Thamizhum Saraswathiyum: அவனிலிருந்து அவர்.. மேக்னாவின் மாற்றம்.. குழப்பத்தில் மாமா!
சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக தமிழும் சரஸ்வதியும் தொடர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்தத் தொடரில் அர்ஜூனால் கோதை குடும்பத்தினர் தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில் கோதையின் சொத்துக்களை நயவஞ்சகமாக பறித்து அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றுகிறார் அர்ஜூன். மேலும் தமிழின் பேக்டரி தீப்பிடிக்கவும் காரணமாக இருக்கிறார்.

தமிழும் சரஸ்வதியும் தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றாக தமிழும் சரஸ்வதியும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இந்த தொடரில் கோதை இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை கடுமையான உழைப்பால் முன்னுக்கு கொண்டுவந்த கோதை மற்றும் அவரது கணவர், இருவரும் மருமகன் அர்ஜூனின் நயவஞ்சகத்திற்கு பலியாகி அந்த நிறுவனம் மட்டுமில்லாமல் அவர்களது சொத்துக்கள் அனைத்தையும் இழக்கின்றனர். இவ்வளவு சூழ்ச்சியுடன் அர்ஜூன் செயல்பட்ட நிலையிலும் தன்னுடைய கணவனை கண்மூடித்தனமாக நம்புகிறார் ராகினி.
வீதிக்கு வந்த கோதை குடும்பத்தினர்: இதனால் கோதை குடும்பத்தினர் வீதிக்கு வருகின்றனர். முன்னதாக அர்ஜூனின் சூழ்ச்சியால் வீட்டை விட்டு வெளியேறும் தமிழ், தன்னுடைய மனைவி சரஸ்வதியின் பெயரிலேயே சரஸ்வதி இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை துவக்கி வெற்றிகரமாக செயல்பட்டுவரும் நிலையில், அதையும் குலைக்க அர்ஜூன் தொடர்ந்து காய்நகர்த்தி வருகிறார். அவனது சூழ்ச்சிகளை முறியடித்து தன்னுடைய மனைவியின் உதவியுடன் தொடர்ந்து முன்னேறி வருகிறார் தமிழ்.
கைக்கொடுத்த தமிழ்: இதனிடையே, வீட்டை விட்டு வெளியேறிய தன்னுடைய பெற்றோர், தம்பி, அவரது மனைவி என அனைவருக்கும் கைக்கொடுக்கிறார் தமிழ். தன்னுடைய குடும்பத்தினர் தன்னை முன்னதாக சந்தேகித்தாலும் தற்போது அவர்களின் இக்கட்டான நிலையில் அவர்களை தாங்கிப் பிடிக்கிறார். அர்ஜூனின் சூழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், அனைவரும் ஒன்றாக இணைந்ததில் சரஸ்வதி, தமிழ், கோதை என குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியடைகின்றனர்.

அர்ஜூனின் சூழ்ச்சி: இதனிடையே அர்ஜூனின் சூழ்ச்சியால், சரஸ்வதி இன்டஸ்ட்ரீசில் தீப்பிடித்து மெஷின்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின்றன. இதனால் பல கோடி நஷ்டத்திற்கு உள்ளாகிறார் தமிழ். மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் அனுப்பப்பட வேண்டிய புரொடக்ஷனும் நின்றுப் போகிறது. இதனால் ஆர்டர் கொடுத்த நிறுவனர், தமிழ் நிறுவனத்தின்மீது கேஸ் போடுவேன் என்று மிரட்டல் விடுக்கிறார். இதையடுத்து பெங்கரூரை சேர்ந்த மேக்னா என்பவரின் பேக்டரி சென்னையில் இருப்பதாகவும் அவரது பேக்டரியில் கேட்டு வேலை செய்யவும் திட்டமிடும் தமிழ் பெங்களூர் புறப்பட்டு செல்கிறார்.
தமிழ் -மேக்னா மோதல்: அங்கு ஒரு சம்பவத்தில் மேக்னாவை அவர் அறைய, இதனால் ஆத்திரத்திற்குள்ளாகி பழிவாங்க துடிக்கிறார் மேக்னா. இதனிடையே இதுகுறித்து தெரியாமல், அவரது நிறுவனத்திற்கே வரும் தமிழ், மேக்னாவை ஒரு விபத்திலிருந்து காப்பாற்றுகிறார். முன்னதாக உண்மை நிலை தெரியாமல் தமிழை மேக்னாவின் மாமா அடைத்து வைக்கிறார். தொடர்ந்து அங்கிருந்து தப்பிக்கும் தமிழ், மேக்னாவிடம் தன்னுடைய சூழ்நிலையை விளக்குகிறார்.
தமிழ்மீது மேக்னா ஈர்ப்பு: இதனால் சமாதானமடையும் மேக்னாவிற்கு தமிழ் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. தமிழ் அவன், இவன் என்று சகட்டு மேனிக்கு தமிழை திட்டித் தீர்த்த மேக்னா, தற்போது உண்மையை அறிந்து அவர் நல்லவர் என்றும் தான்தான் தவறு செய்துவிட்டதாகவும் தன்னுடைய மாமாவிடம் கூறுகிறார். எந்த ஆண்மகனாக இருந்தாலும் மதிக்காமல் நடந்துக் கொள்ளும் மேக்னாவின் இந்த மாற்றம், மாமாவிற்கு அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது.

மாமாவின் சதித்திட்டம்: தன்னுடைய மகனுக்கு மேக்னாவை திருமணம் செய்துவைத்து அவருடைய ஆயிரக்கணக்கான சொத்துக்களை தன்வசப்படுத்தும் முயற்சியில் மாமா கலிவரதன் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், தமிழின் குறுக்கீடு அவருக்கு பேரதிர்ச்சியாக அமைகிறது. மேலும் தமிழை கொண்டே, மேக்னாவை தன்னுடைய சதிவலையில் வீழ்த்தவும் அவர் திட்டம் தீட்டுகிறார். தமிழை விடுவித்து தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வருவதாக இன்றைய எபிசோடில் காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











