Saregamapa: காதல் திருமணத்தால் பிரிந்த குடும்பம்.. சரிகமப மூலம் மீண்டும் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்!
சென்னை: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிவரும் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்களின் பேவரைட் லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளது.
இரண்டு சீசன்களை முடித்துள்ள இந்த நிகழ்ச்சி தற்போது மூன்றாவது நிகழ்ச்சியை பரபரப்பாக நடத்தி வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

நிகழ்ச்சி 28 போட்டியாளர்களுடன் துவங்கிய நிலையில், ஒவ்வொரு வாரமும் சிறப்பான சுற்றுக்களுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது-
பிரிந்த குடும்பத்தை ஒன்றிணைத்த சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சி. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்கி வருகிறார். இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்துள்ள இந்த நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசனையும் சிறப்பாக நடத்தி வருகிறது. 28 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் எலிமினேஷன் சுற்றுக்களும் வித்தியாசமான சுற்றுக்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
நிகழ்ச்சியில் ஒவ்வொரு பேக்கிரவுண்டில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களை பார்க்க முடிகிறது. இலங்கையில் இருந்து பங்கேற்றுள்ள தேயிலைத்தோட்ட தொழிலாளியின் மகள் அசானி, காதல் திருமணம் செய்ததால் குடும்பத்தினருடன் வருடக்கணக்கில் பிரிந்து வாழும் தக்ஷிதா ஸ்ரீயின் பெற்றோர் உள்ளிட்ட பல சோகக்கதைகளை இந்த நிகழ்ச்சியில் பார்க்க முடிகிறது. ஒவ்வொரு வாரமும் நிகழ்ச்சியில் இது தொடர்பான சுவாரஸ்யங்களையும் பார்க்க முடிகிறது. இந்த வாரம் நிகழ்ச்சியில் டெடிகேஷன் ரவுண்ட் நடைபெறுகிறது.
இந்த சுற்றில் ஒவ்வொரு குட்டீசும் தேர்ந்தெடுத்தப் பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற தக்ஷிதா ஸ்ரீ, பூங்காவியம் பேசும் ஓவியம் என்ற பாடலை பாடி நடுவர்களையும் ரசிகர்களையும் அசத்தினார். இவர் நிகழ்ச்சியில் நடுவர்கள் உள்ளிட்ட அனைவரையும் உறவுமுறை சொல்லி அழைத்து வருவது சிறப்பாக பார்க்க முடிகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதே மேடையில் இவர்களது பெற்றோரின் சோகக்கதை வெளியானது. காதல் மற்றும் கலப்புத் திருமணம் செய்ததால் தக்ஷிதாவின் பெற்றோரை அவர்களது பெற்றோர் வருடக்கணக்கில் விலக்கி வைத்துள்ளனர்.

இந்நிலையில் வருடக்கணக்கில் தக்ஷிதா எந்த உறவுகளும் இல்லாமல் வாழ்ந்து வருவதாகவும் அதனால் யாரை பார்த்தாலும் உறவுமுறை சொல்லி அழைப்பதை அவள் விருப்பத்துடன் செய்து வருவதாகவும் அவளது பெற்றோர் கூறியிருந்தனர். கண்ணீருடன் தங்களது பெற்றோர் தங்களை விலக்கி வைத்த சோகக் கதையை அவர்கள் பகிர்ந்துக் கொண்டனர். இந்நிலையில் தற்போது இரண்டு குடும்பமும் இந்த நிகழ்ச்சியில் ஒன்று சேர்ந்துள்ளனர். அவர்கள் சரிகமப மேடைக்கு வந்து தக்ஷிதாவிற்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.
ஊர் மக்கள் என்ன சொல்வார்களோ என்ற பயத்தில்தான் இதுவரை தாங்கள் தக்ஷிதாவின் பெற்றோரை விலக்கி வைத்து பேசாமல் இருந்ததாகவும் தற்போது தங்களின் பேத்திக்காக ஒன்று சேர்ந்துள்ளதாகவும் அவர்கள் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வு பார்வையாளர்களை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து பிரிந்திருந்த குடும்பத்தை ஒன்றாக சேர்த்து வைத்தது குறித்து சரிகமப குழுவினரும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டனர்.


Click it and Unblock the Notifications











