உடனே காரை திருப்பு..அவங்க ஏமாந்துடுவாங்க பாவம்..பாலுமகேந்திராவுக்குள் எவ்வளவு மனிதாபிமானம் தெரியுமா?
சென்னை: கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பாலுமகேந்திரா. அடிப்படையில் ஒளிப்பதிவாளரான இவர் இயக்குநராகவும் ஜொலித்தார். அவர் இயக்கிய அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை, தலைமுறைகள் உள்ளிட்ட படங்கள் இன்றுவரை பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது. அவரது படைப்பு என்பதை தாண்டி அவரிடம் இருந்த மனிதாபிமானமும் அனைவராலும் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தை பூர்வீகமாகக் கொண்டவர் பாலுமகேந்திரா. இந்தியாவில் ஒளிப்பதிவு தொடர்பான படிப்பை படித்த அவர்; ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். அவரது ஒளிப்பதிவு என்றாலே ஏதோவொரு மேஜிக் இருக்கும். ஒளிப்பதிவாளராக வென்ற அவர்; பிறகு இயக்குநராக அவதாரம் எடுத்த அவர் அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை, மறுபடியும், சதிலீலாவதி, அது ஒரு கனாக்காலம், தலைமுறைகள் என ஏராளமான படங்களை இயக்கி இயக்குநராகவும் வென்றவர்.
வீரியமான வித்துக்கள்: பாலுமகேந்திராவின் உதவி இயக்குநர்கள்தான் இன்று இந்தியாவின் முக்கியமான இயக்குநர்கள் லிஸ்ட்டில் இருக்கிறார்கள். பாலா, ராம், வெற்றிமாறன், சீனு ராமசாமி, விக்ரம் சுகுமாறன் என அந்த லிஸ்ட் செல்லும். அதேபோல் பாடலாசிரியர் நா. முத்துக்குமாரும் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்ச்சைகள்: பாலுமகேந்திரா சினிமாவில் எவ்வளவுக்கு எவ்வளவு புகழின் உச்சத்தில் இருந்தாரோ அதே அளவுக்கு சர்ச்சைகளின் உச்சத்திலும் இருந்தவர். முதலில் அகிலா என்பவரை திருமணம் செய்துகொண்ட அவர்; பிறகு நடிகை ஷோபாவை திருமணம் செய்துகொண்டார். அதனையடுத்து நடிகை மௌனிகாவுடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இவர்களில் அகிலா - பாலுமகேந்திராவுக்கு ஷங்கி என்ற மகன் இருக்கிறார்.
கொலை பழி: அதேபோல் நடிகை ஷோபா உயிரிழந்தது தற்கொலை இல்லை; கொலைதான். அதனை பாலுமகேந்திராதான் செய்தார் என்ற பேச்சும் உண்டு. ஆனால் பாலுமகேந்திரா அதுகுறித்து பெரிதாக எந்த ரியாக்ட்டும் செய்துகொள்ளவில்லை. அதேசமயம் அவர் மீது அவதூறு பரப்புவதற்காகத்தான் இந்த கொலை பழியை சுமத்துகிறார்கள் என்று அவரது ரசிகர்களும், ஆதரவாளர்களும் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
அவரிடம் இருந்த மனிதாபிமானம்: இப்படி அவரை சுற்றி பாசிட்டிவ், நெகட்டிவ் என அத்தனை விஷயங்களும் இருக்கின்றன. அதேசமயம் அவரிடமிருந்த மனிதாபிமானத்தை கொண்டாடாதவர்கள் யாருமே இல்லை. யாராக இருந்தாலும் மரியாதையுடன் பேசக்கூடிய அவர்; அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பை பொழிந்துகொண்டிருந்தவர். அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை இதில் பார்க்கலாம். அதாவது அவரிடம் பாலா உதவி இயக்குநராக இருந்த சமயம் அது.

காரை திருப்புங்கள் உடனே: அந்த சமயத்தில் பாலுமகேந்திராவுடன் பாலா காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பதறியபடி தன்னுடைய கார் டிரைவரிடம் உடனே காரை என்னுடைய அலுவலகத்துக்கு திருப்பு ப்பா என்று கூறினார். பாலாவுக்கும், ஓட்டுநருக்கும் என்ன ஏதுவென்று தெரியாமல் பதறியபடி சென்றார்கள். அலுவலகத்துக்குள் சென்ற பாலுமகேந்திரா, டக் டக்கென்று இரண்டு அறைகளின் ஜன்னல் கதவுகளை திறந்தாராம். சின்ன சின்ன பாத்திரங்களில் தண்ணீர், தானியங்கலை வைத்தாராம்.
பாலாவுக்கோ என்ன செய்கிறார் என்று புரியாமல் பாலுமகேந்திராவிடம் எதற்காக இதை செய்கிறீர்கள் என்று கேட்டாராம். அதற்கு அவரோ, 'இல்லை பாலா எப்போதும் பூனைகளும், சில புறாக்களும் தவறாமல் இந்த அறைக்கு வந்துவிடும். அவைகளுக்கு நீரும், உணவும் வைப்பேன். இன்று ஏதோ ஒரு நினைப்பில் இதையெல்லாம் மறந்துவிட்டேன். வந்து ஏமாந்துடகூடாதுல்ல என்று சொன்னாராம். அதனைப் பார்த்த பாலா, இப்படி ஒரு மனிதாபிமானியா என்று நெகிழ்ச்சியடைந்தாராம். இந்த சம்பவத்தை பாலா தன்னுடைய சுயசரிதையான, 'இவன்தான் பாலா' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











