ஷூட்டிங் ஸ்பாட்டில் பெண்களை கடத்த முயற்சி.. காஷ்மீரில் சண்டை போட்ட எம்ஜிஆர்.. நடிகை சொன்ன சீக்ரெட்
சென்னை: தமிழ்நாட்டில் சினிமாவிலும், அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியவர் எம்ஜிஆர். அவர் உயிரிழந்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்னமும் பலருக்கு ரோல் மாடலாக இருக்கிறார். உதவி செய்வது என்றால் முதலில் எம்ஜிஆரின் பெயரைத்தான் பலரும் நினைவுகூர்வார்கள். ஓடி ஓடி உதவி செய்த விஜயகாந்த்தைகூட எம்ஜிஆருடன் தான் ஒப்பிட்டார்கள். அந்த அளவுக்கு எம்ஜிஆரின் தாக்கம் நிறைந்திருக்கிறது. இந்தச் சூழலில் அவர் குறித்து நடிகை லட்சுமி பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒருவர் எம்ஜிஆர். கேரளாவை பூர்வீகமாகக்கொண்ட அவர் இலங்கையில் இருக்கும் கண்டியில் பிறந்தார். அதனையடுத்து தமிழ்நாடு வந்து நாடக கம்பெனியில் இணைந்தார். நாடகங்களில் தொடர்ந்து நடித்து வந்த அவர் சதிலீலாவதி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அவர் ஹீரோவாக அறிமுகமாகும்போது அவருக்கு வயது 20 என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வயதிலேயே பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியதால் இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்தார்.

கருணாநிதியுடன் நட்பு: சதிலீலாவதி படத்தின் ஹிட்டைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த எம்ஜிஆருக்கு கலைஞர் கருணாநிதியுடன் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு ரொம்பவே ஆழமானதும் அழகானதும்கூட. கருணாநிதியின் வசனம், எம்ஜிஆரின் நடிப்பு இரண்டும் சேர்ந்து அவர்களை தொடர்ந்து வாழ்விலும், சினிமாவிலும் பயணிக்க வைத்தது. அதன்படி கலைஞர் கருணாநிதி வசனத்தில் மலைக்கள்ளன், மந்திரிகுமாரி என ஏராளமான படங்களில் நடித்தார். எம். ஜி. ராமச்சந்திரன்.
சிவாஜி போட்டி: எம்ஜிஆர் நடித்த படங்கள் பெரும்பாலானவை மெகா ஹிட்டாகின. அவருக்கு போட்டியாக மறுபக்கம் சிவாஜி கணேசனும் வளர்ந்துகொண்டிருந்தார். எம்ஜிஆர் பயணித்த கமர்ஷியல் பாதையில் வெறும் சண்டை மட்டும் இல்லாமல் ஏழைகளுக்கு உதவுவது, மது, சிகரெட் காட்சிகளில் நடிக்காமல் இருந்தது என அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களின் வழி மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துகொண்டார். இதன் காரணமாக அவருக்கான செல்வாக்கு அதிகம் வளர்ந்தது.
முதலமைச்சர்: சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தபோதே திமுகவில் இணைந்து எம்.எல்.ஏவான அவர்; கருணாநிதியுடன் ஏற்பட்ட பிணக்கால் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக என்ற கட்சியை தொடங்கினார். பிறகு தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் மாறினார். எம்ஜிஆர் என்றால் உதவும் குணம் ஒன்று என்றால் தைரியம் இன்னொரு குணம். இந்தச் சூழலில் அவர் குறித்து நடிகை லட்சுமி பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
லட்சுமியின் பேச்சு: அவர் பேசுகையில், "எம்ஜிஆருடன் இதய வீணை படத்தில் நடித்தேன். அந்தப் படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடந்தது. அப்போது அவர் பைனாகுலரில் எதையோ பார்த்துக்கொண்டிருந்தார். நான் அவரின் பக்கத்தில் சென்று என்ன சார் அங்கேயே பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன். அவர் சைகையில் அமைதியாக இரு என்று கூறினார். மேலும் என்னிடம் எல்லோரும் அங்கே போய் அமருங்கள். ஸ்நாக்ஸ் வருகிறது சாப்பிடுங்கள் என்று கூறிவிட்டார்.
பேக்கப்: திடீரென ஷூட்டிங் இன்று வேண்டாம் பேக்கப் செய்யுங்கள். பொண்ணுங்களை எல்லாம் பத்திரமாக அனுப்புங்கள் என்று கூறினார். நாங்கள் எல்லோரும் வேனில் ஏறி அமர்ந்துகொண்டோம். அந்த சமயத்தில் ஒரு கும்பல் பெண்களை கடத்துவதற்காக காரில் வந்தது. ஸ்டண்ட் யூனியன் ஆட்கள் எல்லாம் அவர்களுடன் சண்டை போட்டார்கள். அவர்களுடன் சேர்ந்து எம்ஜிஆரும் களத்தில் இறங்கி சண்டை போட்டார். அத்தனை பேரை அவர் அன்று அடித்ததை நான் என் கண்ணால் பார்த்தேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











