Ajith: ”ரெண்டே நிமிஷத்துல அஜித் ஓக்கே சொன்னார்.. அதுக்கு விவேக் தான் காரணம்..” நெகிழ்ந்த இயக்குநர்!
சென்னை: கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜித், இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
இவரது நடிப்பில் மிகப் பெரிய வெற்றிப் பெற்ற படங்களில் ஒன்று காதல் மன்னன்.
சரண் இயக்கிய காதல் மன்னன் திரைப்படம் 1998ம் ஆண்டு வெளியானது.
இந்தப் படத்தில் நடிக்க அஜித் இரண்டே நிமிடங்களில் ஓக்கே சொல்லிவிட்டதாகவும் அதற்கான காரணம் குறித்து இயக்குநர் சரண் பேசியுள்ளார்.

காதல் மன்னன் உருவான கதை: எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் திரையுலகில் அறிமுகமானவர் அஜித். ஆரம்ப காலங்களில் ஏராளமான தடைகளை கடந்து கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக உருவெடுத்தார். தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அஜித் நடித்த படங்களில் அவரது ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் காதல் மன்னன் கண்டிப்பாக இருக்கும்.
சரண் இயக்கிய இந்தப் படம் 1998ம் ஆண்டு ரிலீஸானது. காதல் மன்னன் தான் இயக்குநர் சரணின் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கே பாலச்சந்தரிடம் பல படங்களில் உதவி இயக்குநராக வேலைப் பார்த்துள்ளார் சரண். அப்போது அவருக்கும் மறைந்த நடிகர் விவேக்கிற்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது. விவேக்கும் கே பாலச்சந்தரின் பயிற்சிப் பட்டறையில் இருந்து சினிமாவில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், காதல் மன்னன் படத்தின் கதை எழுதியதும், அதனை விவேக்கிடம் சொன்ன சரண், அஜித்தை சந்திக்க ஏற்பாடு செய்ய முடியுமா எனக் கேட்டுள்ளார். அப்போது அஜித்தும் விவேக்கும் மைனர் மாப்பிள்ளை என்ற படத்தில் ஒன்றாக நடித்துள்ளனர். இதனால் சரணை அழைத்துக்கொண்டு அஜித்தின் வீட்டிற்குச் சென்றுள்ளார் விவேக். அன்று அஜித்தின் பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாடியில் தூங்கிக் கொண்டிருந்த அஜித், விவேக் வந்திருப்பதை அறிந்து கீழே வந்துள்ளார். அப்போது சரணை கேபி சாரின் அசிஸ்டெண்ட் என அறிமுகம் செய்து வைத்த விவேக், உங்களை வைத்து படம் இயக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். விவேக் சொன்ன மறு நிமிடமே கதை கேட்காமல் காதல் மன்னன் படத்துக்கு ஓக்கே சொன்னாராம் அஜித்.

இதுகுறித்து விவேக்குடன் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சரண் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். எல்லா இயக்குநர்களுக்கும் முதல் படம் ரொம்பவே முக்கியமானது. காதல் மன்னனில் அஜித் சார் கமிட்டாக விவேக் தான் காரணம். இவருடன் சென்றதால் தான் அஜித் இரண்டே நிமிடங்களில் ஓக்கே சொன்னதாக சரண் கூறியுள்ளார். காதல் மன்னன் படத்தில் அஜித்துடன் விவேக்கும் நடித்திருந்தார்.
காதல் மன்னன் வெற்றிக்குப் பின்னர், அஜித் - சரண் கூட்டணியில் அமர்க்களம், அட்டகாசம் படங்களும் வெளியாகின. இதில் அமர்க்களம் படப்பிடிப்பில் தான் அஜித் - ஷாலினி இருவரும் காதலிக்கத் தொடங்கினர். பின்னர் இருவரும் திருமணமும் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











