Pandian stores: பாண்டியன் ஸ்டோர்சில் புதிய ஜீவா.. ஹேமா வெளியிட்ட பதிவால் ரசிகர்கள் குழப்பம்!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக இருந்துவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது கொண்டாட்டமாக காணப்படுகிறது.
பிரிந்திருந்த அண்ணன், தம்பிகள் நான்கு பேரும் தற்போது ஒன்றாக இணைந்துள்ளனர். மாமனார் வீட்டில் இருந்த ஜீவாவும் தற்போது தன்னுடைய குடும்பத்துடன் இணைந்துள்ளார்.
கடந்த சில தினங்களாக புதுமனை புகுவிழா கொண்டாட்டங்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக கண்ணனின் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா மாற்றம் குறித்த ஹேமா பதிவு: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக தொடர்ந்து இருந்து வருகிறார் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்தத் தொடரின் அண்ணன் -தம்பிகளின் பாசம், உறவு, அன்பு உள்ளிட்டவை மேலோங்கி காணப்படுகிறது. எந்தப் பிரச்சினையிலும் தங்களை விட்டுக் கொடுக்காமல் இருந்த இவர்களின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூன்று குடும்பங்களாக இவர்கள் மாறினர். பின்னர், ஏற்பட்ட சில குளறுபடிகளால், கடைசி தம்பி இணைந்த நிலையில், ஜீவா மட்டும் தன்னுடைய மாமனார் வீட்டிலேயே முகாமிட்டிருந்தார்.
இந்நிலையில் இவர்கள் கட்டிவந்த புது வீட்டின் புதுமனை புகுவிழாவில், மீனாவின் தங்கை கணவர் பிரசாந்த் ஏற்படுத்திய பிரச்சினையால் , ஜீவாவின் சட்டையை பிடித்து அவர் சண்டைக்கு வர, இதை பொறுக்க முடியாமல் மூத்த அண்ணன் மூர்த்தி, பிரஷாந்திடம் சண்டைக்கு போகிறார். இதனால் கோபதாபங்கள் அனைத்தும் நீங்க, நான்கு அண்ணன், தம்பிகளும் தற்போது புதிய வீட்டில் ஒன்றாக இணைந்துள்ளனர். இந்நிலையில், கண்ணனின் வேலை பறிபோன வழக்கும் தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இதுகுறித்து மூர்த்தி, இதெல்லாம் தேவையா என்று கோபப்படுகிறார். தொடர்ந்து தனக்கு சாதகமாக வழக்கின் முடிவு வரவில்லை என்றால் தான் வீட்டை விட்டு வெளியேறுவேன் என்று விரக்தியுடன் கண்ணன் கூறும் நிலையில், கோபத்துடன் அவரை திட்டுகிறார் தனம். வீட்டை விட்டு போவது குறித்து இனிமேல் யாரும் பேசக்கூடாது என்றும் எச்சரிக்கிறார். தொடர்ந்து ஜீவா மற்றும் கண்ணன் இருவரும் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு செல்வதாக நேற்றைய எபிசோட் காணப்பட்டது. இனி வரும் நாட்களின் கண்ணனின் வழக்கு குறித்த முடிவு தெரியவரும்.

இந்த சீரியல் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடரில் இரண்டாவது தம்பியாக வரும் ஜீவா, தொடரை விட்டு விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தொடரில் மிகவும் சிறப்பான ஜோடியாக ஜீவா -மீனா தம்பதியினர் காணப்படுகின்றனர். இந்நிலையில் ஜீவா தற்போது விஜய் டிவியின் கிழக்கு வாசல் தொடரில் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார். இதனால் அவர் இந்தத் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதை குறிப்பிட்டு, தொடரில் அவரது மனைவி மீனாவாக நடித்துவரும் ஹேமா, தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புதிய ஜீவா என்று மற்றொரு நபரின் புகைப்படத்துடன் போஸ்ட் செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் மூத்த அண்ணன் மூர்த்தியும் காணப்படுகிறார். ஹேமாவின் இந்தப்பதிவு கேள்வி மற்றும் ஆச்சர்யக்குறியுடன் காணப்படுகிறது. இதனால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை என்றும் ஜீவாவாக தொடர்ந்து வெங்கட் தன்னுடைய கேரக்டரில் தொடர்ந்து நடிப்பார் என்றும் சீரியல் குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











