Rajini - உங்களைவிட்டு இனி இந்தப் பெயர் போகாது.. ஜெயிலர் நடிகருக்கு நடந்ததை முன்பே கணித்த ரஜினி
சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) பருத்திவீரன் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் சரவணனுக்கு ஃபோன் செய்து இனி ஒரு பெயர் உங்களை விட்டு போகவே போகாது என கூறியிருக்கிறார்.
அமீர் தனது மூன்றாவது படமாக பருத்திவீரன் படத்தை இயக்கினார். தற்போது நடிப்பில் கலக்கிவரும் நடிகர் கார்த்தியின் முதல் படம் பருத்திவீரன். இதில் கார்த்தியுடன் ப்ரியாமணி, சம்பத், சரவணன், பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். முழுக்க முழுக்க கிராமத்து காதல் படமாக பருத்திவீரன் உருவாகியிருந்தது.

தமிழ் திரையுலகை புரட்டிப்போட்ட பருத்திவீரன்: சூர்யாவின் தம்பி அறிமுகமாகிறார் என்ற ஒற்றை எதிர்பார்ப்போடு படம் வெளியானது. சராசரி கிராமத்து படமாகத்தான் இருக்கும் என்று நினைத்தபடி ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படம் பார்க்க சென்றனர். ஆனால் அங்கு அவர்களுக்கு கிடைத்ததோ வேறு அனுபவம். முழுக்க முழுக்க மதுரை, தேனி சுற்றுவட்டாரங்களின் பேக்ட்ராப்போடு உருவாகியிருந்த படத்தை பார்த்தபோது ரசிகர்கள் பருத்திவீரனுக்கு அடிமையாகினர்.
கலக்கிய சரவணன்: கார்த்தி மிகச்சிறந்த நடிப்பு, ப்ரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தாலும் அவர்களுக்கு ஈடாக படத்தில் ஸ்கோர் செய்திருப்பார் சரவணன். அதற்கு முன்னர் பல வருடங்கள் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் பருத்திவீரன் மூலம்தான் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படத்தில் கார்த்திக்கு சித்தப்பாவாக அவர் நடித்திருந்தார். சித்தப்பாவாக இருந்தாலும் கார்த்தியுடன் சேர்ந்து அவர் போட்ட அலப்பறைகள் எல்லாம் வேறு ரகம். அன்றிலிருந்து அவர் சித்தப்பா என்றே பலராலும் அழைக்கப்படுகிறார்.
முன்பே கணித்த ரஜினி: இந்தச் சூழலில் படம் பார்த்த ரஜினிகாந்த் சரவணனிடம் இனி உங்களுக்கு சித்தப்பா என்ற பெயர் போகவே போகாது என கூறியிருக்கும் சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது, பருத்திவீரன் படத்தின் சிறப்பு காட்சியை ரஜினிகாந்த் பார்த்திருக்கிறார். பார்த்து முடித்த பிறகு சூர்யா மற்றும் கார்த்தி உள்ளிட்டோருடன் நீண்ட நேரம் பேசியிருக்கிறார். ரஜினியை பார்ப்பதற்காக காத்திருந்த சரவணனோ சரி லேட் ஆகும் என்று நினைத்து வீட்டுக்கு கிளம்பிவிட்டார்.
சரவணன் வீட்டுக்கு வந்த சில நிமிடங்களிலேயே ரஜினிகாந்த்திடமிருந்து ஃபோன் வந்திருக்கிறது. அப்போது பேசிய ரஜினி, 'ஏன் என்னை பார்க்காம போயிட்டீங்க என கேட்க அதற்கு சரவணனோ இல்லை நீங்கள் சூர்யா மற்றும் கார்த்தியுடன் பேசிக்கொண்டிருந்தீர்கள். லேட் ஆகிவிட்டது அதான் என சொல்லியிருக்கிறார்.

அதை கேட்டுக்கொண்ட ரஜினிகாந்த் பேச்சை படத்தின் பக்கம் திருப்பி இந்த இடங்களில் எல்லாம் மக்கள் உங்களுக்கு கைத்தட்டுவார்கள் என மொத்தம் 13 இடங்களை குறிப்பிட்டு சொன்னாராம். அதனையடுத்து ரஜினி, நான் 16 வயதினிலே என்ற படத்தில் பரட்டை கதாபாத்திரத்தை ஏற்றிருந்தேன். அது ஹிட்டானதும் எங்கு போனாலும் என்னை பரட்டை பரட்டை என்றே அழைத்தார்கள். அதை என்னால் மாற்றவே முடியவில்லை.
அதேபோல்தான் நீங்களும் மாட்டிட்டீங்க சரவணன். இனி நீங்கள் எல்லோராலும் சித்தப்பா என்று அழைக்கப்படுவீர்கள். ஏனா எல்லோரின் வீட்டிலும் ஒரு சித்தப்பா இருப்பாங்க. நீங்கள் அவங்க வீட்டுக்குள்ளேயே போயிட்டீங்க என்றாராம். சரவணன் கடைசியாக ரஜினிகாந்த்துடன் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











