சொதப்பிய ரேவதி.. கன்னத்தில் பளார் விட்ட பாரதிராஜா.. அடேங்கப்பா சரியான கோபக்காரர்போல
சென்னை: கோலிவுட் வரலாற்றில் தவிர்க்கவே முடியாத இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. அவர் இயக்கிய ஒவ்வொரு படமும் இன்றுவரை க்ளாசிக்காக கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. பலர் சினிமாவுக்கு வருவதற்கு ரோல் மாடலாக இருந்தவர் பாரதிராஜா. கிராமத்திலிருந்து ஒருவர் வந்து சினிமாவில் வெல்ல முடிய முடியும் என்ற நம்பிக்கையை பாரதிராஜாதான் பலமாக விதைத்தார். இந்தச் சூழலில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் ரேவதியை அறைந்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.
16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா செட்டுக்குள் இருந்த தமிழ் சினிமாவை அவுட் டோருக்கு அழைத்து சென்ற பெருமைக்கு சொந்தக்காரர். அவர் படம் இயக்க வந்த பிறகுதான் கிராமங்களிலிருந்து பலர் சென்னைக்கு திரைப்பட கனவோடு தைரியமாக படையெடுக்க ஆரம்பித்தனர். அதேபோல் அவரிடம் உதவி இயக்குநராக இருந்த பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா உள்ளிட்டோர் இந்திய அளவில் பிரபலமான இயக்குநர்களாகவும், நடிகர்களாகவும் திகழ்ந்தவர்கள்.

விதை விதைத்த பாரதி: சினிமா என்றால் செட்தான் என இருந்த விதியை உடைத்து கிராமத்தின் வரப்புகளுக்கு கூட்டி சென்றவர். பாரதிராஜாவின் கண்கள் ஷாட் சப்பாணியை ஹீரோவாக்கிய பிறகுதான் கிராமங்களின் கண் சினிமா மீது நிலைக்குத்தி நின்றது. அவரது ஒவ்வொரு படமும் மேல்தட்டு மனிதர்களின் கண்களிலிருந்து மறைந்துபோன கிராமத்து மனிதர்களையும், அவர்களின் குணாதிசயங்களையும் காட்சிப்படுத்தின.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் தனி மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தை அழிப்போம் என்றார் பாரதியார். ஒரு கிராமத்தானுக்கு கலை செல்லவில்லை என்றால் கலையை அழித்திடுவோம் என்ற இறுமாப்போடு சினிமாவுக்குள் வந்தவர் பாரதிராஜா. அவரது படம் ஆகட்டும், சீரியல் ஆகட்டும் அத்தனையும் அதைத்தான் உணர்த்தின.
பாரதிராஜா இயக்கிய கடைசி படம்: பாரதிராஜா 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியவர். அவரது ஒவ்வொரு படமும் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக திகழ்பவை. அவர் கடைசியாக 2020ஆம் ஆண்டு ஓம் (மீண்டும் ஒரு மரியாதை) என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு படங்கள் எதுவும் இயக்காமல் நடிகராக பல படங்களில் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளிவருகிறார். இதற்கிடையே கடைசியாக வெளியான மாடர்ன் லவ் சென்னை என்ற ஆந்தாலஜியில் பறவை கூட்டில் வாழும் மான்கள் கதையை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடைசியாக கள்வன் படத்திலும் நடித்திருந்தார்.
பாரதிராஜாவின் அறிமுகங்கள்: இயக்குநர் பாரதிராஜா, ராதா, அம்பிகா, ராதிகா, ரேவதி, ப்ரியாமணி என பல நடிகைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர் அறிமுகப்படுத்திய நடிகைகள் அனைவரும் வெறும் அழகை மட்டும் கொண்டிருக்காமல் தங்களது திறமையின் துணையோடு கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகைகளாக வலம் வந்தனர். கோலிவுட் மட்டுமின்றி பிற மொழிகளிலும் அவர்கள் தங்களது ஆளுமைகளை நிரூபித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அறைவிட்ட பாரதிராஜா: இந்தச் சூழலில் பாரதிராஜா ரேவதியை அறைந்த சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது மண்வாசனை படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் ரேவதி கத்தி பேசுவதுபோல் காட்சியாம். ஆக்ஷன் என்று பாரதிராஜா சொன்னதும் ரேவதி கத்தி பேசவே இல்லையாம். பல முறை சொன்ன பாரதிராஜா ஒருகட்டத்தில் பொறுமையிழந்து ரேவதியின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறைவிட்டாராம். அந்த அறையை வாங்கிய பிறகு பாரதிராஜா சொன்ன மாதிரி ரேவதி கத்தி பேசி டேக்கை ஓகே வாங்கினாராம். இதனை ரேவதியே ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











