Ajith - பயங்கரமாய் விமர்சித்த பத்திரிகையாளர்.. அஜித் செய்தது என்ன தெரியுமா?.. ஏகே ரசிகர்கள் நெகிழ்ச்சி
சென்னை: நடிகர் கடைசியாக துணிவு படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதனையடுத்து தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார் அஜித்குமார். படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் மும்முரமாக நடந்துவருகிறது. இந்த சூழலில் அஜித் பற்றி இதுவரை பலருக்கும் தெரியாத தகவல் பற்றி இதில் பார்க்கலாம்.
கோலிவுட்டின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவர் அஜித்குமார். சினிமா பின்னணி இல்லாமல் சினிமாவுக்குள் வந்த அவர் இதுவரை 61 படங்களில் நடித்திருக்கிறார். அவற்றில் வெற்றியும், தோல்வியும் சரி பாதியாக இருப்பவை. இருப்பினும் தன்னம்பிக்கையை விடாத அவர் தொடர்ந்து நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவரது நடிப்புக்கு மட்டுமின்றி அவரின் விடாமுயற்சிக்கும் பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

விடாமுயற்சி: அஜித்குமார் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். படத்தின் பெயர் வைக்கப்பட்டதோடு சரி அதற்கு பிறகு படத்திலிருந்து வேறு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. பொங்கல் பண்டிகையையொட்டி ரசிகர்கள் விடாமுயற்சி அப்டேட்டை எதிர்பார்த்திருந்தனர். ஆனால் யானை பசிக்கு சோள பொறி போன்று விடாமுயற்சியின் ஓடிடி உரிமை குறித்த அப்டேட்டை மட்டும் வெளியிட்டுவிட்டு அமைதியாகிக்கொண்டது லைகா நிறுவனம்.
நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆக்ஷன் கதைகளை இயக்குவதில் மகிழ் திருமேனி கில்லாடி என்பதால் இதில் என்ன மாதிரியான ஆக்ஷனை காட்சிப்படுத்தியிருக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள். படத்தில் இன்னும் 40 சதவீதம் மட்டுமே ஷூட்டிங் இருப்பதாக கூறப்படுகிறது. அநேகமாக படமானது ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் பாலிசி: அடுத்ததாக அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் அதற்கான பூஜை போடப்பட்டுவிட்டதாகவும் சமீபத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. இப்படி அஜித்தை பற்றியும் அவரது படங்கள் பற்றியும் எவ்வளவுதான் பரபரப்பாக, திடீர் திடீரென தகவல்கள் வெளியானாலும் அஜித்தின் பாலிசி என்பது எப்போதும் அமைதி காத்திருப்பதுதான். பத்திரிகையாளர்களை சந்திப்பது, படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் கலந்துகொள்வது என்பதை அறவே விரும்பாதவர்.
பத்திரிகையாளருக்கு செய்த உதவி: அதேபோல் தன்னை புகழ்பவர்களையும் சரி விமர்சிப்பவர்களையும் சரி ஒரே தராசில்தான் வைப்பார் என்று அவருடன் நெருங்கி பழகியவர்கள் அடிக்கடி கூறுவார்கள். அதேபோல் தான் செய்யும் உதவியையும் வெளியில் யாருக்கும் தெரியாத மாதிரிதான் பார்த்துக்கொள்வார் என்றும் சொல்வார்கள். நடிகர்கள் ராதாரவி, பொன்னம்பலம் உள்ளிட்டோர்கூட அஜித் ஏராளமானோருக்கு உதவி செய்திருக்கிறார் என்று சொல்லியதுண்டு. அதேசமயம் அஜித் உதவி செய்வது எல்லாம் ஆளை வைத்து விளம்பரம் செய்கிறார் என்றும் ஒருதரப்பினர் விமர்சிப்பதுண்டு.
இந்த சூழலில் தன்னை விமர்சித்த பத்திரிகையாளருக்கு அஜித் செய்த உதவி குறித்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது, பத்திரிகையாளர் ஒருவர் அஜித்தை கடுமையாக விமர்சித்து எழுதிக்கொண்டிருந்தாராம். அந்தப் பத்திரிகையாளருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாராம். அவருடைய அறுவை சிகிச்சைக்காக 2.5 லட்சம் ரூபாய் தேவைப்பட்டதாம். ஆனால் அந்தப் பத்திரிகையாளரிடம் பணம் இல்லையாம். அந்த நிலை அஜித்துக்கு தெரியவர உடனடியாக அந்தப் பணத்தை மருத்துவமனையில் கட்டி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தாராம். இதனை கேள்விப்பட்ட ஏகே ரசிகர்கள் தன்னை விமர்சித்தவருக்கு அஜித் செய்த உதவியை பாருங்கள் என நெகிழ்ந்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











