Siragadikka Aasai: மீனாவிற்கு பிடித்த தந்தூரி சிக்கன்.. அசத்திய முத்து.. ஏழரையை கூட்டிய விஜயா!
சென்னை: விஜய் டிவியின் முதலிடத்தை தொடர்ந்து பிடித்து வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல். டிஆர்பியில் அதிக புள்ளிகள் பெற்று வருகிறது. முத்து, மீனா, அண்ணாமலை, விஜயா என முன்னணி கேரக்டர்களை கொண்டு இந்த சீரியல் அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலில் ஏழை வீட்டிலிருந்து வந்த தன்னுடைய மருமகள் மீனாவை வெறுக்கும் மாமியாராக காணப்படுகிறார் விஜயா. மீனா மற்றும் முத்துவை அரவணைத்து செல்கிறார் அண்ணாமலை. தன்னுடைய மனைவி அந்த வீட்டில் வேலைக்காரியாக நடத்தப்படுவதை உணர்ந்துள்ளார் முத்து.
தன்னுடைய அப்பா அண்ணாமலை மீது கொண்ட மிகுதியான பாசத்தால் தன்னுடைய மனைவி மீனா, தொடர்ந்து அவமானப்படுத்தப்படுவதை பொறுத்துக் கொள்கிறார் முத்து. இருந்தபோதிலும் தன்னுடைய அம்மா மற்றும் அண்ணன், தம்பிகளையும் அவர்களது மனைவிகளையும் தொடர்ந்து கேள்வி கேட்டு அதன்மூலம் வீட்டில் பிரச்சினைகள் ஏற்படவும் காரணமாக அமைகிறார். ஏழை வீட்டிலிருந்து முத்துவை திருமணம் செய்துக் கொண்டுள்ள மீனா, தொடர்ந்து அனைவருக்கும் குறிப்பாக தன்னுடைய மாமனார், மாமியாருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல்: விஜய் டிவியில் ஏராளமான ரசிகர்களின் மனம்கவர்ந்த சீரியலாக மாறியுள்ளது சிறகடிக்க ஆசை. இந்தத் தொடரில் சிறகடிக்க ஆசைப்படும் கேரக்டர்களில் முத்து, மீனா உள்ளிட்ட அனைவரும் காணப்படுகின்றனர். யாருக்குத்தான் சிறகடிக்க ஆசை இருக்காது என்பதை கதைக்களமாக இந்த சீரியல் காட்டி வருகிறது. திருமணமான தன்னுடைய மகன்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய, குடும்பத்தில் நிம்மதி நிலவ பாடுபட்டு வருகிறார் அண்ணாமலை. ஆனால், பூகட்டி விற்கும் குடும்பத்திலிருந்து வந்த தன்னுடைய இரண்டாவது மருமகளை ஏளனமாக நடத்துகிறார் மாமியார் விஜயா.
மீனாவிடம் ஏளனம் காட்டும் விஜயா: இதேபோல தன்னுடைய மகன் முத்துவையும் ஏளனமாக நடத்துகிறார். ஆனால் மற்ற மகன்கள் மனோஜ், ரவி மற்றும் அவர்களது மனைவிகள் ரோகினி, ஸ்ருதி பணக்கார வீட்டிலிருந்து வந்ததால் அவர்களுக்கு ராஜ மரியாதை செய்கிறார். வீட்டிலுள்ளவர்கள் அனைவரையும் அனுசரித்து சென்றாலும் தன்னுடைய ஸ்டேடஸ் காரணமாக மாமியாரின் அன்பை பெற முடியாமல் தவிப்புக்குள்ளாகிறார் மீனா. ஆனாலும் யாரையும் விட்டுக் கொடுக்காமல் வேலை செய்கிறார். ஆனாலும் அவரையும் தன்னுடைய இரண்டாவது மகன் முத்துவையும் வீட்டை விட்டு வெளியேற்றும் முயற்சியில் விஜயா ஈடுபடுகிறார்.
ஆவேசமான மீனா: இதுகுறித்து தன்னுடைய கணவர் அண்ணாமலையுடன் பேசும் விஜயா, தொடர்ந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார். முன்னதாக மீனா எந்த நகையும் போடாமல் திருமணம் செய்து வந்ததை தொடர்ந்து குத்திக் காட்டி பேசுகிறார். இதனால் மனதளவில் அதிகமான காயமடையும் மீனா, தாலி முதற்கொண்டு, அவர் போட்ட அனைத்து நகைகளையும் கழட்டிக் கொடுக்கிறார். இதனால் மற்ற மருமகள்கள் முன்னிலையில் தான் அவமானப்பட்டதாக விஜயா நினைக்கிறார். இதனால்தான் மீனா மற்றும் முத்துவை வீட்டை விட்டு வெளியேற்றும் முயற்சியில் அவர் ஈடுபடுகிறார்.
மீனாவிடம் முத்து கரிசனம்: இந்நிலையில் இந்த சீரியலின் இந்த வார பிரமோ வெளியாகியுள்ளது. இதில் தன்னுடைய மனைவி மீனாவிடம் அனுசரணையாக பேசும் முத்து, அவர் என்ன சமைத்தார் என்று கேட்பதாக அமைந்துள்ளது. அவரது கேள்விக்கு பதிலளிக்கும் மீனா, ஸ்ருதிக்கு சிக்கன் சூப் செய்ததாகவும், மாமனார் -மாமியாருக்கு கீரை கடைந்ததாகவும் ரவிக்கும் மனோஜ்க்கும் சிக்கன் கிரேவி மற்றும் சப்பாத்தி செய்ததாகவும் கூறுகிறார். எல்லாருக்கும் எல்லாவற்றையும் செய்த மீனா, தனக்கு என்ன செய்தார் என்று முத்து கேட்க, வேலை செய்தேன் என்று மீனா கூறுவதாகவும் இந்த வார பிரமோவில் காணப்படுகிறது.
மீனாவிற்கு பிடித்த தந்தூரி சிக்கன்: இதையடுத்து மீனாவிற்கு முத்து தந்தூரி சிக்கன் வாங்கி வந்துக் கொடுக்கிறார். இதனால் ஆத்திரமடையும் விஜயா, தன்னுடைய கணவரிடம் என்ன இதெல்லாம் புதுப்பழக்கம், வெளியிலிருந்து வாங்கி வந்துள்ளான் என கேள்வி எழுப்புகிறார். தொடர்ந்து பேசும் முத்து, இங்கு அனைவருக்கும் பார்த்து பார்த்து சமைக்கும் மீனாவிற்கு என்ன தேவை என்பது குறித்து யாருமே கவலைப்படுவதில்லை என்று குற்றம் சாட்டும் முத்து, அதனால்தான் அவளுக்கு பிடித்த தந்தூரி சிக்கன் வாங்கி வந்ததாக கூறுகிறார். இதையடுத்து தனக்கு பிடித்ததை வாங்கிக் கொடுத்த, தன்னுடைய உழைப்பை புரிந்துக் கொண்ட முத்துவை நெகிழ்ச்சியுடன் மீனா பார்ப்பதாக தற்போதைய பிரமோவில் காட்டப்படுகிறது.


Click it and Unblock the Notifications











