Bhagyaraj - உதவி இயக்குநர் சொன்ன ஒத்த வார்த்தை..மொத்த கதையையும் தூக்கிப்போட்ட பாக்யராஜ்
சென்னை: Bhagyaraj (பாக்யராஜ்) உதவி இயக்குநர் சொன்ன ஒரே ஒரு வார்த்தையால் பாக்யராஜ் மொத்த கதையையும் தூக்கி போட்டிருக்கிறார்.
இந்திய திரையுலகில் திரைக்கதை மன்னன் என்று புகழப்படுபவர் பாக்யராஜ். அவரது திரைப்படங்களை பார்க்கையில் ஒரு காட்சியில்கூட சலிப்பு தட்டாமல் மொத்த ரசிகர்களும் அந்த கதைக்குள் சென்றுவிடும் மாயத்தை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் விடாமல் செய்துகொண்டே வந்தவர் அவர். அதனால் அவருக்கென்று இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர்.

சலிக்கவே சலிக்காது: பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து அவரது பல படங்களுக்கு தூணாக இருந்திருக்கிறார் பாக்யராஜ். பாரதிராஜா இயக்கி சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் உள்ளிட்ட படங்களுக்கு கதையையும் எழுதியிருக்கிறார் அவர். இதனையடுத்து சுவரில்லாத சித்திரங்கள் படத்த்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே தனது கதையாலும் திரைக்கதையாலும் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார்.
வரிசையாக ஹிட்டுகள்: சுவரில்லாத சித்திரங்கள் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய ஒரு கை ஒரு ஓசை, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும்வரை காத்திரு, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள், சுந்தரகாண்டம், ராசுக்குட்டி என அவர் இயக்கிய அத்தனை படங்களுமே ஹிட்டடித்தன. அவரது ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் ஏ செண்டர், பி செண்டர், சி செண்டர் என அத்தனை செண்டர்களிலும் பாக்யராஜுக்கென்று ரசிகர்கள் இருந்தனர்.
ராசுக்குட்டி: பாக்யராஜ் இயக்கிய மெகா ஹிட் படங்களில் ஒன்றுதான் ராசுக்குட்டி. தத்து பிள்ளையாக எடுத்து வளர்க்கப்படும் பாக்யராஜுக்கு கடைசியில் அந்த உண்மை தெரிய வருவது என மிக எளிதான நாட்டை எடுத்துக்கொண்டு தனது திரைக்கதையாலும் மேக்கிங்காலும் அதகளம் செய்திருப்பார். தற்போது அந்தப் படத்தின் கதை உருவானது பற்றி புதிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
அம்மா வந்தாச்சு: அதாவது பி.வாசு இயக்கத்தில் அம்மா வந்தாச்சு படத்தில் நடித்திருந்திருக்கிறார் பாக்யராஜ். ஷூட்டிங் குன்னூரில் நடந்திருக்கிறது. அப்போது இரவு படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்களை அழைத்து உங்களிடம் ஒரு கதை சொல்லலாமா என கேட்டிருக்கிறார். அவர்களும் ஆர்வமாக சரி சார் என்று சொல்லி ஹோட்டல் ரெஸ்டாரண்ட்டுக்கு சென்றிருக்கிறார்கள். அப்போது பாக்யராஜ் சிக்கன் சூப் ஆர்டர் செய்திருக்கிறார்.
அதன் பிறகு நள்ளிரவு 2 மணிக்கு கதை சொல்ல ஆரம்பித்து அதிகாலை 4 மணிக்கு முடித்திருக்கிறார். கதையை சொல்லி முடித்ததும் உதவி இயக்குநர்களில் ஒருவரான நந்தகுமார் இல்லை சார் இந்தக் கதை நன்றாக இல்லை என்று ஓபனாக சொல்லிவிட்டாராம். ஏன் என்று பாக்யராஜ் கேட்க உதவி இயக்குநரும் தனக்கு மனதில் பட்ட காரணங்களை சொல்லியிருக்கிறார். சரி என்று கிளம்பிவிட்டாராம் பாக்யராஜ். மறுநாள் வந்த கலைமணி யோவ் நந்து என்னைய்யா சொல்லி வெச்ச பாக்யராஜிடம். அந்தக் கதை ஷூட்டிங்கிற்கு கிளம்புவதற்கு ரெடியா இருந்த கதை என்று கூறியிருக்கிறார்.
பிறகு அம்மா வந்தாச்சு படத்தின் ஷூட்டிங் முடிந்து சென்னைக்கு திரும்பியவுடன்; தான் சொன்ன கதை பிடிக்கவில்லை என்று கூறிய உதவி இயக்குநரை மீண்டும் அழைத்து இப்போது படித்து பாருங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதாவது ஏற்கனவே சொன்ன கதையில் இருந்த ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்துக்கொண்டு வேறு கதையை எழுதியிருந்தாராம். படித்து பார்த்துவிட்டு பாக்யராஜிடம் நந்தகுமார், சார் இது பிரமாதமா இருக்கு சார் என சொல்லிவிட்டு சார் நான் அன்னைக்கு ஏதோ சொல்லிட்டேன் என நந்தகுமார் சொல்ல;
இல்லை நந்து உன் ஒரு ஆளுக்கு பிடிக்கலனா உன்ன மாதிரி ஒரு லட்சம் பேருக்கு பிடிக்காமல் போகும் என்று கூறிவிட்டு ஷூட்டிங் கிளம்பியிருக்கிறார். அந்தப் படம்தான் மெகா ஹிட்டாகிய ராசுக்குட்டி திரைப்படம். அந்த உதவி இயக்குநர்தான் பின்னாளில் விஜயகாந்த்தை வைத்து தென்னவன் படத்தை இயக்கிய நந்தகுமார்.


Click it and Unblock the Notifications











