கண் தானம் செய்யுங்க... விழி இழந்தவரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றலாம் - நடிகர் விக்ரம்
Recommended Video
சென்னை: மனிதனின் உடலில் மிக மிக வளர்ச்சி பெற்ற உணர் திறன் உறுப்பு கண் தான். இந்த அழகிய உலகினை நம்மால் கண்டு ரசிக்க முடிகிறது. ஆனால் கண் பார்வையற்றவர்களால் அது இயலவில்லை. ஆகவே நம் இறப்பிற்கு பிறகு நம்முடைய கண்களை தானமாக அளிப்பதன் மூலம் கண் பார்வையற்ற ஒருவருடைய வாழ்வினை நாம் மலர செய்யலாம் என்று நடிகர் சியான் விக்ரம் கூறியுள்ளார்.
கண் சிகிச்சையில் உலகளவில் புகழ் பெற்ற டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை தனது கிளைகளை சென்னை கோடம்பாக்கத்திலும், வட சென்னை பகுதியான திருவெற்றியூரிலும் இன்று தொடங்கியுள்ளது. இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக சியான் விக்ரம் கலந்து கொண்டு மருத்துவமனையின் கிளைகளை திறந்து வைத்தார்.

டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை 1957ஆம் தொடங்கப்பட்ட புகழ்பெற்ற முன்னோடி கண் மருத்துவமனையாகும். இந்த தொடக்க விழா நிகழ்வில் மருத்துவமனையின் குழுமத் தலைமை புரொஃபசர் அமர் அகர்வால் மற்றும் கோடம்பாக்கம் அகர்வால் மருத்துவமனையின் தலைமை தலைவர் பாஸ்கரன், சியான் விக்ரம் ஆகியோர் முன்னிலையில் இந்த தொடக்க விழா நடைபெற்றது.
தொடக்க விழாவை நினைவுகூரும் வகையில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள 100 நபர்களுக்கு கண் அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்படும் என்று அறிக்கை விடுத்தது இந்த விழாவின் சிறப்பம்சம்.

இந்த தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சியான் விக்ரம் பேசுகையில், மனிதனின் உடலில் மிக மிக வளர்ச்சி பெற்ற உணர் திறன் உறுப்பு கண் தான். இந்த அழகிய உலகினை நம்மால் கண்டு ரசிக்க முடிகிறது. ஆனால் கண் பார்வையற்றவர்கள் அது இயலவில்லை. ஆகவே நம் இறப்பிற்கு பிறகு நம்முடைய கண்களை தானமாக அளிப்பதன் மூலம் கண் பார்வையற்ற ஒருவருடைய வாழ்வினை நாம் மலர செய்யலாம்.

தேசிய கண் தான நிகழ்வு நடைபெறும் தருணத்தில் கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊக்குவிப்பது சிறப்பான ஒரு காரியமாகும். இந்த நிகழ்வு மூலம் என் ரசிகர்களையும் கண்களை தானம் செய்வதற்கு ஊக்குவிக்கும் என நம்புகிறேன் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் சியான் விக்ரம். கண் தானம் செய்வதன் மூலம் கண் பார்வையற்றவர்களின் வாழ்வில் ஒரு ஆதாரபூர்வமான மாற்றத்தை உணரலாம். மேலும் 100 நபர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்த டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்றார்.
பிறகு சியான் விக்ரம் கோடம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையை திறந்து வைத்தார். மேலும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை-திருவெற்றியூர் என்று பொறிக்கப்பட்ட ஃபிளெக்ஸ் ஒன்றையும் திறந்து வைத்தார்.
அடுத்த திரைப்படம் மற்றும் சினிமா சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல், தான் இன்று சினிமா பற்றி பேசப்போவதில்லை என்றும் கண் தானத்தின் சிறப்பு குறித்தும் அவசியம் குறித்தும் பேச வந்துள்ளேன் என்று பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











