடுத்த சீசன் வரும் திங்கட்கிழமை முதல் இதே நேரத்தில் ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











