Bharathiraja: என் தெய்வத்துக்கு இந்த நிலமையா? பாரதிராஜா காலில் விழுந்து அழுத மூத்த நடிகர்
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா நேற்று அதாவது மார்ச் 25ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு தனது 48 வது வயதில் உயிரிழந்தார். இவரது மறைவுச் செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மனோஜ் பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தவும், பாரதிராஜாவுக்கு ஆறுதல் சொல்லவும் மொத்த திரையுலகமும் நீலாங்கரையில் உள்ள பாரதிராஜா வீட்டில் குழுமி உள்ளார்கள். இந்நிலையில் பல நடிகர்களும் பாரதிராஜாவின் இந்த நிலையைப் பார்த்து கண்ணீர் வடித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் நடிகர் இளவரசுவின் பேச்சு இணையத்தில் பரவலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா பல நடிகர்களையும் நடிகைகளையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். வைரமுத்துவை பாடலாசிரியராக அறிமுகம் செய்து வைத்ததே, பாரதிராஜா தான். இவரது பட்டறையில் இருந்து வந்தவர்கள் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் சாதனை படைத்துள்ளார்கள். அப்படி பாரதிராஜாவின் உதவியாளராக இருந்து, ஒளிப்பதிவாளராக மாறி, இப்போது ஆகச் சிறந்த குணச்சித்திர நடிகராக வலம் வருபவர், நடிகர் இளவரசு. இவர் நிகழ்ச்சி ஒன்றில், பாரதிராஜா குறித்து பேசியது தற்போது இணையத்தில் பரவலாக பரவி வருகிறது.

அதாவது அந்த நிகழ்ச்சியில், " நான் பல ஆண்டுகளாக எங்களின் குருநாதர் பாரதிராஜாவின் உதவியாளராக இருந்துள்ளேன். அவர் நடந்தால் அவருடன் நடந்து, தூங்கினால் தூங்கி, ஓடினால் அவருடன் ஓடி வேலை பார்த்திருக்கிறேன். அவரது நிழல் போல அவருடன் இருந்தேன். அவர் கொடுத்த வாழ்க்கைதான் இன்றைக்கு எனது வாழ்க்கை.
பாரதிராஜா: இப்போது இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்து வருகிறோம். நான் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதற்கு முன்னர், அவரது காட்சிகள் படமாக்கப்பட்டு, அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அப்படி இருக்கும்போது இயக்குநர் அவரது காட்சிகளை எனக்கு மானிட்டரில் காட்டினார். அதைப் பார்த்து எனக்கு அழுகையே வந்துவிட்டது. காட்சி சிறப்பாக உள்ளது என இயக்குநர் நினைத்துக் கொண்டார். எனது தெய்வமான அவரது தடுமாற்றத்தையும் முதுமையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கண்ணீர்: எனது படப்பிடிப்பு முடிந்ததும், நேராக குருநாதர் பாரதி ராஜாவைப் பார்க்க தேனியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றேன். அவரைப் பார்த்ததும் அவர் காலடியில் அமர்ந்து கொண்டேன். அப்போது என்னால் அவரது முதுமையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் காலைப் பிடித்துக் கொண்டு அழுதேன். அவர் என்ன ஆச்சு என்று கேட்டார், ஆனால் நான் உடனே, நான் உங்களைக் கோலையாக்க விரும்பவில்லை. நான் வருகிறேன் எனக் கூறி அங்கிருந்து கிளம்பிவிட்டேன்" எனக் கூறினார்.

துயரம்: பாரதிராஜாவின் முதுமையை புரிந்து கொண்டாலும், அவர் இப்படி தடுமாறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் கூறினார். இப்படி பாரதிராஜா மீது பாசமும், மரியாதையும் வைத்திருக்கும் இளவரசு போன்ற நடிகர்கள் பாரதிராஜாவைத் தற்போது என்ன சொல்லித் தேற்றப்போகிறார் என்ற கேள்வி தற்போது இணைய வாசிகள் மத்தியில் பரவலாக உள்ளது. மகனை இழந்து, துயரத்தின் உச்சத்தில் இருக்கும் பாரதிராஜாவுக்கு மொத்த தமிழ் திரையுலகமும் ஆறுதல் கூறி வருகிறது. பாரதிராஜா இந்த துயரத்தில் இருந்து எப்படி மீண்டு வருவார் என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது.



Click it and Unblock the Notifications











