பெரிய விபத்து.. படங்கள் சரியாக போகவில்லை.. அந்த முடிவு எடுத்தேன்.. மனம் திறந்த அஜித்குமார்
சென்னை: அஜித்குமார் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இவற்றில் பிப்ரவரி 6ஆம் தேதி விடாமுயற்சியும், ஏப்ரல் 10ஆம் தேதி குட் பேட் அக்லியும் வெளியாகவிருக்கின்றன. இதற்கிடையே கார் ரேஸில் ஆர்வம் காட்டும் அவர் சமீபத்தில் துபாயில் நடந்த கார் பந்தயத்தில் தனது அணியுடன் களமிறங்கி மூன்றாவது இடத்தை பிடித்தார். இந்தச் சூழலில் கார் ரேஸ் குறித்து ஏகே அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி ஆறாம் தேதியும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதியும் ரிலீஸாகவிருக்கின்றன. நீண்ட காலம் கழித்து ஒரே வருடத்தில் அஜித்தின் இரண்டு படங்களும் ரிலீஸாகவிருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். கடைசியாக அவர் நடித்த துணிவு திரைப்படம் எப்படி சூப்பர் ஹிட்டடித்ததோ அதேபோல் இந்த இரண்டு படங்களும் ஹிட்டாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும் அவர்கள் இருக்கிறார்கள்.

கார் ரேஸ்: இதற்கிடையே கார் ரேஸ் மீது அஜித்துக்கு அதீத ஆர்வம் இருப்பது அனைவருமே அறிந்தது. சமீபத்தில் துபாயில் நடந்த கார் பந்தயத்தில் அவரது அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. மேலும் கார் ரேஸ் நடக்கும் காலகட்டத்தில் படங்களில் நடிக்கமாட்டேன் என்றும் அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் அவர் கார் ரேஸ் குறித்தும், தனது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்கள் குறித்தும் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
அஜித்தின் பேட்டி: அவர் அளித்த பழைய பேட்டி ஒன்றில், "அமராவதி திரைப்படம் வெளியான பிறகு என்னை பார்த்த, இந்தப் பையன் நன்றாக இருக்கிறான். நல்ல எதிர்காலம் சினிமாவில் இருக்கிறது என்று திரைத்துறையில் பேச்சு எழுந்தது. ஆனால் எனக்கு அந்த சமயத்தில் ஒரு பெரிய விபத்து நடந்து உடல்நலம் சரியில்லாமல் போனது. எனவே வாய்ப்புகளும் வரவில்லை. வாய்ப்புகள் வந்தபோது அதனை சரியாக பயன்படுத்தவும் முடியவில்லை.
மோட்டிவேஷனே இல்லை: ஒருகட்டத்தில் எனக்கு மோட்டிவேஷன் இல்லாமல் போனது. அப்போது நான் நடித்த படங்களும் வெற்றியை பெறவில்லை. வாழ்க்கை ரொம்பவே கஷ்ட காலத்தை நோக்கித்தான் சென்றுகொண்டிருந்தது. எங்கேயாவது சென்று மோட்டிவேஷனை பெற வேண்டும் என்று நினைத்தேன். அதனால் கார் ரேஸிங்கிற்குள் மீண்டும் வந்தேன். நான் கார் ஓட்டும்போது யாருமே அதை பற்றி கேட்கவில்லை. ஆனால் நான் விட்ட பிறகு அதை பற்றி தொடர்ந்து கேட்டார்கள். அது எனக்கு கஷ்டமாக இருந்தது.
ரசிகர்கள் காரணம்: நான் ரேஸிங்கை விட்டு ஒதுங்கியதற்கு ரசிகர்கள்தான் காரணம். அவர்கள் அந்த சமயத்தில் ரொம்பவே வருத்தப்பட்டார்கள். ஏனெனில் என்னுடைய நடிப்பில் வெளியான படங்கள் தோல்வி படங்களாக அமைந்தன.அப்போதுதான் சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்த ஆரம்பித்தேன்" என்றார். முன்னதாக சில நாட்களுக்கு முன்பு அஜித்குமாருக்கு ஒன்றிய பத்ம பூஷன் விருது வழங்கியதும்; அதற்கு நெகிழ்ச்சியுடன் தனது குடும்பத்தினர், ரசிகர்களுக்கு அஜித் நன்றி தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











