நீயா நானா பாத்தீங்களா..கால் மேல கால் போட்டு தான் கல்யாணத்தில் உக்காருவேன்..என் கல்யாணம் என் இஷ்டம்!
சென்னை : விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி பல எபிசோடுகளை தாண்டி ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பின்பு பல சேனல்களில் டிபேட் ஷோ தொடங்கப்பட்டது.
ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து வெற்றி பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிற நிகழ்ச்சி நீயா நானா தான்.
இன்றைய நீயா நானா நிகழ்ச்சியில் நவநாகரீக பெண்கள் தங்கள் திருமணத்தை எப்படி செய்ய திட்டமிடுகிறார்கள் என்பது குறித்து விவாதம் நடைபெற்றது. காரசாரமாக நடைபெற்ற விவாதத்தை பார்க்கலாமா?

மணமகளே..மருமகளே..வா..வா
திருமணம் என்றாலே தழையத்தழைய புடவைகட்டி, குனிந்த தலை நிமிராமல் வெட்கத்துடன் மணப்பெண்ணை தோழிகள் அழைத்து வருவார்கள். மணமகளே.. மருமகளே வா வா என பாட்டு மட்டுமே ஒலித்துக்கொண்டு இருக்கும். இதுதான் நாம் பார்த்த மணப்பெண் வரவேற்பு. ஆனால், காலம் மாற மாற பெண்கள் உடை, நடை, பாவனைகளை மாற்றிக்கொண்டு குத்துபாடலுக்கு ஆட்டம் போட்டு மணமேடைக்கு வருகிறார்.

என் கல்யாணம் இப்படித்தான் நடக்கும்
ஆனால், இன்றைய நவநாகரீக மணப்பெண் அவற்றை விரும்புவது இல்லை. இது என் திருமணம் இந்த திருமணத்தில் எனக்கு எந்த மாதிரியான உடை பிடிக்கிறதோ அதை அணிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதே போல மற்றொரு பெண் மணமேடையில் என் கணவரின் கையை கோர்த்துக்கொண்டு இருந்தேன். அப்போது என் அம்மா, அனைவரும் பார்க்கிறார்கள் கையை விடு என்றார்கள். ஆனால், நான் கையை விடவில்லை என் கல்யாணம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்பது என் ஆசை என்றார்.

மணமேடைக்கு பைக்கில் வரணும்
மற்றொரு பெண் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை, என் திருமணத்தின் போது மணமேடைக்கு பைக்கில் வரவேண்டும், அப்போது விக்ரம் படத்தில் வரும் நாயகன் வரார் பாடல் ஒளிபரப்பாக வேண்டும், அதற்காக இப்போதே பைக் ஓட்ட பயிற்சி எடுத்து வருவதாக கூறினார். இதைக்கேட்டு சில பெரியவர்கள் அப்படியே ஆடிப்போனார்கள்.

மரியாதை இல்லாத தனம்
இதற்கே வாயை பிளத்தால் எப்படி அடுத்த ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு என்பது போல, மற்றொரு பெண் என் திருமண ரிசப்ஷனில் கால் மேல் கால் போட்டுத்தான் உக்காருவேன் இதுதான் என் ஆசை என்றார். இதைக்கேட்டு கடுப்பான ஒரு பெண், கல்யாணத்திற்கு பெரியவர்கள் பலர் வருவார்கள் அவர்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு வேண்டும் இது என்ன மரியாதை இல்லாத தனம் என்றார்.

வெட்கம் வராது
என் திருமணம் கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் இதனால், பாடலுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டு வருகிறேன். ஆனால், பெண் கல்யாணத்திற்கு வெட்கப்பட்டுக் கொண்டுதான் வரவேண்டும் என்று ஒரு சில கட்டுப்பாடுகளை வைத்து இருக்கிறார்கள். எனக்கு எப்போ வெட்கம் வருகிறதோ அப்போதுதான் வெட்கப்பட முடியும் எல்லோரும் பார்க்கிறார்கள் என்பதற்காக வெட்கப்பட முடியாது என்றனர். இன்றைய எபிசோடு சுவாரசியமாக இருந்தது.


Click it and Unblock the Notifications











