நிம்மதியான வாழ்க்கைனா இதுதான் சார் - ரகுவரன் அளித்த அட்டகாசமான பதில்
சென்னை: நிம்மதியான வாழ்க்கை என்றால் என்ன என்பது குறித்து நடிப்பு அரக்கன் ரகுவரன் அளித்த அட்டகாசமான பதில்.
கோலிவுட் எத்தனையோ நடிகர்களை கண்டிருக்கிறது. ஆனால் ரகுவரன் போல் இதுவரை யாரையும் கோலிவுட்டால் கண்டெடுக்க முடியவில்லை. ஏனெனில் ரகுவரன் நடிப்பில் பல வேரியஷன்களை காண்பிக்கக்கூடியவர். அப்படி அவர் பல வேரியஷன்களை காட்டி நடித்த படங்கள் ஏராளம்.

ஹீரோவாக ரகுவரன்
சினிமா கனவோடு சென்னைக்கு வந்த ரகுவரனுக்கு எடுத்ததும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நடிப்பை முறையாக கற்றுக்கொள்ள முடிவெடுத்த அவர் சினிமா கல்லூரியில் இணைந்து படித்தார். அங்கு அனைத்து வித்தைகளையும் கற்றுக்கொண்ட ரகுவரன் தொடர்ந்து வாய்ப்புகள் தேட ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அந்தப் படமும் தேசிய விருது வென்றது.

ஹீரோ டூ வில்லனான ரகுவரன்
தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தவர் ஒருகட்டத்தில் வில்லன் நடிகராக மாற முடிவு செய்தார். வில்லன் என்றால் ஆஜானுபாகுவாக இருக்க வேண்டும் என்ற விதி அப்போது கோலிவுட்டில் இருந்தது. அதை அடித்து சுக்கு நூறாக்கியவர் ரகுவரன். வில்லனாக நடிப்பதற்கு உடல் தேவையில்லை தனித்துவமான உடல்மொழியும், தேர்ந்த நடிப்பும் போதும் என நிரூபித்தவர் அவர். அப்படி அவர் நடித்த வில்லன் கதாபாத்திரங்கள் இன்றுவரை ஆல்டைம் ஃபேவரைட்.

மார்க் ஆண்டனியாக கலக்கிய ரகுவரன்
ரகுவரன் ஒரு நடிப்பு ராட்சசன் என்பதற்கு உதாரணமாக பல படங்கள் இருந்தாலும் அதில் முத்தாய்ப்பாக இருப்பது பாட்ஷா. ரஜினி நடித்த அந்தப் படத்தில் மார்க் ஆண்டனி என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார் ரகுவரன். ஆண்டனி மார்க் ஆண்டனி என அவர் கூறும்போதே ஒரு திகில் உணர்வு ஏற்படும் அளவுக்கு தனது குரலை பயன்படுத்தியிருப்பார். ரஜினியேக்கூட விழா ஒன்றில் ரகுவரனை பெருமையாக பேசியிருப்பார். அதுமட்டுமின்றி இதுவரை எனக்கு வில்லனாக நடித்தவர்களில் இரண்டு பேர்தான் சிறப்பு. அதில் ஒருவர் ரகுவரன் என கூறியிருந்தார்.

குணச்சித்திர வேடத்திலும் அதகளம் செய்த ரகுவரன்
ரகுவரன் வில்லனாக மட்டுமின்றி குணச்சித்திர வேடத்திலும் கலக்கியவர். முகவரி படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரத்திற்கு மிகச்சிறப்பாக நியாயம் செய்திருப்பார் அவர். அதேபோல் அவர் கடைசியாக நடித்த யாரடி நீ மோகினி படத்திலும் அப்பா வேடத்தில் அதகளம் செய்திருப்பார். தனுஷிடம் அவர் பேசும் மாடுலேஷன், தனுஷிடம் கோபப்படுவது என நடிப்பில் அசுர பாய்ச்சலை செலுத்தியிருப்பார்.

நிம்மதியான வாழ்க்கைனா எது தெரியுமா?
இந்நிலையில் இன்று ரகுவரனின் நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் நிம்மதியான வாழ்க்கை என்றால் என்ன என்பது குறித்து அவர் பேசியிருக்கும் வீடியோ ட்ரெண்டாகியுள்ளது. காஃபி வித் அனுவில் நடிகை சுகன்யாவுடன் கலந்துகொண்ட அவர், "நான் நடிகனானது பெரிய தவறு. சின்ன நிலத்தில் பயிரை விதைத்து. அதை மூட்டையில் சுமந்து விற்றுவிட்டு சின்ன வீட்டில் படுத்து தூங்க வேண்டும். ஆண்டவனே நாளைக்கு மழை வர வேண்டும் என வேண்டிக்கொண்டு கோழிகள், ஆடுகள், நாய்களை வளர்த்து அவைகளுக்கு சாப்பாடு கொடுத்துக்கொண்டிருக்க வேண்டும். அதுதாங்க வாழ்க்கை' என கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவரது எளிமையான வாழ்க்கை குறித்த கனவை சிலாகித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











