ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள்.. யாரும் செய்ய துணியாததை செய்த இசை புயல்.. செம சம்பவம் தெரியுமா?
சென்னை: இசை புயல் என்று கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆஸ்கர் விருதுகள், கிராமி விருதுகள், தேசிய விருதுகள் என எந்த விருதினையும் விட்டு வைக்காமல் பெற்ற அவருக்கென்று உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவரது இசையமைப்பில் அடுத்ததாக காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் இன்று அவர் தனது 58ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி பலரும் அவருக்கு தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.
திலீப்குமார் என்கிற இயற்பெயரை கொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் வறுமையின் பிடியில் வாழ்ந்தவர். அவரது தந்தை சேகர் உயிரிழந்த பிறகு குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பை சிறு வயதிலேயே ஏற்றுக்கொண்டதன் காரணமாக கீ போர்டு வாசிக்கும் தொழிலை கையில் எடுத்தார். அதன்படி இளையராஜா, வித்யாசாகர், டி.ராஜேந்தர் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுக்கு கீ போர்டு வாசித்தார். அதேபோல் விளம்பர படங்களுக்கும் இசையமைக்க தொடங்கினார் அவர்.

ரோஜா என்ட்ரி: சூழல் இப்படி இருக்க மணிரத்னமும், கே.பாலசந்தரும் தங்கள் படத்துக்கு புது இசையமைப்பாளரை அறிமுகம் செய்ய முடிவு செய்து ரோஜா படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்க வைக்க முடிவு செய்தனர். பதின் பருவத்தில் அந்தப் படத்துக்கு இசையமைத்த ரஹ்மான் இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் ஆகியோரை ஆச்சரியப்படுத்தினார். அந்தப் படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டடித்தன. மேலும் அவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினை பெற்றுக்கொடுத்தது.
இசை புயல் உருவாக்கம்: ரோஜா படத்தின் பாடல்கள் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அவர் மீது கவனத்தை திருப்பியது. அதுவரை இளையராஜாவின் கோட்டையை தகர்க்க முடியாமல் பலரும் திணறிக்கொண்டிருந்த சூழலில் இசை புயலோ ரொம்பவே அசால்ட்டாக ராஜாவின் கோட்டையை அசைத்து பார்த்தது. இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஏ.ஆர்.ரஹ்மானை நோக்கி படையெடுக்க தொடங்கினார்கள். ரஹ்மானும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு புதிது புதிதாக இசையை உருவாக்கினார்.
அதுவரை கேட்காத சத்தம்: முக்கியமாக தமிழ் சினிமா ரசிகர்கள் அதுவரை கேட்காத புது இசையை ரஹ்மான் மூலம் கேட்டார்கள். அவர் எலக்ட்ரானிக் இசையைத்தான் கொடுக்கிறார் என்று பலரும் விமர்சித்த சூழலில்; பாரதிராஜா இயக்கிய கிழக்கு சீமையிலே, கருத்தம்மா ஆகிய இரண்டு கிராமிய படங்களுக்கும் பக்காவான இசையை கொடுத்து '; தன்னால் இந்த மாதிரியான இசையையும் கொடுக்க முடியும் என்பதை தமிழ் சமூகத்துக்கு உணர்த்தினார்.
எல்லை கடந்த இசை புயல்: தமிழில் மட்டும் நிலைகொண்டிருந்த இசை புயல் கொஞ்சம் கொஞ்சமாக பாலிவுட்டுக்கு சென்றது. அங்கு சென்றும் தனது ஆதிக்கத்தை செலுத்தியதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் அறியப்பட்டது. அந்த சமயத்தில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு இசையமைத்து ஆஸ்கர் விருதுகள், கிராமி விருதுகளை பெற்று உலகம் முழுவதும் அறியப்பட்டது தமிழ்நாட்டில் உருவான இசை புயல்.
யாரும் செய்ய துணியாத சம்பவம்: இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 58ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சூழல் இப்படி இருக்க எந்த இசையமைப்பாளரும் செய்ய துணியாத சம்பவம் ஒன்றை அவர் செய்ததை பார்க்கலாம். அதாவது ஒரு இசையமைப்பாளர் ஒரு பாடலில் இசை கருவிகளை கண்டிப்பாக பயன்படுத்துவார்கள். வித்தியாசம் வித்தியாசமாக அந்த கருவிகளை பயன்படுத்தி பாடலையும், தனது மெட்டையும் மெருகேற்றுவார்கள். ஆனால் இசை கருவிகளே இல்லாமல் ஒரு பாடலை உருவாக்க முடியும் என்றும்; அதனை ஹிட்டாக்க முடியும் என்றும் நிரூபித்தவர் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஆம், மணிரத்னம் இயக்கத்தில் உருவான திருடா திருடா படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் இன்றுவரை கொண்டாடப்படக்கூடியவை. அதில், ராசாத்தி என் உசுரு என்னுதில்ல என்ற பாடலை அனைவருமே கேட்டிருப்போம். அந்தப் பாடலை சாகுல் ஹமீது பாடியிருப்பார். இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால் இப்பாடலில் ஒரு இசை கருவியைக்கூட ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்தியிருக்கமாட்டார். அதேசமயம் தேவையான இசைக்கு கோரஸ் குரல்களையும், ஹம்மிங் குரலையும் மட்டும்தான் பயன்படுத்தியிருப்பார். மின்னணு இசை கருவியால் மட்டும்தான் ஏ.ஆர்.ரஹ்மான் இசையை கொடுக்கிறார் என்று பலரும் கூறி வந்த சூழலில் இசை கருவி இல்லாமல்கூட தன்னால் ஒரு பாடலை கொடுத்து ஹிட்டாக்க முடியும் என்பதை 90களிலேயே நிரூபித்து காட்டி சம்பவம் செய்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஃபில்மிபீட் தமிழ் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்..


Click it and Unblock the Notifications











