Ponnambalam - நான் போனாலே விஜயகாந்த் அதை செய்திடுவார்.. பொன்னம்பலம் உருக்கம்
சென்னை: Ponnambalam (பொன்னம்பலம்) விஜயகாந்த் குறித்து பொன்னம்பலம் ஒரு பேட்டியில் ரொம்பவே உருக்கமாக பேசியிருந்தார்.

தமிழ் சினிமாவில் வில்லனாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் பொன்னம்பலம். ஆஜானுபாகுவான உடலும், வித்தியாசமான முக பாவனையும் என ஒரு காலத்தில் திரையுலகை கலக்கியவர் பொன்னம்பலம். இப்போது திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.
அபூர்வ சகோதரர்களில் அறிமுகம்: சண்டைக் கலைஞராக இருந்த பொன்னம்பலம் கமல் ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் மூலம் முழு நேர நடிகராக அறிமுகமானார்.அதன் பிறகு வெற்றிவிழா, மைக்கேல் மதன காம ராஜன், நாட்டாமை, பெரிய மருது, மாநகர காவல் என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார்.
பிக்பாஸில் பொன்னம்பலம்: முன்னணி நடிகராக வலம் வந்த பொன்னம்பலத்துக்கு ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் பெரிதாக அமையவில்லை. இதனையடுத்து கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் கலந்துகொண்ட சீசனில் சிறப்பாகவே விளையாடினார். இருந்தாலும் அவரால் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல முடியவில்லை. எனினும், பிக்பாஸ் மூலம் மீண்டும் திரையுலகில் ஒரு ரவுண்டு வரலாம் என அவர் கணக்கு போட்டிருந்தார். ஆனால் அதுவும் பொய்த்துப்போனது.
உடல்நலக்குறைவு: சூழல் இப்படி இருக்க பொன்னம்பலத்துக்கு சிறுநீரகத்தில் பிரச்னை வந்தது. எனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை நடந்து உடல்நலம் தேறியது. தான் உடல்நலக்குறைவில் இருந்தபோது தனக்கு தனுஷும், சிரஞ்சீவியும் அதிக அளவு உதவியதாக பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருந்தார் பொன்னம்பலம்.
நான் போனால் விஜயகாந்த் செய்வது: இந்நிலையில் பொன்னம்பலம் விஜயகாந்த்தை பார்க்க சென்றாலே விஜயகாந்த் தவறாமல் ஒரு விஷயத்தை செய்திடுவாராம். அதாவது ஒருமுறை பொன்னம்பலம் விஜயகாந்த்தை பார்க்க சென்றிருக்கிறார். உள்ளே வந்தவுடன் பொன்னம்பலத்திடம் விஜயகாந்த், 'என்னடா விஷயம்' என கேட்டிருக்கிறார்.

அதற்கு பொன்னம்பலமோ இல்லை அண்ணே அந்த படம் என்று பேச்சை ஆரம்பித்திருக்கிறார். உடனடியாக அவரது பேச்சை மறித்த விஜயகாந்த் டேய் அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். நீ முதல உள்ளே போ என்று சாப்பாடு போடும் இடத்துக்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கு ஒரு சட்டி நிறைய நல்லி எலும்பு சமைத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறது. இதனைப் பார்த்த பொன்னம்பலம் என்ன அண்ணே இது என கேட்க; ஆமா டா உனக்குதான் நல்லி எலும்புனா பிடிக்கும்ல.. நீ வரேனு சொன்னவுடன் முதல் வேளையா அதை எடுத்து சமைக்க சொன்னேன் என்று சொல்லியிருக்கிறார்.
இதனை பொன்னம்பலமே ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். மேலும் விஜயகாந்த் மட்டும் நல்ல உடல் நிலையுடன் இருந்திருந்தால் எனக்கு எந்த கஷ்டமும் வந்திருக்காது என்றும் கலங்கியபடி தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











