விவேக் பிழைச்சிடுவார்னு ரொம்ப நம்புனேன்.. உள்ளேயே விடல.. பிரபல காமெடி நடிகர் உருக்கம்
சென்னை: நடிகர் விவேக் கோலிவுட்டில் முக்கியமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர். பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். தன்னுடைய காமெடியில் பகுத்தறிவு கருத்துக்களையும், சமூகத்துக்கு தேவையான கருத்துக்களையும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தவர் விவேக். அவர் கடந்த் 2021ஆம் ஆண்டு உயிரிழந்தார். இந்தச் சூழலில் அவர் பற்றி பிரபல காமெடி நடிகர் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
விவேக் தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத நகைச்சுவை நடிகர். டிகிரி முடித்துவிட்டு அரசாங்க வேலை பார்த்துக்கொண்டிருந்தவருக்கு சினிமா மீது எப்போதும் தீராத ஆர்வம் இருந்தது. அதன் காரணமாக ஒருபக்கம் வேலையை பார்த்துக்கொண்டு மறுபக்கம் சினிமா வாய்ப்பையும் விடாமல் தேடிக்கொண்டிருந்தார். தீவிரமாக முயற்சிப்பவர்களை சினிமா எப்போதும் கைவிடாது என்ற விதி விவேக்குக்கும் எழுதப்பட்டிருந்தது.
மனதில் உறுதி வேண்டும்: தீவிர தேடுதலுக்கு பிறகு இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் கடந்த 1987ஆம் ஆண்டு நடிகராக அறிமுகமானார் விவேக். முதல் படத்திலேயே அவருக்கு கிடைத்த கனமான கதாபாத்திரத்தை எந்த சுமையும் இல்லாமல் அல்லது சுமையை வெளியில் காட்டிக்கொள்ளாமல் மிகச்சிறப்பாக நடித்து முடித்தார். இதனால் கே.பாலசந்தரின் குட் புக்கிலும் இடம் பிடித்தார்.

தொடர்ந்து வாய்ப்புகள்: முதல் படத்தின் வெற்றி, விவேக்கின் சிறந்த நடிப்பை அடுத்து தொடர்ந்து வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தார். ஆனால் இரண்டு வருடங்கள் கழித்தே அவருக்கு அடுத்த வாய்ப்பு கிடைத்தது. கே.பாலசந்தர் 1989ஆம் ஆண்டு இயக்கிய புது புது அர்த்தங்கள் படத்தில் மீண்டும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு அடுத்து வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைக்க ஆரம்பித்தன.
முன்னணி நகைச்சுவை நடிகர்: ஒருகட்டத்தில் விவேக் படு பிஸியாக மாறினார். ஒரே வருடத்தில் 8லிருந்து 10 படங்கள்வரை நடிக்கும் அளவுக்கு உயர்ந்தார். இடை இடையே அவருக்கு போட்டியாக கருதப்பட்ட நடிகர் வடிவேலுவுடன் இணைந்தும் நடித்து அசத்தினார். வடிவேலுவின் பாணி தன்னை தாழ்த்திக்கொண்டு மற்றவர்களை சிரிக்க வைப்பது; விவேக்கின் பாணி தனது நகைச்சுவையில் சமூக கருத்துக்கள், முற்போக்கு கருத்துக்கள் போன்றவைகளை வைப்பது. அதனாலேயே விவேக்கின் காமெடி ஸ்டைல் அதிகம் ரசிக்கப்பட்டது.
உயிரிழந்த விவேக்: சூழல் இப்படி இருக்க கடந்த் 2021ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் தடுப்பூசி போட்டார். ஆனால் அந்த ஊசி போட்ட அடுத்த நாளே உயிரிழக்கவும் செய்தார். திடீரென அவர் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒருதரப்பினரோ, தடுப்பூசி போட்டுக்கொண்டதுதான் விவேக் உயிரிழப்புக்கு காரணம் என்று பேசவும் ஆரம்பித்துவிட்டார்கள். இந்நிலையில் பிரபல காமெடி நடிகரான காக்கா கோபால் விவேக் பற்றி பேசியிருப்பது ட்ரெண்டாகியிருக்கிறது.
காக்கா கோபால் பேட்டி: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "நான் தொடரும் படத்தில்தான் அறிமுகமானேன். அந்தப் படத்துக்கு பெரிதாக வாய்ப்பு இல்லை. அப்போதெல்லாம் விவேக் என்னை பார்க்கும்போது பொறுமையா இரு காக்கா கண்டிப்பாக வாய்ப்பு வரும் என்பார். பிற்கு ரன் உள்ளிட்ட படங்களில் அவருடன் சேர்ந்து நடித்தேன். விவேக் பெரிய க்ரியேட்டர். நல்ல மனிதர். நம்மோடு இருப்பவர்கள் வளரணும் என்று நினைப்பார். அவர் நன்றாகத்தான் இருந்தார்.
யோகா, உடற்பயிற்சி எல்லம் செய்வார்தான். ஊசி போட்டார் திடீரென்று அடுத்த நாள் இறந்துவிட்டார். நாங்கள் மருத்துவமனைக்கு போனோம் எங்களை உள்ளே விடவில்லை. எப்படியாவது அவர் பிழைத்துவிடுவார் என்றே நம்பினேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











