சரிகமப.. வெற்றி பெறாவிட்டாலும் யோகஸ்ரீயின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்.. குடும்பமே செம மகிழ்ச்சி
சென்னை: ஜீ தமிழ் சேனலில் சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சி நடந்தது. பல நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில்தான் இறுதிச்சுற்று நடந்தது. இதில் திவினேஷ், அபினேஷ், யோகஸ்ரீ, ஹேமித்ரா, ஸ்ரீமதி,மஹதி ஆகிய ஆறு பேர் கலந்துகொண்டார்கள். இவர்களில் திவினேஷ் டைட்டிலை தட்டி சென்றார். அடுத்த இடத்தை யோகஸ்ரீ பிடித்தார். இறுதி சுற்றில் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார் சேனல்களில் இப்போது சிறுவர்களின் திறமையை ஊக்குவிக்கும் விதமாகவும்; அந்தத் திறமையை பொதுவெளிக்கு அடையாளப்படுத்தும் விதமாகவும் பல நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. அதில் ஒன்றுதான் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தொடங்கி நடந்தது. இதில் பின்னணி பாடகர்கள் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோர் நடுவர்களாக செயல்பட்டுவந்தார்கள். ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை இந்த நிகழ்ச்சி பெற்றிருந்தது. போட்டியாளர்களாக கலந்துகொண்ட ஒவ்வொருவரும் தங்களது திறமையை அபாரமாக வெளிப்படுத்திவந்தார்கள்.
இறுதிச்சுற்று: சூழல் இப்படி இருக்க இந்த நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றுக்கு மொத்தம் ஆறு பேர் தேர்வானார்கள். ஆறு பேருமே திறமை வாய்ந்தவர்கள் என்பதால் இறுதிச்சுற்றில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டது. நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக வந்தார். எதிர்பார்த்தபடியே ஆறு பேரும் வெற்றிக்காக தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி பாடி ரசிகர்களையும், நடுவர்களையும் அசரடித்தார்கள்.

திவினேஷ் வெற்றி: இருப்பினும் ஒருவர்தான் டைட்டில் வின்னர் ஆக முடியும் என்பதால்; ஆறு திறமைகளில் திவினேஷ் வெற்றியாளராக வாகை சூடினார். முக்கியமாக இறுதிச்சுற்றில் வாலி எழுதிய தத்துவ பாடலான நான் ஆணையிட்டால் பாடலை பாடி டைட்டிலை தட்டி சென்றார். அவர் அந்தப் பாடலை பாடிய விதம் பலரையும் மெய் சிலிர்க்க வைத்தது. சிவகார்த்திகேயனும் அசந்துபோய் திவினேஷுடன் சேர்ந்து பாடல் பாடியும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தார். டைட்டில் வென்ற திவினேஷுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.
மிஸ்ஸான யோகஸ்ரீ: இதற்கிடையே இந்த சீசன் முழுவதுமே யோகஸ்ரீ ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். முறையான சங்கீத பயிற்சிக்கு அவர் சென்றிருக்காவிட்டாலும் அவர் பாடிய விதம் பலரையும் கவர்ந்தது. மேலும் அவர் பாடல்கள் தேர்ந்தெடுத்த விதமும் கொண்டாடப்பட்டது. எனவே கண்டிப்பாக இந்த சீசனின் டைட்டில் வின்னர் அவர்தான் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் திவினேஷ் தட்டி செல்ல யோகஸ்ரீக்கு இரண்டாவது இடம் கிடைத்தது.
குடும்ப பின்னணி: யோகஸ்ரீ கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். அவரது தந்தை முதலில் சுப நிகழ்ச்சிகளுக்கு ஃபோட்டோக்கள் எடுக்கும் தொழிலை செய்துவந்தார். ஆனால் குடும்ப சூழல் காரணமாக அந்தத் தொழிலை விட்டுவிட்டு டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு சென்றுவிட்டார். சூழல் இப்படி இருக்க குடும்ப வறுமை காரணமாக யோகஸ்ரீயின் திறமை மேலும் வளராமல் போய்விடக்கூடாது என்று நினைத்த சிலர் அவரது தந்தை புதிய தொழில் தொடங்குவதற்கு உதவி செய்திருந்தார்கள்.
கிடைத்தது வீடு: அதேபோல் தனது வீடும் சிறிய அளவில்தான் இருக்கும் என்று இந்த சீசனின்போது தெரிவித்திருந்தார். இப்போது அவர் இரண்டாவது இடம் பிடித்திருப்பதை அடுத்து அவருக்கு 1800 சதுர அடி அளவில் ஒரு வீடும் வழங்கப்பட்டிருக்கிறது. முதல் இடத்தை பிடிக்காவிட்டாலும் தனது மகளின் திறமைக்காக கிடைத்த வீட்டை நினைத்தை அவரது பெற்றோர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மேலும் யோகஸ்ரீக்கு தங்களது வாழ்த்தையும் பலர் தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











