ஹீரோவும், இயக்குநரும் அசிங்கப்படுத்தினார்கள்..விஜயகாந்த் பயம் காண்பித்தார்..நினைவுகள் பகிர்ந்த நடிகை
சென்னை: கேப்டன், புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமா ஹீரோக்கள் வரிசையில் எப்போதும் இருக்கக்கூடியவர் அவர். அரசியலிலும் ஒரு கலக்கு கலக்கிய அவர் கடந்த 2023ஆம் ஆண்டு உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் விஜயகாந்த் குறித்து நடிகை பிரகதி சில விஷயங்களை பேசியிருக்கிறார்
விஜயகாந்த் என்றாலே பெரிய அறிமுகம் தேவையில்லை. 30 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் தனக்கென தனி இடம் ஒன்றை அவர் தக்க வைத்திருந்தார். அவர் சினிமாவுக்குள் அறிமுகமான நேரத்தில் ரஜினியும், கமலும் உச்சக்கட்ட பீக்கில் இருந்தார்கள். அவர்களோடு போட்டிப்போடு விஜயகாந்த்தால் வெல்லவே முடியாது; இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவார் என்று பலரும் கிண்டலடித்தார்கள். ஆனால் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, திறமை, உழைப்பால் இவரும் ஹிட் கொடுக்க ஆரம்பித்தார்.
கிராமங்களில் ஃபுல் ஃபார்மில் விஜி: குறிப்பாக தமிழ்நாட்டு கிராமங்களில் ரஜினி, கமலைவிடவும் விஜயகாந்த்துக்குதான் மவுசு அதிகம். மேலும் அவர்களைவிடவும் இவருக்குதான் ரசிகர் மன்றங்களும் அதிகமாக இருந்தன.அந்த அளவுக்கு அவர்களுக்கு இவர் டஃப் கொடுத்தார். கருப்பான உருவம் என்று எவரெல்லாம் அவரை கிண்டல் செய்தார்களோ அவரெல்லாம் பிற்காலத்தில் அவரை வைத்து படம் எடுத்துக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலில் விஜயகாந்த்: சினிமாவில் தனக்கு இருக்கும் செல்வாக்கையும் மக்களிடம் தனக்கு இருக்கும் அபிமானத்தையும் வைத்து கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு பேரும் பயங்கரமாக ஆக்டிவ் அரசியலில் இருந்தபோது தைரியமாக கட்சி ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தவர். அவரது சில செயல்பாடுகள் அரசியல் களத்தில் அவரை அசைத்து பார்த்துவிட்டது. பிறகு உடல்நலம் குன்றி அரசியலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பித்தார் அவர்.

உயிரிழந்த விஜயகாந்த்: உடல்நலம் சரியில்லாமல் போனதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். அதற்கு பிறகும் அவ்வப்போது அவருக்கு உடல்நிலையில் பிரச்னைகள் ஏற்பட்டன. சூழல் இப்படி இருக்க கடந்த 2023ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரை விமர்சித்தவர்கள் இறந்த அன்று சோகத்துடன் விஜயகாந்த் குறித்து பேசியதை அனைவரும் பார்த்து நெகிழ்ந்தார்கள்.
நடிகை பேட்டி: இந்நிலையில் நடிகை பிரகதி சமீபத்தில் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில் அவர், "நான் பாக்யராஜுடன்தான் முதல் படத்தில் நடித்தேன். அவர் திட்டினாலும் சத்தமில்லாமல்தான் திட்டுவார். அடுத்ததாக விஜயகாந்த்துடன் நடித்தேன். அவர் படத்தில் நடிக்கும்போதே என்னிடம் எனது வீட்டில், 'அவர் பெரிய ஹீரோ. அமைதியாக இருக்க வேண்டும். சிரிக்கக்கூடாது' என்றெல்லாம் சொல்லித்தான் அனுப்பினார்கள்.
விஜயகாந்த் பயமுறுத்துவார்: அதன்படி நானும் அமைதியாகத்தான் இருந்தேன். ஆனால் அவர் வந்து என்னிடம் வந்து பயமுறுத்திக்கொண்டே இருப்பார். சாப்பிட்டியா என்ன சாப்பிட்ட என்று கறாராக கேட்பார். நான் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாகவே இருப்பேன். அடுத்ததாக இன்னொரு ஹீரோவுடன் ஒரு படத்தில் நடித்தேன். அதில் என்னை ரொம்பவே அசிங்கப்படுத்திவிட்டார்கள். அதிலிருந்துதான் தமிழ் சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டேன். அப்படத்தை ஹீரோதான் தயாரித்திருந்தார். எனவே இவரும், இயக்குநரும் சேர்ந்து பப்ளிக்காகவே அசிங்கப்படுத்தினார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











