ஏ.ஆர்.ரஹ்மான் யாருனே தெரியாது.. இஷ்டத்துக்கு பேசிய பிரபல ஹீரோ.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
ஹைதராபாத்: ஏ.ஆர். ரஹ்மான் உலகளவில் புகழ் பெற்றவர். இரண்டு ஆஸ்கர்கள், கோல்டன் க்ளோப் விருதுகள் என பல விருதுகளை அள்ளியவர். அவரை தெரியாதவர்களே இந்த உலகத்தில் பெரும்பாலும் இருக்க முடியாது என்கிற நிலைதான் இருக்கிறது. மேலும் அவரை நேரில் ஒருமுறையேனும் பார்த்துவிட மாட்டோமா என்றும் பலர் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் பிரபல ஹீரோ ஒருவர் ரஹ்மானை யார் என்றே தெரியாது என பேசிய வீடியோ திடீரென ட்ரெண்டாகியிருக்கும் நிலையில் அவரை நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் சினிமா, நாடகம் ஆகிய கலைத் துறையிலிருந்து அரசியலுக்கு வந்து ஆட்சி செய்தவர்களாக அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் இருக்கின்றனர். விஜய்யும் இப்போது அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கிறார் அதேபோல் ஆந்திராவில் சினிமா வழியில் வந்து ஆட்சியை பிடித்தவர் என்.டி.ராமாராவ். என்டிஆர் என அழைக்கப்படும் ராமாராவ் தமிழில் கர்ணன் (சிவாஜி நடித்த கர்ணன்) படத்திலும் நடித்திருக்கிறார். அவருக்கு மொத்தம் இருக்கும் பத்து பிள்ளைகளில் ஆறாவதாக பிறந்தவர் பாலகிருஷ்ணா.
குழந்தை நட்சத்திரம் பாலகிருஷ்ணா: என்டிஆரின் ஆறாவது மகனான பாலகிருஷ்ணாவும் தனது தந்தையின் வழியில் பயணித்து சினிமாவில் நடிகரானார். என்டிஆர் இயக்கிய தத்தம்மா கலா என்ற படத்தின் மூலம் 1974ஆம் ஆண்டு மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் பாலகிருஷ்ணா. அதன் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் 1983ஆம் ஆண்டுவரை கதாநாயகனாக அறிமுகமாகமால் இருந்தார்.

ஹீரோவாக பாலகிருஷ்ணா: இந்தச் சூழலில் சந்தானபாரதி - பி.வாசு இணைந்து தெலுங்கில் இயக்கிய சாகசமே ஜீவிதம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் பாலகிருஷ்ணா. அந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். சாகசமே ஜீவிதம் படம் பெரும் வரவேற்பைப் பெற்றதால் அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ந்து கதாநாயகனாக அறிமுகமானார். அந்தவகையில் 1985ஆம் ஆண்டு மட்டும் அவர் நடிப்பில் மொத்தம் ஆறு படங்கள் வெளியாகின.
தொடர்ந்து ஹீரோதான்: அவர் நடித்த படங்கள் வெற்றி தோல்வி என மாறி மாறி ரிசல்ட்டுகளை கொடுத்தன. தோல்வி படங்கள் வந்தாலும் பாலகிருஷ்ணாவுக்கென்று ரசிகர்கள் கூட்டம் பெருகியது. இதன் காரணமாக நூறு படங்களுக்கும் மேல் ஹீரோவாக நடித்துவிட்டார் பாலகிருஷ்ணா. இதற்கிடையே அரசியலில் என்ட்ரி ஆகி தெலுங்கு தேசம் கட்சியின் எம்பியாகவும் இருந்தார் அவர். அப்போதும் அவர் சில சர்ச்சைகளை சந்தித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைகளின் நாயகன்: கதாநாயகனாக அவர் பிரபலமடைந்த அளவுக்கு சர்ச்சைகளில் சிக்கியும் பிரபலம் அடைந்தார். ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னுடைய காலணியை அணிவிக்க சொல்லி உதவியாளர் ஒருவரை அடித்தது, தன்னுடன் செல்ஃபி எடுக்க வருபவர்களின் மொபைல் ஃபோன்களை தட்டிவிடுவது, பட விழா ஒன்றில் தொடர்ந்து அழைப்புகள் வந்ததால் தன்னுடைய மொபைல் ஃபோனை அசிஸ்டெண்ட்டிடம் மேடையில் இருந்தபடி தூக்கி எறிந்தது என அவரது ஒவ்வொரு செயல்பாடும் சர்ச்சைகளையே சந்திக்கும்.
வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்: அவரது நடிப்பில் கடைசியாக டாக்கு மகாராஜ் திரைப்படம் வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து பாலகிருஷ்ணா பேசியிருக்கும் வீடியோ ஒன்று திடீரென்று ட்ரெண்டாகியிருக்கிறது. அந்த வீடியோவில் அவர், "ஏ.ஆர்.ரஹ்மான் யார் என்றே எனக்கு தெரியாது. அவர் பத்து வருடங்களுக்கு ஒரு ஹிட்டை கொடுத்துவிட்டு ஆஸ்கர் விருதினை பெற்றுக்கொள்கிறார்" என்றிருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பாலகிருஷ்ணாவுக்கு ஓவர் குசும்புதான். உலகம் முழுக்க அறியப்பட்ட ஒருவரை தெரியாது என்று சொன்னால் இவருக்கு ஏதோ மன பிரச்னை இருக்கிறது அல்லது இவர்தான் வேறு உலகத்தில் இருக்கிறார் என்று கிண்டலடித்து வறுத்தெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











