மனைவியை அடித்து துவைக்கும் கணவர்கள்!: டிவி சீரியல்களில் டி.ஆர்.பி ஏற புது மந்திரம்…
தொலைக்காட்சி நெடுந்தொடர்களின் டி.ஆர்.பி ரேட்டிங்கினை உயர்த்துவதற்காக இப்போது புதுவிதமான உத்தி ஒன்றினை புகுத்தி வருகின்றனர்.
அதாவது மனைவியை அடித்து துன்புறுத்துவதுதான். இன்றைக்கு பெரும்பாலான சீரியல்களில் மனைவியை கைநீட்டி கூசாமல் அடிக்கின்றனர்.
வீட்டிற்குள் தனி அறையில் கூட இல்லை, பொது இடத்தில், அலுவலகத்தில் பலரின் முன்னிலையிலும் கூட அடித்து அவமானப்படுத்துகின்றனர். இதன்மூலம் டி.ஆர்.பி ரேட்டிங் உயரும் என்பதுதான் சீரியல் தயாரிப்பாளர்களின் நம்பிக்கை.

அடித்து துவைத்த கணவன்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தெய்வமகள் தொடரில் தன்னுடைய பெற்றோரை வீட்டு வேலை செய்யச் சொல்லி துன்புறுத்தும் மனைவியை அடித்து துவைத்து வீட்டை விட்டு வெளியே தள்ளுகிறான் அவளின் கணவன். இதுநாள் வரை மனைவியின் வில்லத்தனங்கள் எதையுமே கண்டுகொள்ளாமல் இருந்த அந்த கணவன் திடீரென்று வீரம் வந்து மனைவியை அடிக்கிறான்.

அலுவலகத்தில் அடித்த சுப்பு
அதேபோல வள்ளி சீரியலில் தனக்கு மேலதிகாரியாக உள்ள மனைவியை அலுவலகத்தில் பணியாளர்கள் முன்னிலையில் அறைகிறான் கணவன். அத்தனைபேர் முன்னிலையில் அடிவாங்கிய பெண், அவமானப்பட்டு நிற்கிறாள்.

குடிகார கணவன்
இதைவிட மோசமான காட்சிகள் எல்லாம் நாதஸ்வரம் தொடரில் இடம்பெறுகிறது. குடித்துவிட்டு வரும் கணவன் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவளை பலவிதங்களில் சித்ரவதை செய்கிறான்.

கை கால் அமுக்கணும்
மனைவியை உறங்கவிடாமல் செய்வதோடு விடிய விடிய தன்னுடைய கை கால்களை பிடித்துவிட சொல்கிறான். லேசாக கண் அயர்ந்த மனைவி மீது குளிர்ந்த நீரை ஊற்றி கொடுமை செய்கிறான்.

பளார்னு ஒரு அறை
எதிர்த்து பேசினால் நடத்தையைப் பற்றி பேசி அவமானப்படுத்துவது, அடித்து துவைப்பது போன்ற காட்சிகள்தான் தொடர்ந்து காட்சிப்படுத்தப்பட்டுவருகிறது.

வாணி ராணியிலும் கூத்து
ரசிகர்களை கவர்ந்த சீரியல் என்று பாராட்டு பெற்றுள்ள வாணி ராணி சீரியலிலும் நேற்றைய எபிசோடில் இந்த கூத்து அரங்கேறியது. அக்கா மகளின் சடங்கிற்கு தாய்மாமன் சீர் செய்யவிடாமல் தடுத்த மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்போகிறான். அதோடு நிற்காமல் கன்னத்தில் அறைந்து தன் வீரத்தை நிரூபிக்கிறார் ஜோதியின் கணவர்.

திடீர் வீரம் எதற்கு?
சீரியல்களில் பெண்கள் ராஜ்ஜியம்தான் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. ஆனால் திடீரென்று இப்போது குடும்ப வன்முறைக் காட்சிகள் அதிகம் காட்சிப்படுத்தப்படுகின்றன. இப்படி ஆண்களை எல்லாம் வீராதி வீரர்களாக காட்டுவது ஏன் என்றுதான் தெரியவில்லை.

எல்லாம் டி.ஆர்.பிதான்
வீட்டில் கணவன், தனது மனைவியை அடிப்பது போன்ற காட்சிக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருப்பதாகவும், அதனால் டி.ஆர்.பி அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.

அதிகரிக்கும் விளம்பரக் கட்டணம்
டெலிவிஷன் ரேட்டிங் பாயிண்ட் என்பதன் சுருக்கமே, டி.ஆர்.பி என்பது. டிவி' சேனல் எல்லாவற்றுக்குமே சுவாச மந்திரம் எதுவென்றால், அது டி.ஆர்.பி., ரேட்டிங்தான். இதை வைத்து தான் ஒரு சேனலின் வரவும், விளம்பரமும் நிர்ணயிக்கப்படுகின்றன.

ஆள மாத்து… இல்லை கதையை மாத்து
டி.ஆர்.பி., ஏற ஏற, விளம்பரக் கட்டணம் எகிறும். ஒளிபரப்பாகும் நேரத்தைப் பொறுத்து நிகழ்ச்சிகள் இவ்வளவு டி.ஆர்.பி., பெற வேண்டும் என்ற விஷயத்தை எல்லாம் சேனல்கள் ஏற்கெனவே முடிவு செய்து வைத்திருக்கும். அந்த ரேட்டிங்கை விட சற்று குறைந்தாலும், சீரியலின் கதை மாறும், டைரக்டர்கள் மாறுவர்.

மாலைபோட்டுவாங்கப்பா…
கேரக்டர் மாறும். சில சமயம் நிகழ்ச்சியே மாறிவிடும். இதனால்தான் சீரியல்களில் திடீர் திடீரென்று கிளைக் கதைகள் தோன்றும். சில சமயம் ஆளை சாகடித்து போட்டோவிற்கு மாலை போட்டுவிடுவார்கள்.

எகிறும் டி.ஆர்.பி
கோபம், சண்டை, அழுகை போன்றவை வரும்போது டி.ஆர்.பி., சர்ரென்று ஏறும். சீரியல் மட்டுமல்லாது, நடன நிகழ்ச்சிகளிலும், பாட்டுப் போட்டியிலும் போட்டியாளர்கள் நீக்கப்பட்டதும் ஏங்கி ஏங்கி அழுவர். விஜய் டிவியில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் சிம்புவின் அழுகைதான் அந்த நிகழ்ச்சியின் டி.ஆர்.பியை உயர்த்தியதாம்.

கண்ணீரில் காசு பார்க்கும் சேனல்கள்
உற்சாகம், சந்தோசம், பொழுதுபோக்கு என்ற நிலை மாறி இன்றைக்கு பெண்களின் கண்ணீரை வைத்து காசு பார்ப்பது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குடும்ப வன்முறைகளை டிவி சீரியல்களில் தடை செய்யவேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.


Click it and Unblock the Notifications











